சற்று முன்
'பராசக்தி' விமர்சனம்
Directed by : Sudha Kongara
Casting : Sivakarthikeyan, Atharvaa Murali, Ravi Mohan, Atharvaa Murali, Sreeleela, Basil Joseph, Rana Daggubati, Guru Somasundaram
Music :G.V. Prakash Kumar
Produced by : Dawn Pictures, Aakash Baskaran
PRO : AIM
Review :
"பராசக்தி" சுதா கொங்கரா இயக்கத்தில் டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ஜி.வி. பிரகாஷ். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்தித் திணிப்புக்கு எதிராக ‘புறநானூறு’ என்ற பெயரில் மாணவர் இயக்கத்தை நடத்திவரும் செழியன், ஒரு ரயில் எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு, அதில் தனது உயிர் நண்பனை இழக்கிறார். அந்த இழப்பு அவரை போராட்ட வாழ்க்கையிலிருந்து விலகச் செய்கிறது. சில ஆண்டுகள் கழித்து, அண்ணன் கைவிட்ட அந்த போராட்டத்தை அவரது தம்பி சின்னத்துரை மீண்டும் தொடங்குகிறார். இளம் ரத்தத்தின் ஆவேசமும் தளராத உறுதியும் செழியனுக்கு அச்சத்தைத் தர, அறவழியில் போராடுமாறு தம்பிக்கு அறிவுரை வழங்குகிறார்.
இந்தி தெரியாத காரணத்தால் மத்திய அரசின் வேலை செழியனுக்குக் கிடைக்காமல் போக, மீண்டும் அவர் தம்பியுடன் சேர்ந்து இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக இறங்குகிறார். இந்தப் போராட்டத்தை அடக்க அனுப்பப்படும் மத்திய காவல் அதிகாரி ரவி மோகன், போராட்டக்காரர்களை எவ்வாறு கையாள்கிறார், மொழிப் போராட்டம் சமூகத்தில் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதையே மீதிக் கதை பேசுகிறது.
செழியன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிவகார்த்திகேயன் செழியனாகவே வாழ்ந்துள்ளார். இதுவரை காதல், காமெடி கதைகளில் மட்டுமே ரசிகர்களை மகிழ்வித்து வந்த சிவகார்த்திகேயன், பராசக்தி மூலம் முதல் முறையாக புரட்சி, போராட்ட அரசியல் பாதையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். மாணவர் இயக்கத்தின் தலைவராகவும், இந்தித் திணிப்புக்கு எதிரான குரலாகவும், சாட்டையடி வசனங்களை முழங்கும் தருணங்களில், அவரது நடிப்பு தியேட்டரை உறைய வைக்கிறது.
இதுவரை ஹீரோவாக மட்டுமே பார்க்கப்பட்ட ரவி மோகன், முதல் முறையாக வில்லனாக அவதரித்து பார்வையிலேயே கொலைவெறியை வெளிப்படுத்துகிறார். வார்த்தைகளைக் காட்டிலும் கண்களால் மிரட்டும் அவரது நடிப்பு, தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய, பயமுறுத்தும் வில்லனை அறிமுகப்படுத்துகிறது. கொடூரமான மத்திய அதிகாரியாக மிரட்டுகிறார்; எத்தனை பேர் செத்தாலும் பரவாயில்லை, நான் நினைப்பது நடக்க வேண்டும் என அவர் செய்யும் வேலைகள் நெஞ்சை பதபதைக்க வைக்கிறது. அவரது நடிப்புக்கு ஒரு அப்லாஸ்.
புரட்சி புயலாக அதர்வா களம் இறங்கி கலக்குகிறார். சிவகார்த்திகேயனின் தம்பியாக நடித்திருக்கும் அதர்வா அவரது ஆவேசமான நடிப்பும், ஆக்ஷன் காட்சிகளில் காட்டும் உறுதியும் கதையின் தீவிரத்தை மேலும் கூர்மையாக்குகின்றன.
ஸ்ரீலீலா தமிழுக்கு அறிமுகமாகும் இந்தப் படத்தில், இயல்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார். வெறும் அழகுக்கான கதாபாத்திரமாக இல்லாமல், நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்
கிளைமாக்ஸில் பாசில் ஜோசப்பின் வருகை உணர்வு பூர்வமான அதிர்வை ஏற்படுத்துகின்றன. அண்ணாவாக சேத்தன், கலைஞராக குரு சோமசுந்தரம், இந்திரா காந்தியாக நடித்த நடிகை உண்மைப் பாத்திரங்களை நினைவூட்டுகின்றனர்.
“இது இந்திக்கு எதிரான படம் அல்ல; இந்தித் திணிப்புக்கு எதிரான படம்” என்ற தெளிவான நிலைப்பாடு படமெங்கும் வலியுறுத்தப்படுகிறது. வசனங்கள் கவனமாக எழுதப்பட்டுள்ளன—“இந்தித் திணிப்புக்கு தான் எதிரி… இந்திக்கு இல்லை”, “எனக்கு தேசபக்தி க்ளாஸ் எடுக்காதே” போன்ற வசனங்கள் தியேட்டரை அதிர வைக்கின்றன.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுக்கு இது 100-வது திரைப்படம். திரை இசையில் தனக்கென தனித்துவமான அடையாளம் கொண்ட ஜி.வி. பிரகாஷ், இப்போதும் தனது உணர்வுமிக்க, அழுத்தமான பின்னணி இசையால் கதைக்கு உயிர் ஊட்டுகிறார். அவரது BGM பல காட்சிகளில் தாக்கத்தை அதிகரிக்கிறது. ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசையும், ரவி கே. சந்திரனின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன.
1960களின் காலகட்டத்தை கலை இயக்கமும் ஆடை வடிவமைப்பும் தத்ரூபமாக பிரதிபலிக்கின்றன.
வலுவான திரைக்கதையுடன், உண்மைச் சம்பவங்களை நினைவூட்டும் விதத்தில் பரபரப்பான கதைக்களத்தில் காட்சிகளை நகர்த்தி, இயக்குநர் சுதா கொங்கரா மீண்டும் ஒருமுறை தனது இயக்க முத்திரையை ஆழமாக பதித்துள்ளார். வரலாற்று உணர்வையும் அரசியல் தீவிரத்தையும் சமநிலைப்படுத்தி சொல்லும் அவரது அணுகுமுறை, பராசக்தியை வெறும் அரசியல் திரைப்படமாக அல்லாமல், ஒரு முக்கியமான காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் படமாக உயர்த்துகிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான பராசக்தி, ஒரு பீரியட் படம் எப்படி உருவாக்கப்பட வேண்டும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக, தமிழ் சினிமா வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்கும் படமாகத் திகழும்
உலகளவில் மொழித் திணிப்பால் பல நாடுகள் பிளவுபட்ட வரலாறுகளை முதல் காட்சியிலேயே இயக்குநர் சுதா கொங்கரா அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். “மொழி என்பது வெறும் பேசும் கருவி அல்ல; அது பல உரிமைகளின் அடையாளம்” என்ற கருத்தை, தமிழ்நாட்டில் நடந்த இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தோடு இணைத்திருப்பதே படத்தின் மைய நோக்கம்.
"பராசக்தி" படத்திற்கு மதிப்பீடு 4/5
Verdict : மொழி, அடையாளம், போராட்டம் – ‘பராசக்தி’யின் மையக் கரு
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA


















