சற்று முன்
சினிமா செய்திகள்
100 கோடி ரூபாய் வசூலை கடந்த 'தங்கலான்'
Updated on : 30 August 2024
ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கே. ஈ. ஞான வேல் ராஜா தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் 'சீயான்' விக்ரம் நடிப்பில் வெளியான 'தங்கலான்' திரைப்படம் உலகளவில் நூறு கோடி ரூபாய் வசூலைக் கடந்து புதிய சாதனையை படைத்து வருகிறது.
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'தங்கலான்' திரைப்படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கோலார் தங்க வயல் பின்னணியில் உருவான இந்த திரைப்படம் கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் யதார்த்த வாழ்வியலையும், ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டு உரிமைகளுக்காக போராடிய அவர்களின் போராட்ட வாழ்வியலை மாய யதார்த்தம் மற்றும் புதுமையான திரை மொழியால் உருவாக்கப்பட்டிருந்தது. இதில் சீயான் விக்ரமின் அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பை கண்களை இமைக்க மறந்து, அகல விரித்து.. கண்டு ரசித்து, வியந்து பாராட்டாதவர்களே இல்லை எனலாம். இது அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் புதிய அனுபவத்தை அளித்தது.
இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று திரையரங்குகளில் வெளியான 'தங்கலான்' ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப பாக்ஸ் ஆபீசில் வெற்றி பெற்ற திரைப்படமாகவும் சாதனை படைத்தது. இந்த திரைப்படம் இதுவரை உலகளாவிய அளவில் பாக்ஸ் ஆபீசில் 100 கோடி ரூபாயை கடந்து புதிய வசூல் சாதனையை நோக்கி பயணத்தை தொடர்கிறது.
சீயான் விக்ரமின் 'தங்கலான்' திரையரங்குகளில் வெளியான முதல் நாளில் உலகளவில் 26 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இது சீயான் விக்ரமின் திரையுலக பயணத்தில் அவருடைய திரைப்படங்களுக்கு கிடைத்த சிறந்த முதல் நாள் வசூலாக அமைந்தது.
'தங்கலான்' தமிழகத்தில் மட்டும் இல்லாமல் ஆந்திரா - தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் வெற்றி பெற்றது. இந்தத் தருணத்தில் இந்தத் திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ம் தேதி முதல் வட இந்திய நகரங்களில் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. இதனால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய செய்திகள்
17 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகமாக ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’!
எஸ்.பி.பி. சரண் தயாரிப்பில் வெளியாகி கவனம் பெற்ற திரைப்படமான ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’, தற்போது அதன் திரைக்கதை புத்தக வடிவில் வெளியாகியுள்ளது. படம் வெளியாகி 17 ஆண்டுகள் கடந்த நிலையில், திரைக்கதையை புத்தகமாக வெளியிடுவது தமிழ் சினிமா வட்டாரத்தில் ஒரு சிறப்பு முயற்சியாகக் கருதப்படுகிறது.
இந்த திரைப்படத்தை இயக்கிய ராஜமோகன், இயக்குநர்கள் ராஜகுமாரன், விஜய் மில்டன், ஏ. வெங்கடேஷ் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
இயக்குநர் சேரன் உதவியாளராக இருந்த ராமகிருஷ்ணன், இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வெளியான இந்த படத்தின் பாடல்கள், வெளியான காலகட்டத்தில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில், இப்படத்தின் திரைக்கதை தற்போது அறம் பதிப்பகம் சார்பில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற சென்னை புத்தகக் கண்காட்சி திருவிழாவில், இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர்கள் ராஜமோகன், ராஜகுமாரன், விஜய் மில்டன், நடிகர் ராமகிருஷ்ணன், கவிஞர் மனுஷ்ய புத்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில், இயக்குநர் ராஜகுமாரன் புத்தகத்தை வெளியிட, இயக்குநர் விஜய் மில்டன் பெற்றுக் கொண்டார். ஒரு திரைப்படத்தின் திரைக்கதை, காலத்தைக் கடந்து புத்தக வடிவில் வாசகர்களை சந்திப்பது, தமிழ் சினிமா – இலக்கிய இணைப்பின் ஒரு முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வில்
குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் நூலின் ஆசிரியரும் இயக்குநருமான ராஜமோகன் ஏற்புரை ஆற்றி பேசும்போது,
நல்ல விமர்சனங்களை தந்த இந்தப்படம் ஒரு சிறந்த திரைக்கதை என்பதை கர்வத்துடன் சொல்லிக் கொள்வேன். இயக்குநராகும் ஆசையுடன் சென்னைக்கு வந்த என் அண்ணன் விபத்தில் இறந்து விட்டார். அதன் பிறகு நானும் என் தம்பியும் படிப்பை முடித்தோம். ஒரு கட்டத்தில் என் தம்பி என்னை சினிமாவுக்கு செல்ல ரொம்பவே ஊக்கம் கொடுத்து வற்புறுத்தினார். அப்போதுதான் இயற்கையே என்னை கவிதை, கதை எழுதுவதற்கு தயார்படுத்தியது. அதன்பின் சென்னை வந்து இயக்குநர் ராஜகுமாரனிடம் உதவி இயக்குநராக சில படங்களில் பணியாற்றினேன். அப்போது என்னை அவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அவரிடம் பணியாற்றிய அனுபவத்தில் நான் இயக்குநராக மாறினேன். ஒளிப்பதிவையும் சேர்த்து கற்றுக் கொண்டேன். இந்த சினிமாவில் எனக்கு ஒரு நந்தவனம் அமைத்துக் கொடுத்தவர்கள் இவர்கள் இருவரும் தான். அவர்கள் இருவருக்கு நடுவே நான் இன்று என்னுடைய புத்தக விழாவில் புகைப்படம் எடுத்துக் கொண்டேன் என்பதை விட வேறு பெருமை எனக்கு கிடைக்காது.
நான் உதவி இயக்குநராக பணியாற்றிய சமயங்களில் என்னுடன் நட்பாக பழகிய புரொடஷன் மேனேஜர் சின்னச்சாமி என்னிடம் இருந்த கதையை கேட்டுவிட்டு என்னை விட அதிக இடங்களுக்கு அந்த கதையை சுமந்து சென்றார். அப்படி நான்கு இடங்களில் எனக்கு படம் இயக்க வாய்ப்பு கிடைத்த போது அதில் அழகாக அமைந்த வாய்ப்பு தான் கேப்பிட்டல் பிலிம் ஒர்க்ஸ் தயாரிப்பாளர் எஸ்பி. சரண் சார் இந்த படத்தை தயாரித்தது. இந்த படத்தில் வாலி மற்றும் வைரமுத்து ஆகியோர் பாடல்களை எழுத யுவன் சங்கர் ராஜா இசையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இன்று வரை அந்த பாடல்கள் பேசப்படுகின்றன. புத்தகத்தை வெளியிட்டுள்ள அறம் பதிப்பகத்திற்கு கடந்த வருடம் வேறு ஒரு புத்தகம் வாங்குவதற்காக சென்றபோது நான்தான் குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படத்தின் டைரக்டர் என்பதை அறிந்து நீங்கள் நிச்சயம் இந்த கதையை புத்தகமாக எழுதுங்கள் எங்கள் நிறுவனத்தில் வெளியிடுகிறோம் என்று ஊக்கப்படுத்தினார்கள். இந்த புத்தகம் வெளியாக உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி” என்று கூறினார்.
ஜேம்ஸ் பேசும்போது,
“இயக்குநர் ராஜமோகனுடன் பல வருடங்களாக பழகி வருகிறேன். அவர் நான்கு படங்களை இயக்கி விட்டாலும் கூட இன்று வரை அவரை உயிர்ப்புடன் நகர்த்தி செல்வது குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும் படத்தை பற்றி பலரும் சிலாகித்து பேசுவது தான்” என்று கூறினார்.
நடிகர் ராமகிருஷ்ணன் பேசும்போது,
“நான் இயக்குநராகும் முயற்சியில் தீவிரமான தேர்தலில் இருந்தபோது என்னை குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும் படத்தில் கதாநாயகனாக இயக்குநர் ராஜமோகன் நடிக்க வைத்தது யாரும் எதிர்பாராதது. இந்த படம் வெற்றி தோல்வி என்பதையெல்லாம் தாண்டி இன்று வரை உயிர்ப்போடு இருக்கிறது என்றால் இந்த படத்தின் திரைக்கதை தான் காரணம். இந்த திரைப்படத்தை வாழ்வியல் நுட்பத்துடன் எடுத்த இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் அது மிகையாகாது. இந்த படம் வெளியாகி 17 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போதும் என்னை இந்த படத்தில் நடித்த ஹீரோ தானே என்று சொல்லித்தான் அடையாளம் காட்டுகிறார்கள். இந்த படத்தின் காட்சிகள் பாடல்கள் இப்போதும் கூட சோசியல் மீடியாவில் உயிர்ப்போடு இருக்கிறது என்றால் நிச்சயம் இந்த படம் ஏதோ ஒரு மேஜிக் செய்திருக்கிறது” என்று பேசினார்.
இயக்குநர் விஜய் மில்டன் பேசும்போது,
“எங்களைப் போன்ற இயக்குனர்கள் கதை எழுதுவது, கவிதை எழுதுவது எல்லாம் ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான். யாரோ ஒருவர் நம்முடைய கதையை, படத்தை நன்றாக இருக்கிறது, அதுவும் தோற்றுப்போன படம் கூட நன்றாக இருக்கிறது என்று சொல்லும்போது அது மிகப்பெரிய அங்கீகாரம். அப்படி ஒரு சந்தோஷத்தை இயக்குநர் ராஜமோகனுக்கு கொடுத்ததற்காக அறம் பதிப்பகத்திற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். எங்கே சென்றாலும் அவரை குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும் டைரக்டர் தானே என்று சொல்கிறார்கள். இந்த வருடம் அதையும் தாண்டி ஒரு படத்தை பண்ணுவதற்காக கதையுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார்” என்று பேசினார்.
இயக்குநர் ராஜகுமாரன் பேசும்போது,
“இந்த புத்தக வெளியிட்டு விழாவை ஒரு மனிதனின் அயராத முயற்சியும் ஒரு தன்னம்பிக்கை எழுச்சிமாகத்தான் நான் பார்க்கிறேன். ஒரு குடும்பத்தில் மூன்று பேருக்கு நடுவில் பிறந்து தந்தையையும் அண்ணனையும் இழந்து படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழலில் ஒரு சினிமாவை பார்த்துவிட்டு அதில் கதாநாயகன் செய்யும் பல வேலைகளை குறித்து வைத்துக் கொண்டு அதில் சில வேலைகளை தனது தினசரி வாழ்க்கையில் செய்து படிப்பை விடாமல் தொடர்ந்து கல்லூரி பட்டம் பெற்ற ஒரு செயல் வீரனின் கதையாகத்தான் இந்த புத்தகத்தை நான் பார்க்கிறேன். அப்படி கல்லூரி படிப்பை முடித்த பிறகும் அந்த வேலைகளை தொடர்ந்து கொண்டிருந்த சமயத்தில் என்னுடைய, ‘நீ வருவாய் என’ படத்தை பார்த்துவிட்டு நான் விக்ரமனின் உதவியாளர் என்பதை அறிந்து கொண்டு தொடர்ந்து எனக்கு கடிதங்கள் எழுதி, என்னைக் கவர்ந்து, என்னை தேடி சென்னைக்கு வந்து விட்டார் இயக்குநர் ராஜமோகன். என்னிடம் உதவியாளராக சேர்வதற்கு சில தேர்வுகளை வைத்தேன். நல்ல காட்சி சொன்னால் 100 ரூபாய் தருவதாக சொன்னேன். அப்படி பலமுறை என்னிடம் பரிசாக பணம் பெற துவங்கினார். இவர் இப்படி என்னிடம் பரிசாக பணம் வாங்குவதை பார்த்து, நான் இன்னும் அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டுமோ அல்லது தவறாக வாக்கு கொடுத்து விட்டோமோ என்கிற அச்சமும் கூட எனக்கு ஏற்பட்டு அதனாலயே அவரை என் உதவியாளராக சேர்த்துக் கொண்டேன். அவருடைய வாழ்க்கையே ‘நான் பேச நினைப்பதெல்லாம்’ என்கிற அந்தப் படத்தினால் தான். ஒரு படைப்பு என்பது ஒரு மனிதனுக்கு எத்தகைய உத்வேகத்தை கொடுத்திருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம் “என்று கூறினார்.
கவிஞர் மனுஷ்ய புத்திரன் பேசும்போது,
“இந்த புத்தகத்திற்கு இயக்குநர் ராஜமோகன் எழுதி இருக்கும் முன்னுரையே ஒரு திரைக்கதை போல அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது. அதையே ஒரு படமாக எடுக்கலாம். பேருந்து நிலையத்தில் யாரோ ஒரு வயதான பெண் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை சொன்ன போது, அதையே இந்த சமூகத்திற்கு ஒரு படைப்பாக கொடுக்கும் விதமாக இந்த கதையை அவர் உருவாக்கி இருக்கிறார். ஒரு படம் வெளிவந்து 17 வருடங்களுக்குப் பிறகு அது ஏன் புத்தகமாகி இருக்கிறது என்ற கேள்வி பலருக்கும் எழலாம். இன்று படங்களின் ஆயுள் காலம் ஓரிரு வாரங்கள் என்று ஆகிவிட்ட நிலையில் கால ஓட்டத்தில் சமூக நோக்கில் எடுக்கப்பட்ட படங்கள் கூட மறக்கடிக்கப்பட்டாலும் அவற்றின் திரைக்கதைகள் புத்தகங்களாக வெளியாகி இன்றைய தலைமுறையை சென்று அடைய வேண்டும். அந்த பணியை தான் அறம் பதிப்பகம் செய்திருப்பதாக நினைக்கிறேன். இதுபோன்ற நல்ல படைப்புகளை ராஜமோகன் படமாக இயக்க வேண்டும். இது போன்ற நல்ல திரைக்கதைகளை அறம் பதிப்பகம் தொடர்ந்து வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என பேசினார்.
‘திரௌபதி 2’ உடன் மீண்டும் திரையரங்குகளை நோக்கி மோகன் ஜி!
‘திரௌபதி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்த கவனத்தை ஈர்த்த இயக்குநர் மோகன் ஜி, தற்போது மிகப் பெரும் வரலாற்றுக் காவியமான ‘திரௌபதி 2’ திரைப்படத்துடன் மீண்டும் திரையரங்குகளுக்கு வருகிறார். துணிச்சலான கதை சொல்லல் மற்றும் வரலாற்று நுணுக்கங்களை துல்லியமாக கையாளும் இயக்குநராக அறியப்படும் அவர், இந்த படத்தின் மூலம் 14ஆம் நூற்றாண்டு ஹோய்சால பேரரச வம்சத்தின் மகத்துவத்தை மீண்டும் திரையில் உயிர்ப்பிக்கிறார்.
ஜனவரி 23 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘திரௌபதி 2’, ரசிகர்களுக்கு மறக்க முடியாத சினிமா அனுபவமாக மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் செழுமையான ஆனால் பெரிதும் பேசப்படாத பாரம்பரியத்தை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு வரலாற்று சினிமா ஆவணமாக இருக்கும் என இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
படம் குறித்து அவர் மேலும் கூறியதாவது, “‘திரௌபதி 2’ திரைப்படம் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹோய்சால பேரரச வம்சத்தின் வரலாற்றை எந்த சமரசமும் இல்லாமல், துல்லியமான வரலாற்று உண்மைகளுடன் திரையில் மீண்டும் உருவாக்குகிறது. மன்னர் வீர சிம்ம கடவராயன் கதாபாத்திரத்தில் ரிச்சர்ட் ரிஷி, பேரரசருக்கே உரிய கம்பீரமும் அதிகாரமும் நிறைந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இசை, பேரரசர்களின் ஆன்மாவை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது.”
மேலும், பிலிப் கே. சுந்தர் ஒளிப்பதிவு அரச கம்பீரத்தை அழகாக பதிவு செய்கிறது. ஆக்ஷன் சந்தோஷ் வடிவமைத்த போர் காட்சிகள் வரலாற்று காவியங்களுக்கு இணையானவை. ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ் ஆகியோர் தீவிரமான நடிப்பை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு பேரரசின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியின் வழியாக தமிழ் வீரத்தின் வரலாற்றை பதிவு செய்யும் இந்த துணிச்சலான வரலாற்றுத் திரைப்படத்தை நேதாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மோகன் ஜி இயக்கத்தில், சோலா சக்கரவர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி, ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் இசையில் சிவனின் மகிமையை போற்றும் முதல் திருவாசக பாடல் வெளியீடு
தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் உன்னத படைப்பாகக் கருதப்படும் திருவாசகம், இப்போது சமகால இசை வடிவில் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. இசையமைப்பாளரும் பாடகருமான ஜி.வி. பிரகாஷ் குமார், திருவாசகத்தை முழுமையான இசை ஆல்பமாக உருவாக்கும் முயற்சியின் முதல் படியாக, அதன் முதல் பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்த பாடல் ஆன்மிக இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், இந்த திருவாசகப் பாடலின் ஒரு பகுதியை ஜி.வி. பிரகாஷ் நேரடி இசை நிகழ்ச்சியாக வழங்கினார். அந்த நிகழ்வின் போது மேடை முழுவதும் தெய்வீக அமைதி நிலவியதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர். இதன் மூலம், திருவாசக இசை முயற்சியின் ஆன்மிக ஆழம் வெளிப்பட்டது.
ஜி.வி. பிரகாஷின் YouTube சேனலில் வெளியான இந்த முதல் பாடல், சிவபெருமானின் மகிமையையும், திருவாசகத்தில் நிறைந்திருக்கும் ஆத்மார்த்தமான பக்தி உணர்வையும் இசை வழியாக எடுத்துரைக்கிறது. சிவனின் பல ரூபங்களும் – கருணை வடிவம், ருத்ர ரூபம், யோகி நிலை – இசையின் ஓட்டத்தில் நுட்பமாக சித்தரிக்கப்பட்டுள்ளன.ஜி.வி. பிரகாஷின் குரலில் வெளிப்படும் வலிமையும் பணிவும், பாடலின் ஆன்மிக தாக்கத்தை மேலும் உயர்த்துகின்றன.
திரைப்பட இசையில் தனக்கென ஒரு வலுவான அடையாளத்தை உருவாக்கியுள்ள ஜி.வி. பிரகாஷ், பாரம்பரியத்தையும் நவீனத்தையும் இணைக்கும் இசை முயற்சிகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறார். அந்த முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த திருவாசக இசை திட்டம் பார்க்கப்படுகிறது. பாரம்பரிய ஆன்மிக இலக்கியத்தை இன்றைய தலைமுறைக்கு எளிதாக கொண்டு சேர்க்கும் நோக்கில், நவீன இசை அமைப்புகளுடன் பாரம்பரிய பக்தி சுவை இணைக்கப்பட்டுள்ளது.
திருவாசகத்தை முழுமையான இசை ஆல்பமாக வெளியிடுவது ஜி.வி. பிரகாஷின் நீண்ட நாள் கனவாக இருந்த நிலையில், அதன் தொடக்கமாக வெளியாகியுள்ள இந்தப் பாடல், அந்த கனவு உறுதியான பாதையில் பயணிக்கத் தொடங்கியிருப்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த முயற்சி, தமிழ் ஆன்மிக இசை உலகில் ஒரு முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது.
பாலிவுட்டை நோக்கி இசையமைப்பாளர் 'ஹேஷம் அப்துல் வஹாப்'!
தென் இந்திய சினிமாவில் தனது மென்மையான மெலடிகள், உணர்வுப் பூர்வமான பின்னணி இசை மூலம் தனி அடையாளத்தை உருவாக்கிய இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப், தற்போது பாலிவுட் திரையுலகில் அதிகாரப்பூர்வமாக கால்பதித்துள்ளார். இந்தியாவின் பிரம்மாண்டமான இயக்குநர்-தயாரிப்பாளர்களில் ஒருவரான சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கும் “தோ திவானே ஷெகர் மெய்ன்” (Do Deewane Sheher Mein) திரைப்படத்தின் மூலம், ஹேஷம் இந்தி திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இது தென் இந்திய சினிமாவுக்கே பெருமை சேர்க்கும் தருணமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ரவி உத்யாவர் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில், பாலிவுட் பிரபல இசையமைப்பாளர் ஜோடி சச்சின் – ஜிகர் உடன் இணைந்து, ஒரு முக்கிய பாடலுக்கு ஹேஷம் இசையமைத்துள்ளார். அந்த பாடலை ஜூபின் நௌடியல் மற்றும் நீதி மோகன் பாட, பாடல் வரிகளை அபிருச்சி எழுதியுள்ளார். மெலடியும் உணர்ச்சியும் கலந்த இந்த பாடல், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை வழங்கிய ஹேஷம், குறிப்பாக தெலுங்கில் “குஷி”, “ஹாய் நானா” போன்ற ஹிட் படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்தார். சமீபத்தில் வெளியான “கேர்ள்ஃபிரண்ட்” திரைப்படத்தின் இசை, அவரது பயணத்தில் இன்னொரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. தமிழில் “ஒன்ஸ் மோர்”, சூரி நடித்த “மாமன்” ஆகிய படங்கள் மூலம் ஹேஷம் பெற்ற பாராட்டுகள் குறிப்பிடத்தக்கவை.
தற்போது, ஹேஷம் அப்துல் வஹாப் பல பிரம்மாண்ட படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். தெலுங்கில் ஆதித்யா ஹாசன் இயக்கும் பெரிய படம், ஹாய் நானா இயக்குநர் ஷௌர்யுவ் உடன் புதிய கூட்டணி, மேலும் “ஹிட்” பட இயக்குநர் சைலேஷ் கோலனு உடன் ஒரு திரைப்படம் என அவரது கைவசம் பல முக்கியப் படங்கள் உள்ளன. தமிழில் அர்ஜூன் தாஸ் நடிக்கும் சூப்பர்ஹீரோ திரைப்படம் அவரது அடுத்த வெளியீடாக தயாராகி வருகிறது.
இதோடு மட்டுமல்லாமல், Netflix தயாரிக்கும் முதல் இந்தோ–கொரியன் முழுநீள திரைப்படமான “மேட் இன் கொரியா” (Made in Korea)-க்கும் ஹேஷம் இசையமைக்கிறார். பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகும் இந்த படம், இந்தியா – தென் கொரியா கூட்டுத் தயாரிப்பாக சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வருகிறது.
கன்னடத்தில் Golden Star கணேஷ் நடித்துவரும் படத்தின் மூலம் ஹேஷம் அந்த திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார். மலையாளத்தில் விரைவில் வெளியாகவுள்ள “மதுவிது” திரைப்படத்திற்கும் அவர் இசையமைத்துள்ளார்.
ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கும் முதல் பாலிவுட் திரைப்படமான “தோ திவானே ஷெகர் மெய்ன்”, Zee Studios, Rankcorp Media, Bhansali Productions, Ravi Udyawar Films ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சமீபத்தில் வெளியான டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த திரைப்படம் பிப்ரவரி 20ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழில் அடியெடுக்கும் கன்னட ஹீரோ சதீஷ் நினாசத்தின் ‘ரைஸ் ஆஃப் அசோகா’
கன்னட திரையுலகில் உணர்வுபூர்வமான கதைகளில் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகராக அறியப்படும் சதீஷ் நினாசம், கதையின் நாயகனாக நடித்துள்ள ‘ரைஸ் ஆஃப் அசோகா’ திரைப்படம், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒரு இளைஞன் தனது உரிமைக்காக மேற்கொள்ளும் போராட்டத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் வினோத் வி. தோந்த்ளே (வினோத் வி. தோண்ட்லே) இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பீரியாடிக் ஆக்சன் எண்டர்டெய்னர் திரைப்படத்தில், சதீஷ் நினாசத்துடன் சப்தமி கௌடா, பி. சுரேஷ், சம்பத் மைத்ரேயா, கோபாலகிருஷ்ணா தேஷ்பாண்டே, யஷ் ஷெட்டி, ரவிசங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
லவித் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பூர்ணசந்திர தேஜஸ்வி இசையமைத்துள்ளார். விருத்தி கிரியேசன் – சதீஷ் பிக்சர் ஹவுஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் வர்தன் ஹரி, ஜெய்ஷ்ணவி, சதீஷ் நினாசம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘ரைஸ் ஆஃப் அசோகா’ படத்தின் விளம்பர நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் சதீஷ் நினாசம், சப்தமி கௌடா, தயாரிப்பாளர் வர்தன் ஹரி, ஒளிப்பதிவாளர் லவித் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
தயாரிப்பாளர் வர்தன் ஹரி பேசுகையில்,
'' ரைஸ் ஆஃப் அசோகா எனும் இந்த திரைப்படம் கன்டென்ட் ஓரியண்ட்டட் மூவி. இந்தத் திரைப்படத்தை ஒட்டுமொத்த பட குழுவினரும் அர்ப்பணிப்புடன் உருவாக்கி இருக்கிறோம். உங்களின் ஆதரவை தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
இணை தயாரிப்பாளர் தேவராஜ் கிருஷ்ணப்பா பேசுகையில், '' ரைஸ் ஆஃப் அசோகா எனும் இந்த திரைப்படம் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இளைஞன் அவனுடைய உரிமைக்காக போராடுகிறான். அவனுக்கு வெற்றி கிடைத்ததா? இல்லையா? என்பது தானே படத்தின் கதை. அனைவரும் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
நடிகை சப்தமி கௌடா பேசுகையில்,
இந்த திரைப்படத்தில் அம்பிகா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். 80, 90களில் உள்ள பெண்ணாக நடித்திருக்கிறேன். அவளுக்கென்று தனியாக ஒரு கனவு இருக்கிறது. லட்சியம் இருக்கிறது. அதற்காக அவள் எப்படி போராடுகிறார்? என்பதுதான் உச்சகட்ட காட்சி. இது எனக்கு மிகவும் பிடித்தமானது. இது எனக்கு மட்டுமல்ல உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.
தமிழ்நாடு ரசிகர்கள் என் மீதும் என்னுடைய இந்த படக் குழு மீதும் ஏராளமான அன்பை செலுத்தும் படி கேட்டுக் கொள்கிறேன். இந்தப் படமும், பாடலும் அனைவருக்கும் பிடிக்கும். அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
நடிகர் சதீஷ் நினாசம் பேசுகையில்,
'' இது எனக்கு மிகப்பெரிய நிகழ்வு. இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் கன்னடத்தில் ஹீரோ. ஆனால் தமிழகத்தில் என்னை யாருக்கும் தெரியாது. இந்தப் படம் இயற்கையின் ஒத்துழைப்பின் காரணமாக தமிழிலும் வெளியாகிறது.
இந்த நாள் என் வாழ்க்கையில் மிக சிறப்பான நாள். இது என்னுடைய முன்னோர்களின் கனவு. இந்தப் படம் மிகச் சிறப்பாக இருக்கிறது.
என்னுடைய பத்து ஆண்டுகால திரை உலக பயணத்தில் பத்து அல்லது பன்னிரண்டு படங்களில் தான் ஹீரோவாக நடித்திருக்கிறேன். ஏனெனில் நான் உணர்வுபூர்வமான கதைகளை தேர்வு செய்து தான் நடிக்க ஒப்புக்கொள்கிறேன். என்னால் வருடத்திற்கு இரண்டு மூன்று படங்களில் நடிக்க முடியாது. அது ரொம்பவும் கஷ்டம். ஏனென்றால் அதற்கு ஏற்ற கதை இல்லை. அதனால் தேர்வு செய்து.. காத்திருந்து.. அதன் பிறகு படங்களில் நடிக்கிறேன்.
என் மீது உள்ள நம்பிக்கையின் காரணமாகத்தான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். ஏனெனில் இந்த கதை தமிழகம் மற்றும் கர்நாடக மாநில எல்லை பகுதியான சாம்ராஜ் நகரை கதைக்களமாக கொண்டது. அந்த மண்ணின் நிறம்.. அந்த மண்ணில் வாழும் மனிதர்களின் நிறம்.. என்னுடைய நிறம்.. ஆகிய அனைத்தும் ஒத்துப் போகிறது. இந்த தமிழகத்திற்கும் பொருத்தமானதாக இருக்கிறது. அந்த மக்கள் பேசும் பேச்சு வழக்கு கூட தமிழ் கலந்திருக்கும். தமிழ்- தெலுங்கு- கன்னடம் -என எல்லா மொழிகளும் ஒன்று தான். உணர்வுகள் ஒன்றுதான். இந்த அசோகா உங்களுடைய படம். நீங்களும் ஆதரவு தாருங்கள்.
நான் இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அதிகாரப்பூர்வமாக அடி எடுத்து வைத்திருக்கிறேன். வரவேற்பு தாருங்கள். இந்த குழுவினருக்கும் இந்த படத்திற்கும் உங்களுடைய வாழ்த்துக்களையும், ஆதரவுகளையும் தாருங்கள்.
நான் கர்நாடகாவில் வெளியாகும் எல்லா தமிழ் திரைப்படங்களையும் பார்ப்பேன். அங்கு தமிழ் படங்களுக்கென தனி ரசிகர் கூட்டமும் உண்டு. அந்த வகையில் எங்களுடைய ரைஸ் ஆஃப் அசோகா எனும் திரைப்படமும் தமிழகத்தில் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன் '' என்றார்.
‘திரௌபதி 2’க்கு ஜிப்ரானின் இசை மிகப்பெரும் பலம்
வெவ்வேறு ஜானர்களில் தனது தனித்துவமான இசையால் ரசிகர்களை கட்டிப்போடும் இசையமைப்பாளர் ஜிப்ரான், இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், நேதாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சோலா சக்கரவர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள வரலாற்றுத் திரைப்படமான ‘திரௌபதி 2’-க்கு இசையமைத்துள்ளார். உலகம் முழுவதும் நாளை (ஜனவரி 23, 2026) வெளியாக உள்ள இந்த திரைப்படத்திற்கு, ஜிப்ரானின் இசை முக்கியமான பலமாக அமைந்துள்ளது.
படம் குறித்துப் பேசிய ஜிப்ரான்,
படம் குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் பகிர்ந்து கொண்டதாவது, "நாம் வாழும் காலத்தைத் தாண்டி, கடந்த காலத்தை நினைவூட்டும் இசையை உருவாக்குவது மிகப் பெரும் சவாலாக இருந்தது. இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் மோகன் ஜி மற்றும் தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்திக்கு என் மனமார்ந்த நன்றி. ‘திரௌபதி 2’ ஒரு சாதாரண வரலாற்று திரைப்படம் அல்ல! அது நம் மக்களின் உணர்வுகள், கலாச்சாரம், வலி, கவிதை, காதல், பழிவாங்கும் உணர்வு, தேசப்பற்று ஆகிய அனைத்தையும் பிரதிபலிக்கிறது. கமல்ஹாசன் சார் நடித்த ‘உத்தம வில்லன்’ படத்தில் இசையில் பல புதிய விஷயங்களை ஆராய்ந்து கொண்டு வந்தேன். அதேபோன்று நிறைய ஆராய்ந்து இந்தப் படத்திலும் புது இசையை கொடுத்திருக்கிறேன். பிலிப் கே. சுந்தரின் அற்புதமான ஒளிப்பதிவுக்கு இணையாக பின்னணி இசையும் சிறப்பாக வந்திருக்கிறது என நம்புகிறேன். நாளை திரையரங்குகளில் படம் பார்க்க ஆவலுடன் உள்ளேன்" என்றார்.
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
வரலாறு, உணர்வு மற்றும் இசையின் கலவையுடன் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’, ஜிப்ரானின் பின்னணி இசை மூலம் ரசிகர்களுக்கு ஒரு தீவிரமான சினிமா அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நிஜ வாழ்வுக் கதைகளின் சக்தியை கொண்டாடும் Docu Fest Chennai
தென் ஆசியாவிலும் உலகளாவிய அளவிலும் உருவாகும் ஆவணப்படங்களை கொண்டாடும் முக்கிய விழாவாக Docu Fest Chennai சென்னையில் தொடங்கியுள்ளது. மறைந்துள்ள உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவும், புறக்கணிக்கப்பட்ட குரல்களுக்கு வலு சேர்க்கவும், நிஜ வாழ்க்கைக் கதைகள் வழியாக அர்த்தமுள்ள சமூக உரையாடலை உருவாக்கவும் இந்த விழா அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.
சென்னையின் கடல் மரபை நினைவூட்டும் வகையில், விழாவின் லோகோவில் இடம்பெற்றுள்ள கலங்கரை விளக்கைப் போல, ஆவணப்பட இயக்குநர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வழிகாட்டும் ஒளியாக Docu Fest Chennai செயல்பட விரும்புகிறது. வலிமையான உண்மை கதைகள் தங்களுக்கான பார்வையாளர்களை அடையும் ஒரு திறந்த வெளி நிலத்தை உருவாக்குவதே இந்த விழாவின் முக்கிய நோக்கமாகும்.
ஜனவரி 22ஆம் தேதி தொடங்கிய இந்த இரு நாள் ஆவணப்பட விழாவை, திரைப்பட இயக்குநர் பிரேம் குமார் முதன்மை விருந்தினராக தொடங்கி வைத்தார். ICAF அமைப்பைச் சேர்ந்த திரு. சிவன் கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
இந்த Docu Fest Chennai விழாவில், 12க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவான 14 ஆவணப்படங்கள் இரண்டு நாட்களாக திரையிடப்படுகின்றன. சமூக, கலாச்சார, அரசியல், மனிதநேய பார்வைகளை முன்வைக்கும் இந்த ஆவணப்படங்கள், பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
குறிப்பிடத்தக்க அம்சமாக, இந்த விழா அனைவருக்கும் இலவசமாகவும், திறந்தவையாகவும் நடத்தப்படுகிறது. சினிமாவை வெறும் பொழுதுபோக்காக அல்லாமல், சமூக மாற்றத்திற்கான ஒரு வலுவான ஊடகமாகக் காண விரும்புவோருக்கு Docu Fest Chennai ஒரு முக்கிய மேடையாக உருவெடுத்துள்ளது.
‘சிறை’ வெற்றிக்குப் பிறகு L.K. அக்ஷய் குமார் நடிக்கும் அடுத்த படம் பூஜையுடன் ஆரம்பம்!
‘சிறை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அழுத்தமான அடையாளத்தை பதிவு செய்திருக்கும் நடிகர் L.K. அக்ஷய் குமார், கதையின் நாயகனாக நடிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 13’ படத்தின் பூஜை விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தில் L.K. அக்ஷய் குமார் உடன் ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் P.A., ஷாரீக் ஹாஸன் மற்றும் ‘டியூட்’ படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், முழுமையான ஃபன் எண்டர்டெய்னராக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவை லியோன் பிரிட்டோ மேற்கொண்டு வருகிறார். இசையமைப்பை ஜென் மார்ட்டின், படத்தொகுப்பை பரத் விக்ரமன், கலை இயக்கத்தை P.S. ஹரிஹரன் கவனிக்கின்றனர். ஆடை வடிவமைப்பாளராக பிரியா பணியாற்ற, K. அருண் மற்றும் மணிகண்டன் நிர்வாக தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் S.S. லலித் குமார் இந்த படத்தை தயாரிக்க, L.K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் நேரடியாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தை, எதிர்வரும் கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, L.K. அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான ‘சிறை’ திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை 30 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, அவரது நடிப்பில் உருவாகி வரும் ‘புரொடக்ஷன் நம்பர் 13’ குறித்த புதிய அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
டோவினோ தாமஸின் பிறந்தநாளுக்கு ஐந்து மொழிகளில் வெளியான “பள்ளிச்சட்டம்பி” ஃபர்ஸ்ட் லுக்!
டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில், டோவினோ தாமஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும், பிரம்மாண்டமான தயாரிப்பான “பள்ளிச்சட்டம்பி” திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக வெளியான மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி, படத்துக்கு வலுவான கவனத்தை பெற்ற நிலையில், டோவினோ தாமஸின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு ரசிகர்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸை வழங்கியுள்ளது.
டோவினோ தாமஸின் கதாபாத்திரத்தை முழுமையாக வெளிப்படுத்தும் வகையில், ஒரு சிறப்பு பிறந்தநாள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டு, பான்–இந்தியா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
டோவினோ தாமஸ் இதுவரை ரசிகர்கள் காணாத முற்றிலும் புதிய தோற்றத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியுள்ளார். வேர்ல்ட்வைட் ஃபிலிம்ஸ் சார்பில் நௌஃபல் மற்றும் பிரிஜீஷ், சி க்யூப் ப்ரோஸ் எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சாணுக்கியா சைதன்யா சரண் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்த படம், பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஒரு காலகட்டப் பின்னணி திரைப்படமாக உருவாகியுள்ளது.
நாயகியாக கயாடு லோஹர் நடித்துள்ள இப்படத்தில், விஜயராகவன், சுதீர் கரமண, பாபுராஜ், வினோத் கெடமங்கலம், பிரஷாந்த் அலெக்சாண்டர் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1950–60கள் காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள கதைக்களம், ரசிகர்களுக்கு வித்தியாசமான சினிமா அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலையாளம் உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் திரைக்கதையை எஸ். சுரேஷ் பாபு எழுதியுள்ளார். ஒளிப்பதிவை டிஜோ டோமி, இசையமைப்பை ஜேக்ஸ் பிஜாய், எடிட்டிங்கை ஸ்ரீஜித் சரங், கலை வடிவமைப்பை திலீப் நாத் மேற்கொண்டுள்ளனர்.
இணை தயாரிப்பாளர்களாக மேகாஸ்யாம் மற்றும் தண்சீர் பணியாற்ற, உடை வடிவமைப்பை மஞ்சுஷா ராதாகிருஷ்ணன், மேக்கப்பை ரஷீத் அகமது கவனிக்கின்றனர். லைன் புரொட்யூசராக அலெக்ஸ் E. குரியன், நிதிக் கட்டுப்பாட்டாளராக அனில் அம்பல்லூர், தயாரிப்பு கட்டுப்பாட்டாளராக ராஜேஷ் மேனன் பணியாற்றியுள்ளனர்.
‘மாயபிம்பம்’ வெளியாகும் முன்பே அடுத்த படத்திற்கு ஒப்பந்தமான கே.ஜெ. சுரேந்தர்!
தமிழ் சினிமாவில் புதிய முகங்களுக்கு நம்பிக்கையுடன் வாய்ப்பளித்து, அவர்களின் படைப்பாற்றலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் தயாரிப்பு நிறுவனமாக வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தொடர்ந்து தன்னை நிரூபித்து வருகிறது. அந்த வரிசையில், “மாயபிம்பம்” திரைப்படத்தை பார்த்த தயாரிப்பாளர் ஐசரி K கணேஷ், இயக்குநர் K.J. சுரேந்தரின் நேர்மையான முயற்சியையும், குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் வகையில் கதை சொல்லிய விதத்தையும் பாராட்டி, அவருக்கு உடனடியாக புதிய பட வாய்ப்பை வழங்கியுள்ளார்.
தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை வழங்கி வரும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், இன்றைய தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. நடிகர் பிரதீப் ரங்கநாதன், நடிகர்–இயக்குநர் RJ பாலாஜி, ‘டயங்கரம்’ மூலம் இயக்குநராக அறிமுகமாகும் VJ சித்து உள்ளிட்ட பல திறமைவாய்ந்த கலைஞர்களை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமையும் இந்த நிறுவனத்துக்கே உரியது. வித்தியாசமான கதைக்களங்கள், புத்தம் புதிய ஐடியாக்கள் மற்றும் இளம் படைப்பாளிகளின் கனவுகளை நிஜமாக்கும் அணுகுமுறையே வேல்ஸ் ஃபிலிம்ஸின் அடையாளமாக மாறியுள்ளது.
“மாயபிம்பம்” படத்தை பார்த்த ஐசரி K கணேஷ்,
“ஒரு புதிய இயக்குநர், முற்றிலும் புது முகங்களை வைத்து எளிமையான ஆனால் மனதைத் தொடும் கதையை சொல்லியுள்ளார்” என்று பாராட்டியுள்ளார். இந்த பாராட்டு, படக்குழுவின் உழைப்பிற்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாகவும், இயக்குநரின் பயணத்திற்கு புதிய உற்சாகமாகவும் அமைந்துள்ளது.
ஒருபுறம் வேல்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பல புதிய படைப்புகள் உருவாகிக் கொண்டிருக்க, மறுபுறம் “மாயபிம்பம்” இயக்குநர் K.J. சுரேந்தர் இயக்கும் புதிய படம் விரைவில் தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
K.J. சுரேந்தர் தயாரித்து, எழுதி, இயக்கியுள்ள “மாயபிம்பம்” திரைப்படம் ஜனவரி 23ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. 2005 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெய்னர், தற்போது ரசிகர்களிடையே குறிப்பிடத்தக்க எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
- உலக செய்திகள்
- |
- சினிமா













