சற்று முன்
‘காந்தி டாக்ஸ்’ விமர்சனம்
Directed by : Kishor Pandurang Belekar
Casting : Vijay Sethupathi, Arvind Swami, Aditi Rao Hydari, Siddharth Jadhav
Music :A.R. Rahman
Produced by : Zee Studios, Kyoorius, Pincmoon & Moviemill Entertainment - Rajesh Kejriwal, Gurpal Sachar, Umesh Kumar Bansal, Meerra Chopraa, Kishor P Belekar
PRO : AIM
Review :
"காந்தி டாக்ஸ்" கிஷோர் பாண்டுரக் பெலகர் இயக்கத்தில் ஜீ ஸ்டுடியோஸ், கியூரியஸ், பிங்க்மூன் & மூவிமெயில் எண்டர்டெயின்மெண்ட் – ராஜேஷ் கெஜ்ரிவால், குர்பால் சச்சர், உமேஷ் குமார் பன்சால், மீரா சோப்ரா, கிஷோர் பி.பெலகர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். இந்த படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதரி, சித்தார்த் ஜாதவ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மும்பை நகரத்தை பின்னணியாகக் கொண்டு நகரும் இந்த படம், யார் பணக்காரர் யார் ஏழை என்பதை மறைக்காமல் காட்டுகிறது. உயரமான கட்டிடங்களுக்கும், நடைபாதை வாழ்க்கைக்கும் இடையிலான வேறுபாடே கதையின் முதல் தாக்கம். அடுத்த வேளை உணவிற்கே போராடும் ஏழையாக விஜய் சேதுபதியும், எல்லாமே இருந்தும் இன்னும் அதிகத்தை சேர்க்க நினைக்கும் பெரும் பணக்காரராக அரவிந்த் சாமியும் கதையின் இரண்டு முனைகள்.
இவர்கள் இருவரையும் இணைப்பது பணம் தான். மற்றவர்கள் வாங்கும் லஞ்சங்கள் ரூ.100, ரூ.2000 நோட்டுகளாக கைமாறும் போது, அந்த நோட்டுகளில் சிரித்தபடி இருக்கும் காந்தியின் முகம் அமைதியான சாட்சியாக நிற்கிறது. மனிதர்கள் பேசாவிட்டாலும், இங்கே எப்போதும் பேசுவது பணமே என்பதை படம் தெளிவாக சொல்கிறது.
வறுமையின் கொடுமைகளையும், தன் இயலாமையால் மனதில் உருவாகும் வேதனையையும் மிக நுணுக்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய் சேதுபதி. வசனங்களே இல்லாத சூழலிலும், அவரது கண்கள், உடல் மொழி, சிறு அசைவுகள் அனைத்தும் அந்த கதாபாத்திரத்தின் வலியை தெளிவாக பேசுகிறது. வழக்கம் போல எந்த மிகைப்படுத்தலும் இல்லாத அவரது இயல்பான நடிப்பு, கதாபாத்திரத்திற்கு பெரும் பலமாக மாறி, பார்வையாளர்களை எளிதில் கவர்ந்துவிடுகிறார்.
மிகப்பெரும் பணக்காரராக இருந்தாலும், அனைத்தையும் இழந்து பிரச்சனைகளில் சிக்கி போராடும் தொழிலதிபர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அரவிந்த் சாமி, அமைதியான ஆனால் வலுவான நடிப்பை வழங்கியிருக்கிறார். வசனங்களே இல்லாத சூழலில், அவரது கண்கள் மட்டுமே அவருக்குள் நடக்கும் போராட்டத்தையும், இழப்பின் வேதனையையும், குழப்பத்தையும் வெளிப்படுத்துகின்றன. அளவான முகபாவனைகள், கட்டுப்படுத்தப்பட்ட உடல் மொழி ஆகியவற்றின் மூலம், அதிகாரம் கொண்ட ஒரு மனிதன் மெதுவாக உடைந்து போகும் மாற்றத்தை இயல்பாக காட்டி, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.
நடிகை அதிதி ராவ், உணர்வுப்பூர்வமான தருணங்களை வார்த்தைகளின்றி, தன் விழியசைகளிலேயே மிக அழகாக கடத்துகிறார். எந்த அதிகமான நடிப்பும் இல்லாமல், அமைதியான முகபாவனைகளின் வழியே ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் அவரது நடிப்பு, இந்தக் கதாபாத்திரத்திற்கு தனிச்சிறப்பை அளிக்கிறது. திறமையான நடிகை என்பதைக் மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக அவரது அடிப்பு உள்ளது.
சித்தார்த் ஜாதவின் நகைச்சுவை, செயற்கைத் தனமின்றி எதார்த்தத்துடன் பார்வையாளர்களை எளிதில் கவர்கிறது. வசனங்கள் இல்லாத சூழலிலும், அவரது இயல்பான உடல் மொழியும் நேர்த்தியான நடிப்பும் சிரிப்பை உருவாக்குவதோடு, கதையின் ஓட்டத்துக்கு கூடுதல் உயிர் சேர்க்கின்றன. நகைச்சுவையும் நிஜத்தன்மையும் ஒன்றாக கலந்த அவரது நடிப்பு, படத்திற்கு உறுதியான கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.
வசனங்களே இல்லாத ஒரு படத்தில், இசை வெறும் பின்னணியாக இல்லாமல், இன்னொரு முக்கிய கதாபாத்திரமாக மாற வேண்டும். அந்தப் பெரும் பொறுப்பை ஏ.ஆர். ரஹ்மான் மிகச் சரியாகவும், ஆழமாகவும் நிறைவேற்றியிருக்கிறார். அவரது பின்னணி இசை, காட்சிகளில் வெளிப்படும் உணர்ச்சிகளை மட்டும் அல்லாமல், மும்பை நகரத்தின் இடையறாத இரைச்சல், அவசரம், பதற்றம் ஆகியவற்றையும் நம் காதுகளுக்கு நேரடியாகக் கொண்டு சேர்க்கிறது. அமைதியான தருணங்களில் மென்மையாகவும், மன அழுத்தம் நிறைந்த காட்சிகளில் தீவிரமாகவும் ஒலிக்கும் இசை, பார்வையாளர்களை கதையின் உள்ளே இழுத்துச் செல்கிறது. ஒவ்வொரு காட்சியும் ரஹ்மானின் இசைத் தொடுதலால் இன்னொரு உயர்ந்த தளத்திற்கு நகர்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
வசனங்களே இல்லாமல் நகரும் கதை, ஒவ்வொரு கணமும் பணம் இருந்தால் மட்டுமே வாழ்க்கை நகரும் என்ற உண்மையை எளிமையாக உணர வைக்கிறது. பெரிய பிரச்சாரமோ, கனமான வசனங்களோ இல்லாமல், காட்சிகளின் மூலம் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இறுதியில், ஏழையும் பணக்காரனும் தங்களது பணப் பிரச்னைகளில் இருந்து விடுபட்டார்களா என்ற கேள்வியை படம் பார்வையாளரிடம் விட்டுச் செல்கிறது. பதிலை சொல்லாமல், சிந்திக்க வைக்கும் இந்த முயற்சி தான் இந்த படத்திற்கு முக்கிய பலம். ‘காந்தி டாக்ஸ்’ என்பது சாதாரண திரைப்படமாக அல்ல; இது ஒரு சமூக பிரதிபிம்பம் போன்றது. பணம் சார்ந்த அரசியல், லஞ்சம், வறுமை, பேராசை ஆகியவற்றை படம் வசனமின்றி வெளிப்படுத்துகிறது.
"காந்தி டாக்ஸ்" படத்திற்கு மதிப்பீடு 3.5/5
Verdict : பணம் மனித வாழ்க்கையை எப்படி இயக்குகிறது என்பதை அமைதியாக பேசும் படம்.
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA


















