சற்று முன்
‘நேர்கொண்ட பார்வை’ திரை விமர்சனம்
Directed by : எச்.வினோத்
Casting : அஜித் குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா, வித்யாபாலன், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ்
Music :யுவன் சங்கர் ராஜா
Produced by : போனி கபூர்
PRO : சுரேஷ் சந்திரா
Review :
போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்த படம் இந்தியில் அமிதாப் நடித்த ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்காகும்.
இந்த படத்தில் அஜித் குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா, வித்யாபாலன், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
நாகரிகம் என்ற பெயரில் பார்ட்டி, மது, ஆண்களின் சகவாசம் என மாடர்ன் பெண்களாக இருக்கும் ஷரத்த ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா ஆகிய மூன்று தோழிகளும் தங்களது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்கின்றனர், நேரம் ஆனதால் ரூம் போட்டு தங்குகின்றனர் அதில் ஒருவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்திடம் தவறாக நடக்க முயற்சிக்கிறார், அதனால் ஷரத்தா தன்னை காத்துக்கொள்ள ஆத்திரத்தில் அவரை மது பாட்டிலால் தாக்கி விட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். அதன் பிறகு, அரசியல் பெரும்புள்ளி வீட்டு பையனான அந்த வாலிபர், ஷரத்தா ஸ்ரீநாத்துக்கு தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வருகிறார். இதனால் ஷரத்தா ஸ்ரீநாத் போலீசில் புகார் அளிக்க, வழக்கம்போல் போலீசோ அரசியல்வாதி வீட்டு பையனை காப்பாற்றுவதற்காக ஷரத்தா ஸ்ரீநாத் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்வதோடு, மூன்று பெண்களும் விபச்சாரம் செய்ததாக குற்றம் சாட்டுகின்றனர், எதிர் வீட்டில் வசிக்கும் வழக்கறிஞரான அஜித், அந்த பெண்களுக்காக வாதாடுகிறார். அப்பெண்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை எப்படி பொய்யாக்கி, அந்த வாலிபருக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கிறார் என்பதே நேர்கொண்ட பார்வை.
பிங்க் படத்தில் அமிதாப் பச்சன் ஏற்று நடித்த வழக்கறிஞர் வேடத்தில் தமிழில் அஜித் குமார் நடித்துள்ளார். பிங்க் படத்தை இந்தியா முழுக்க கொண்டாட அமிதாப் பச்சனின் அசாத்திய நடிப்பும் ஒரு முக்கிய காரணம். நேர்கொண்ட பார்வை படத்தை அமிதாப் பச்சனை கண் முன் நிறுத்தி பார்க்காமல் இது அஜித் படம் என்று பார்த்தால் அஜித்தின் நடிப்பும் ரசிக்கும்படியே அமைந்திருக்கிறது. அஜித் சமூக அக்கறையோடு நடித்திருப்பது வரவேற்கத்தக்கது தான்.
அஜித்துக்கு ஜோடியாக நடித்திருக்கும் வித்யாபாலன், இவர் டர்ட்டி பிக்ச்சர் படத்தில் நடித்தவர் என்று நினைக்கும் அளவுக்கு ஒரு குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குறைந்த நேரம் மட்டுமே வந்தாலும், மனதில் நீங்காமல் நிற்கிறார்.
பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட சாதாரண பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தங்களது நடிப்பின் மூலம் அழுத்தமாக பதிய வைத்திருக்கிறார்கள் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி மற்றும் ஆண்ட்ரியாவும். படத்தில் பெண்களுக்கான முக்கியத்துவம் குறித்த வசனங்களை மிக அழுத்தமாக கூறியுள்ளனர். தற்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்து வரும் சூழ்நிலையில், பெண்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளை வரிசையாக அஜித் பேசும் காட்சிகளில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் உள்ளது.
அரசு தரப்பு வழக்கறிஞராக நடித்திருக்கும் ரங்கராஜ் பாண்டே முதல் படம் என்ற கலவரமே இல்லாமல் துடிப்பான நடிப்பை யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். நீதிமன்றத்தில் வாதிடும் ஆரம்ப காட்சிகளில் சற்று ஓவராக நடித்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் அதை சரி செய்துவிடுகிறார்.
படத்தில் யுவனின் பின்னணி இசை படத்திற்கு படத்தின் பாடலுக்கு பலத்தை தந்ததோ இல்லையோ படத்தின் பின்னணி இசைக்கு அதிக பலத்தை கூட்டியுள்ளது. குறிப்பாக அஜித் – யுவன் கூட்டணியில் எப்போதுமே ஒரு கூடுதல் ஸ்பெஷல் இருக்கும் என்பதை இந்தப் படம் மீண்டும் நிருபித்துள்ளது.
கடந்த காலங்களில் ரீமேக்கான சில படங்கள் அந்த படத்தின் ஒரிஜினல் கதையை கெடுக்கும் விதமாக இருக்கும். ஆனால் 2016ம் ஆண்டு இந்தியில் வெளிவந்து மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை அந்த கதையை மேலும் மெருகேற்றும் வண்ணமாக அமைந்துள்ளது.
பெண் உரிமை என்ற பெயரில் பெண்கள் செய்யும் செயல்கள், ஆண்களால் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் இவை நடப்பது எதனால் என்பதையும், பெண் உரிமை குறித்த இன்றைய காலக்கட்டத்துக்கு தேவையான மிக முக்கியமான வாதத்தையும் இந்த படத்தில் முன்வைத்துள்ளனர். இதை ஒரு சாதாரண மனிதனை வைத்து கூறுவதை விட ஒரு உச்ச நட்சத்திரத்தின் வாயிலாக உரக்க கூறியது தான் இந்த படத்தின் சிறப்பம்சம்.
‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்கு மதிப்பீடு 3.5/5
Verdict : ‘நேர்கொண்ட பார்வை’ சமுதாய சீரழிவை தடுக்க நம்மை நாமே சரிசெய்ய கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்.
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA