சற்று முன்
இறைவி விமர்சனம்
Directed by : கார்த்திக் சுப்புராஜ்
Casting : எஸ். ஜே. சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமலினி முகர்ஜி, பூஜா தேவரியா, கருணாகரன், ராதார
Music :சந்தோஷ் நாராயணன்
Produced by : சி. வி. குமார்
PRO : நிக்கில் முருகன்
Review :
பிஸ்ஸா, ஜிகர்தண்டா என இரண்டு வெற்றிப்படங்களை வழங்கிய கார்த்திக் சுப்புராஜ், தனது மூன்றாவது படமான இறைவியை படைத்திருக்கிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, அஞ்சலி, பாபி சிம்ஹா, கமாலினி முகர்ஜி, ராதாரவி, கருணாகரன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
திரைப்பட இயக்குனரான எஸ்.ஜே.சூர்யா தனது முதல் படத்தை இயக்கியும் அதனை வெளியிட முடியாத விரக்தியில் மதுவிற்கு அடிமையாக இருக்கிறார். தயாரிப்பாளரிடமிருந்து படத்தை வாங்கி வெளியிட எஸ்.ஜே.சூர்யாவின் தந்தை ராதாரவி, தம்பி பாபி சிம்ஹா, அவர்களின் குடும்பத்திற்காக விசுவாசமாக உழைக்கும் விஜய் சேதுபதி என அனைவராலும் முயற்சிக்கப்படுகிறது.
ஆனால் இந்த முயற்சியில் பல்வேறு திருப்பங்களும், எதிர்பாராத சம்பவங்களும் நிகழ்கின்றன. இவைகள் அனைத்திலும் சிக்கி தவிக்கும் பெண்களின் கதை தான் இறைவி.
ஆண்களின் மூர்க்கதனத்திற்கும், முட்டாள்தனமான செயல்களுக்கும், சுயநலமான முடிவுகளுக்கும் பலிகடாவாக ஆக்கப்படும் பெண்களின் உணர்வுகளையே இந்த திரைப்படம் உயர்த்திப் பிடிக்கிறது.
ஒரே கதாபாத்திரத்தில் பல்வேறு தன்மைகள் உடைய கடினமான பொறுப்பை ஏற்றிருக்கும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் அசத்தியிருக்கிறார். அதிலும், கிளைமாக்சில் மனைவியுடன் கைபேசியில் உரையாடும் காட்சி அபாரம்.
விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, ராதாரவி ஆகியோர் வழக்கமான தங்களது பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்திருந்தாலும், இவர்களை விட பெண்களை மையமாக கொண்டுள்ள இந்த படத்திற்கு அஞ்சலி, கமாலினி முகர்ஜி, பூஜா தேவரியா உள்ளிட்டவர்களின் நடிப்பே மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. உரையாடலே இல்லாமல் படம் முழுவதும் மற்றொரு மனிதியாக பயணிக்கிறார் வடிவுக்கரசி.
குறிப்பாக கற்றது தமிழ், அங்காடி தெரு படத்திற்கு பிறகு அஞ்சலிக்கு இறைவி மிக முக்கியமான படமாக இருக்கும். மலராக நடித்திருக்கும் பூஜாவின் பாத்திர வடிவம், தமிழ் சினிமாவில் அபூர்வமாக தரிசிக்ககூடியது என்பதை படத்தை பார்த்தால் நிட்சயம் உணரலாம்.
வலுவான சம்பவங்களுடன் கோர்க்கப்பட்டுள்ள இப்படத்திற்கு பாடல்கள் அவசியமில்லை என்றாலும் பின்னணி இசையில் சந்தோஷ் நாராயணனின் பங்களிப்பு படத்திற்கு வலுசேர்க்கும்படி அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி ஒரு காட்சியில் திரையிலும் தோன்றி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் அவர்.
இண்டோர் காட்சிகளில் வரும் லைட்டிங், பிற காட்சிகளின் கலர் போன்றவைகளில் ஒரு அசாத்திய உணர்வை கேமரா வழியே ஏற்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன்.
மொத்தத்தில் தமிழ் சினிமாவில் அவ்வப்போது வெளியாகும் நல்ல படங்களின் வரிசையில் இறைவியும் இணைந்திருக்கிறது. ஆனாலும் அதில் நகைச்சுவை, செண்டிமெண்ட், பாடல்கள், விறுவிறுப்பான திருப்பங்கள் என எதிலும் குறையில்லாமல் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
இதனை விமர்சன ரீதியாக கொண்டாடுவது மட்டுமின்றி, வணிக ரீதியாகவும் வெற்றியடைய செய்ய வேண்டியதே தமிழ் சினிமா ரசிகர்களின் சரியான பங்களிப்பாக இருக்கும்.
Verdict : மனிதர்களால் சிதைக்கப்படும் மனிதிகளின் கதை
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA