சற்று முன்
சினிமா செய்திகள்
Updated on : 01 January 1970
சமீபத்திய செய்திகள்
மெகா ஸ்டார் குடும்பத்தில் இரட்டிப்பு சந்தோஷம், ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சி அலை!
தெலுங்கு திரையுலகின் மெகா குடும்பம் இதுவரை இல்லாத அளவிலான மகிழ்ச்சியில் திளைத்துள்ளது. பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் உபாசனா கொணிதெலா தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் என இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் பிரசவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தி, மெகா ஸ்டார் சிரஞ்சீவி இல்லத்தில் இரட்டை கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவலை மெகா ஸ்டார் சிரஞ்சீவி சமூக வலைதளங்கள் மூலம் உறுதிப்படுத்தி, தனது அளவற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பிறந்துள்ள இரு குழந்தைகளும் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், உபாசனாவும் நலமுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அவரது அன்பும் நன்றியும் நிறைந்த பதிவு, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“அளவற்ற மகிழ்ச்சியுடனும் நன்றியால் நிரம்பிய மனதுடனும், @AlwaysRamCharan மற்றும் @upasanakonidela தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் என இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். தாயும் குழந்தைகளும் நலமுடன் இருக்கிறார்கள்” என சிரஞ்சீவி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ராம் சரண் – உபாசனா தம்பதி ஜூன் 20, 2023 அன்று தங்களது முதல் குழந்தையாக மகள் கிளிம்காரா கொணிதெலாவை வரவேற்றனர். தற்போது இரட்டைக் குழந்தைகளின் வருகையால், கொணிதெலா மற்றும் காமினேனி குடும்பங்களில் மகிழ்ச்சி பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த இனிய செய்தியைத் தொடர்ந்து, ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர். மெகா குடும்பத்தின் இந்த புதிய அத்தியாயம், ரசிகர்களுக்கு மேலும் பல மகிழ்ச்சியான தருணங்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
25 ஆண்டுகளுக்குப் பின் மூவர் கூட்டணி, ‘பேங் பேங்’ டைட்டில் டீசர் வெளியீடு!
KRG கண்ணன் ரவியின் பிரமாண்ட தயாரிப்பிலும், தீபக் ரவி இணைத் தயாரிப்பிலும் உருவாகும் “பேங் பேங்” திரைப்படத்தின் டைட்டில் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவின் மறக்க முடியாத கூட்டணியான நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளதே இந்த படத்தின் மிகப் பெரிய ஹைலைட்டாக அமைந்துள்ளது.
வெளியான டீசரில், ஜாம்பியாக மாறி வேகமாக ஓடும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்த, துப்பாக்கியுடன் கெத்தாக எண்ட்ரி கொடுக்கும் பிரபுதேவா – வடிவேலு காட்சிகள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுகின்றன. “ஜாம்பி” என வடிவேலு கூறும் வசனமும், பிரபுதேவா–வடிவேலு கதாபாத்திரப் பெயர்களுடன் டீசர் முடிவடையும் தருணமும், படத்தை முழுமையாக பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தை சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues) எழுதி இயக்குகிறார். பிரபுதேவா–வடிவேலு கூட்டணிக்கே உரிய நகைச்சுவை, ஸ்டைல் மற்றும் மாஸ் அம்சங்களுடன், ஒரு கலக்கலான Horror Adventure படமாக “பேங் பேங்” உருவாகி வருகிறது.
படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, H. C. வேணு ஒளிப்பதிவு செய்கிறார். ஆக்ஷன் காட்சிகளை சுரேஷ் வடிவமைக்க, எடிட்டிங்கை ஆண்டனி கையாளுகிறார். தேசிய விருது பெற்ற ‘அனிமல்’ படத்தின் சவுண்ட் டிசைனுக்காக பாராட்டப்பட்ட Sync Cinema இப்படத்தின் சவுண்ட் டிசைனை மேற்கொண்டிருக்க, தெலுங்கனா மாநில விருது பெற்ற அரவிந்த் மேனன் சவுண்ட் மிக்ஸிங்கை செய்துள்ளார்.
நடிகர் பப்லு பிரித்திவிராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம், KRG நிறுவனத்தின் 4-வது தயாரிப்பாக, மிகப் பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. தற்போது படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், முதல் கட்ட படப்பிடிப்பு இந்தோனேசியாவின் மவுண்ட் ப்ரோமோ என்ற செயலில் இருக்கும் எரிமலை பகுதியில் நடத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற நடிகர்கள் மற்றும் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், “பேங் பேங்” டைட்டில் டீசர், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
‘புரியாத புதிர்’க்கு மாநில அங்கீகாரம், சாம் CS-க்கு தமிழக அரசு சிறந்த இசையமைப்பாளர் விருது!
தமிழக அரசு சார்பில் 2016 முதல் 2022 வரை வழங்கப்பட உள்ள தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 2016-ம் ஆண்டு வெளியான ‘புரியாத புதிர்’ திரைப்படத்திற்காக முன்னணி இசையமைப்பாளர் சாம் CS அவர்களுக்கு சிறந்த இசையமைப்பாளர் என்ற மாநில விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனித்துவமான பின்னணி இசை, கதையின் மனநிலையை நுணுக்கமாக வெளிப்படுத்தும் மெலடிகள் என தனது இசை மொழியால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் சாம் CS, ‘புரியாத புதிர்’ படத்தில் உருவாக்கிய இசையால் த்ரில்லர் அனுபவத்தை மேலும் தீவிரமாக்கியதாகப் பாராட்டைப் பெற்றார். அந்தப் பாராட்டுகளுக்கே அரசின் அங்கீகாரமாக இவ்விருது அமைந்துள்ளது.
‘ஒரு இரவு’, ‘அம்புலி’ போன்ற படங்களின் மூலம் இசைத்துறையில் பயணத்தைத் தொடங்கிய சாம் CS, அதன் பின்னர் கைதி, விக்ரம் வேதா, அடங்க மறு, RDX, புஷ்பா 2, மஹாவதார் நரசிம்மா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் த்ரில்லிங் மற்றும் உணர்வுப்பூர்வமான இசையை வழங்கி தனித்த இடத்தைப் பிடித்துள்ளார்.
விருது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சாம் CS, “‘புரியாத புதிர்’ படத்திற்காக தமிழக அரசு மாநில விருது வழங்கியிருப்பது அளவற்ற மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகிறது. இது என் இசைப் பயணத்தில் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம். இந்த தருணத்தில் படக்குழுவினருக்கும், என்னுடன் பணியாற்றிய அனைத்து இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் இசைக்குழுவினருக்கும் என் நன்றிகள். இனியும் ரசிகர்களின் மனதைத் தொடும் படைப்புகளை வழங்குவேன்” என தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மட்டுமல்லாமல் பாலிவுட் உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் சாம் CS இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். குறிப்பாக ரவிமோகனின் ‘கராத்தே பாபு’, கார்த்தியின் ‘சர்தார் 2’ போன்ற முக்கிய படங்கள் அவரது வரிசையில் உள்ளன. இந்த மாநில விருது, சாம் CS-ன் இசைப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
மகேஷ் பாபு–SS ராஜமௌலி கூட்டணியின் அடுத்த மாபெரும் திரில்லர் “வாரணாசி”
இந்திய சினிமாவின் எதிர்பார்ப்பை மீறிய படங்களில் ஒன்றாக “வாரணாசி” உருவாகி வருகிறது. நடிகர் மகேஷ் பாபு மற்றும் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி கூட்டணியில் உருவாகும் முதல் படம் இது. Sri Durga Arts மற்றும் Showing Business சார்பில் K.L. நாராயணா மற்றும் S. S. கார்த்திகேயா இணைந்து தயாரித்து வருகின்றனர். இப்படத்தில் பிரியங்கா சோப்ரா மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
கடந்த நவம்பரில் நடைபெற்ற பிரம்மாண்டமான க்ளிம்ப்ஸ் நிகழ்வு, ரசிகர்களை மெய்சிலிர்க்கச் செய்தது. இந்த க்ளிம்ப்ஸில் கதையின் நாயகன் ருத்ரா காலத்தையும் நில பரிமாணங்களையும் கடந்து பயணிக்கும் காட்சிகளை வெளிப்படுத்துகிறது – திரேதாயுகம், கி.பி. 512 வாரணாசி, கி.பி. 2027, அண்டார்டிகா, ஆப்பிரிக்கா, வனாஞ்சல், திரேதாயுகம் (கிமு 7200) என தொடரும் பயணம் இதில் காணப்படுகிறது.
வித்தியாசமான விளம்பர யுக்திகளுக்கு பெயர் பெற்ற ராஜமௌலி, கடந்த சில நாட்களாக நகரங்கள் முழுவதும் பேனர் போஸ்டர்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். படத்தின் வெளியீட்டு தேதி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, 2027 ஏப்ரல் 7 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜமௌலி மற்றும் மகேஷ் பாபு, புதிய போஸ்டருடன் சமூக வலைதளங்களில் இந்த தகவலை பகிர்ந்துள்ளனர்.
படக்குழு உறுதி அளித்ததாவது, ‘வாரணாசி’ மாபெரும், வரலாற்று சிறப்புமிக்க திரையரங்கு அனுபவமாக இருக்கும். மகேஷ் பாபு தனது கனவுப் படம் என்று வர்ணித்து, இது இந்தியா மற்றும் சர்வதேச சினிமா அரங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். “குளோப்ட்ராட்டர் (Globetrotter)” மற்றும் “டைம் ட்ராட்டர் (Timetrotter)” என்ற டேக் லைன்களுடன் இந்த படம் உருவாகி வருகிறது
ஜென்-ஜி காதல் கதை “வித் லவ்” – அட்லீவின் வாழ்த்துடன் ட்ரெய்லர் வெளியீடு!
'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய காதல் திரைப்படம் “வித் லவ் (With Love)” ட்ரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்திய திரையுலகின் முன்னணி இயக்குநர் அட்லீ, தனது சமூக வலைதள பக்கத்தில் ட்ரெய்லரை பகிர்ந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜென்-ஜி தலைமுறையினரை கவரும் வகையில் உருவாகியுள்ள இந்த காதல் கதை, Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கப்படவுள்ளது. இப்படத்தை பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் தயாரித்துள்ளனர், மேலும் அறிமுக இயக்குநர் மதன் இந்தத் திரைப்பதிவை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன், ஹரிஷ் குமார், காவ்யா அனில், சச்சின் நாச்சியப்பன், சரவணன், தேனி முருகன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஒளிப்பதிவை ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, இசையமைப்பை ஷான் ரோல்டன், படத் தொகுப்பை K. சுரேஷ்குமார், கலை இயக்கத்தை ராஜ் கமல், ஆடை வடிவமைப்பை ப்ரியா ரவி கவனித்துள்ளனர்.
படத்தின் கதையில், நாயகனும் நாயகியும் பள்ளிப் பருவக் காதலின் மறைந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் பயணம் காட்டப்படுவதால், ட்ரெய்லர் அனைத்து தரப்பினரும் கவனத்தை ஈர்த்துள்ளது. டைட்டில் டீசர் மற்றும் பாடல்கள் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களால் பார்த்து, படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
“வித் லவ்” பிப்ரவரி 6 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
பார்ட் 1-ஐ மிஞ்சிய பார்ட் 2 - ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ வெற்றியின் கொண்டாட்டம்!
கே ஜே பி டாக்கீஸ் சார்பில் தயாரிப்பாளர் கே. ஜே. பாலாமணி மார்பன் தயாரிப்பில், இயக்குநரும் நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ திரைப்படம் கடந்த ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்ற இந்த வெற்றியைத் தொடர்ந்து, படக்குழுவினர் உற்சாகத்துடன் சென்னையில் வெற்றி விழாவை ஒருங்கிணைத்தனர். இந்த விழாவில் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு, வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
இந்த வெற்றி விழாவில் ஒளிப்பதிவாளர் ஜோசப் பால் பேசுகையில், '' அஸ்வின் குமாருடன் பணியாற்ற வேண்டும் என்ற போது முதலில் தயக்கம் இருந்தது. அதன் பிறகு பழகும் போது தான் அவருடைய அர்ப்பணிப்பு தெரிந்தது. படப்பிடிப்பு தளத்தில் அஸ்வின் குமார் வழங்கிய ஒத்துழைப்பு மறக்க முடியாதது. ஏழு மணிக்கு படப்பிடிப்பு என்றால் ஐந்தரை மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிடுவார். ஒரு நாள் தான் வருவார் என்று எதிர்பார்த்தால்.. ஒவ்வொரு நாளும் இதே போல் வந்தார். அவருடைய கடுமையான உழைப்பிற்கு முதலில் நான் நன்றி சொல்கிறேன்.
பவானி ஸ்ரீ யுடன் பணியாற்றும் போது ஒரு முறை கூட எனது பெயரை முழுவதுமாகவும், சரியாகவும் உச்சரித்ததில்லை.
பிரிகிடா இந்தப் படத்திற்காக நடித்த நாட்களை விட , இப்படத்தின் விளம்பர நிகழ்வுக்காக நிறைய நாட்கள் எங்களுடன் இணைந்து பயணித்திருக்கிறார்.
தயாரிப்பாளர் பாலாமணி மார்பன் நான் குறும்படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் காலகட்டத்திலேயே என்னை ஒளிப்பதிவாளராக பணியாற்ற செய்ய வேண்டும் என நினைத்தவர். இறுதியாக இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்திருக்கிறார்.
நாங்கள் பாதி தூரம் சென்ற பிறகு எங்களை கை தூக்கி ஆதரவளித்தவர் தயாரிப்பாளர் அனில்.
'மங்காத்தா'வில் குறிப்பிடுவது போல் செந்தில் சார் இறுதியாக தான் வந்தார். வந்தவுடன் இப்படம் ஜனவரி 23 வெளியாகும் என்று சொன்னார். படம் வெளியானது. இப்படத்திற்கு வெற்றி விழா நடைபெறும் என்றார். அது தற்போது நடைபெறுகிறது.
கடைசியாக வந்த ஸ்டுடென்ட் போன்றவர் ராபின். அவுட் ஆஃப் சிலபஸில் இருந்து வந்து, அனைவரையும் வென்றுவிட்டார்.
விஜய் டிவி அமருக்கு நான் மிகப்பெரிய ரசிகன். படப்பிடிப்பு தளத்தில் அவர் பேசும் ஒவ்வொரு வசனங்களுக்கும் சிரித்துக் கொண்டே இருப்போம்.
இப்படி படக் குழுவினர் அனைவரும் மறக்க இயலாத அனுபவங்களை வழங்கியதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
இந்த வெற்றி விழாவில் நடிகை சஞ்சனா திவாரி பேசுகையில், '' இந்த வெற்றி விழாவில் கலந்து கொண்டிருப்பதை மகிழ்ச்சியான தருணமாக கருதுகிறேன். ஹாட்ஸ்பாட் 2 மச் படத்தின் மீதும் அதில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் மீதும் ரசிகர்கள் அன்பு செலுத்துவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. என்னுடைய கதாபாத்திரத்திற்கு எப்படி வரவேற்பு கிடைக்கும்? என்று பதட்டத்துடன் இருந்தேன். இதற்காக எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் ,தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
நடிகை பவானி ஸ்ரீ பேசுகையில், '' இந்தப் படத்திற்கு ஊடகங்களும், பத்திரிகைகளும் வழங்கிய பேராதரவு படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. இதற்குப் பின்னர் ரசிகர்களும் திரையரங்கத்திற்கு வருகை தந்து தங்களுடைய வாய் மொழியால் படத்தை பாராட்டி கொண்டாடினர். மூன்று கதைகளுக்கும் பெரும் ஆதரவும் , வரவேற்பும் கிடைத்தது. எல்லா தரப்பு ரசிகர்களும் இப்படத்துடன் தங்களை இணைத்துக் கொண்டனர். இது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்தப் படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து எங்களுக்கு சாதகமாக பல விசயங்கள் நடைபெற்றிருக்கிறது. தற்போது கூட திருச்சி- தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் சொல்லியிருக்கிறார். இதை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நல்ல கன்டென்ட் இருந்தால் ரசிகர்கள் நிச்சயம் வரவேற்பு அளிப்பார்கள் என்பதற்கு இந்த படம் மீண்டும் ஒரு சாட்சியாகி, வெற்றி பெற்று இருக்கிறது இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.
இது போன்றதொரு வாய்ப்பை வழங்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் , தயாரிப்பாளர்கள், இணைந்து பணியாற்றிய சக நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
நடிகை பிரிகிடா சகா பேசுகையில், '' இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகி இருக்கும் மிகப்பெரிய வெற்றி படம் இது. எங்கள் திரைப்படத்திற்கு எவ்வளவு பெரிய வரவேற்பும், வெற்றியும் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
இதன் மூலம் தற்போது லைக் மைண்டட் பீப்புள் நிறைய பேர் வருகிறார்கள் என தெரிகிறது. இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இதனால் இப்படத்தில் நானும் பங்களிப்பு செய்திருக்கிறேன் என்பதில் சந்தோஷம். இதற்காக இயக்குநருக்கு நன்றி. ஒரு வெற்றி பெற்ற படத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் இந்த மேடையில் வீற்றிருக்கும் அனைவருக்கும் உள்ள எண்ணமாக இருக்கும்.
இந்த படத்தில் என் கதாபாத்திரத்தை பற்றி இயக்குநர் சொன்னபோது மிகவும் வித்தியாசமானதாக இருக்கிறதே..! ஏற்று நடிக்கலாமா? என முதலில் தயங்கினேன். இந்தப் படத்தில் ஒரு வசனம் வரும். 'நான் ஒரு லெஸ்பியன் என்று '.. இதனை பேசும்போது முதலில் ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் உணர்வு உணர்வு தான். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக இதைப்பற்றி யாரும் பேச மாட்டார்கள். சமூகத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு மதிப்பீடு இருக்கிறது. ஆனால் இது குறித்து என் கேரக்டர் பேசி இருக்கிறது என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
உடலுக்குள் நடைபெறும் மாற்றத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும்... என்பதெல்லாம் நல்ல விசயமாக இருந்தது. அதேபோல் தம்பி ராமையா பேசும் வசனங்களும் ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இருந்தது.
இதெல்லாம் சமூகத்தில் நடைபெறும் விசயங்கள் தான். ஆனால் இதனை யாரும் பேச மாட்டார்கள். இயக்குநர் விக்னேஷ் கார்த்தி இது தொடர்பாக பார்ட் 1 எடுத்து, பார்ட் டூவும் எடுத்திருக்கிறார். இவை வெற்றி பெற்றிருக்கிறது என்றால்... ரசிகர்களின் விசாலமான மனதும் ஒரு காரணம். இதனை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தப் படத்திற்குப் பிறகு.. நான் இனி நடிக்கப் போகும் கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான நம்பிக்கையை எனக்குள் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் உருவாக்கியிருக்கிறார்.
உண்மையான லவ் கிடைக்காதா? என ஏங்கிக் கொண்டிருக்கும் 90ஸ் கிட்ஸ்களுக்கு இப்படத்தில் வரும் காதல் கதை மிகவும் பிடிக்கும். இதுவரை இந்தப் படத்தை பார்க்காதவர்கள் உடனடியாக திரையரங்கத்திற்கு சென்று படத்தைப் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
நடிகர் அஸ்வின் குமார் பேசுகையில், '' இறைவனுக்கு நன்றி. கடவுள் பல ரூபங்களில் வந்து என்னை பல தருணங்களில் காப்பாற்றி இருக்கிறார். நிறைய வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கிறார். நான் இந்த பிரபஞ்சத்தை முழுமையாக நம்புகிறேன். அவர்களில் ஒருவராக எனது நண்பராக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கை நான் பார்க்கிறேன்.
அவர் என்னை சந்தித்து இந்த படத்தில் இந்த கதையை நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் சொன்னார். அவரிடம் நான் ஏராளமான சந்தேகங்களை கேட்டுக் கொண்டே இருப்பேன். அவர் ஒவ்வொரு சந்தேகத்திற்கும் பொறுமையாக எனக்கு புரியும்படி விளக்கம் அளிப்பார். இந்தப் படத்தில் என்னுடைய அறிமுகக் காட்சியும் அவருடைய ஐடியா தான். நான் இயக்குநரை முழுமையாக நம்பி ஒப்படைத்து விட்டேன். இதற்காக அவருக்கு என்னுடைய முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மிகச்சிறந்த திறமைசாலி.
இந்தப் படத்தின் வெற்றி என்னுடைய ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது. இதற்காக நான் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படக் குழுவில் பணியாற்றிய அனைவரும் பாசிட்டிவ் எனர்ஜி கொண்டவர்கள். அவர்களால்தான் இந்த வெற்றி சாத்தியமாகி, இன்று நாங்கள் வெற்றி விழாவில் மகிழ்ச்சியுடன் ஒன்றிணைந்திருக்கிறோம். இதற்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்திற்காக தயாரிப்பாளர் பேசிய சம்பளத்தை முழுமையாக வழங்கி விட்டார். நடிகராக தயாரிப்பாளர் வழங்கும் ஊதியம் என்பது எங்களுக்கு முக்கியமானது. அதற்காக தயாரிப்பாளருக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்
தயாரிப்பாளர் - நடிகர் கே.ஜே. பாலாமணி மார்பன் பேசுகையில், '' படம் வெளியாகி ஆறாவது நாளில் வெற்றி விழா கொண்டாடும் அளவிற்கு இப்படத்தை மக்கள் திரையரங்குகளில் பார்த்து கொண்டாடுகிறார்கள். வரவேற்றிருக்கிறார்கள். இதற்கு ஊடகங்களும், விமர்சனங்களும் எங்களுக்கு பேராதரவை அளித்ததுடன் ரசிகர்களை திரையரங்கிற்கு அழைத்து வந்தது. இதனால் படத்தை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாங்கள் இப்படத்தின் கதை மீது நம்பிக்கை வைத்திருந்தாலும் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. படம் வெளியான நான்கு நாட்களில் சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் 90 சதவீதத்திற்கும் மேலான பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு வருகை தந்திருந்தனர். தமிழகத்தின் தென்பகுதிகளில் 70 சதவீதத்திற்கும் மேலான பார்வையாளர்கள் திரையரங்குக்கு வருகை தந்திருந்தனர்.
அத்துடன் நாங்கள் இப்படத்திற்கான வரவேற்பு மெதுவாக நடைபெற்று அதன் பிறகு விரிவடையும் என எதிர்பார்த்தோம். ஆனால் படம் வெளியான இரண்டாவது நாளே அனைத்து திரையரங்குகளிலும் பார்வையாளர்கள் நிரம்பி வழிந்தனர்.
படம் வெளியான பிறகு நாங்கள் 15 திரையரங்குகளுக்கு ரசிகர்களின் வரவேற்பை காண சென்று இருந்தோம். அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் ரசனையும் , வரவேற்பும் ஒரே மாதிரியானதாக இருந்தது. இதன் மூலம் இப்படத்தை மக்கள் கொண்டாடுகிறார்கள் என்பதை நேரில் கண்டு மகிழ்ச்சி அடைந்தோம்.
இப்படத்தின் வெற்றிக்காக வழி விட்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அவர்களுக்கு இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கள் திரைப்படம் கிட்டத்தட்ட 200 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதனை சாத்தியப்படுத்திய விநியோகஸ்தர் 'பைவ் ஸ்டார்' செந்தில் மற்றும் அவரது குழுவினருக்கு எங்கள் நிறுவனத்தின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு அந்தப் படம் மட்டும் காரணம் அல்ல அந்தப் படம் வெளியாகும் சூழலும் ஒரு முக்கிய காரணம். இருப்பினும் இந்தப் படத்தின் வசூலைக் கடந்து படம் வெற்றி பெற்றதற்காக ரசிகர்களின் வரவேற்பினை பெற்றதற்காக குடும்பம் குடும்பமாக நண்பர்களுடன் அனைவரும் இணைந்து திரையரங்கத்திற்கு இந்தப் படத்தை பார்க்க வருகிறார்கள் என்றால்.. அதற்கு இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தன்னுடைய பங்களிப்பை 100 சதவீதம் வழங்கியிருக்கிறார் என்பதை நான் பெருமிதத்துடன் சொல்கிறேன். இதற்காக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தை இதுவரை பார்க்காதவர்கள் விரைவில் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து எங்களுக்கு தொடர் ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் '' என்றார்.
இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசுகையில், '' ஹாட்ஸ்பாட் டூ மச் படம் வெளியாகி இன்றுடன் ஆறு நாள் ஆகிறது. அதற்குள் ஏன் சக்சஸ் மீட்? என கேட்டார்கள். ஹாட்ஸ்பாட் படத்தின் முதல் பாகம் குறைவான திரையரங்குகளில் வெளியாகி, ஐந்து வாரங்கள் வெற்றிகரமாக ஓடியது. பெரும் வரவேற்பும் இருந்தது. ஹாட்ஸ்பாட் படத்தின் முதல் பாகத்தின் ஒட்டுமொத்த வசூல் எவ்வளவோ.. அதைவிட இரண்டு மடங்கு இப்படம் வெளியான நான்கு நாளில் வசூலித்திருக்கிறது. அந்த வகையில் இந்தப் படம் எங்களுக்கு வெற்றி தான். அதனால் தான் இந்தப் படத்திற்கு ஆறாவது நாளில் நம்பிக்கையுடன் வெற்றி விழாவை ஒருங்கிணைத்திருக்கிறோம். இந்த வெற்றிக்கு காரணமான ரசிகர்கள்- ஊடகங்கள் - விநியோகஸ்தர்கள்- திரையரங்கு உரிமையாளர்கள் - உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தில் என்னுடன் பணியாற்றிய படத்தொகுப்பாளர் - ஒளிப்பதிவாளர்கள்- கலை இயக்குநர் - இசையமைப்பாளர் - தயாரிப்பு நிர்வாகி - நடிகர்கள் ராபின், அஸ்வின் குமார், ஆதித்யா பாஸ்கர் ரக்சன், பிரியா பவானி சங்கர், ஆதித்யா கதிர், பவானி ஸ்ரீ, பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி மற்றும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய எல்லா திரைப்படங்களிலும் முதல் நன்றி 'குறிஞ்சி' என்பவருக்கு இருக்கும். இவர்தான் 2013 ஆம் ஆண்டில் எனக்கு இரண்டு லட்ச ரூபாயை கொடுத்து 'முதல் கனவே' எனும் என்னுடைய முதல் குறும்படத்தை தயாரித்தவர். அவர் கொடுத்த ஊக்கம் தான் இன்று ஹாட்ஸ்பாட் டூ மச் வரை தொடர்கிறது. அவருக்கு நன்றி தெரிவிப்பது என்னுடைய அனைத்து படங்களிலும் தொடரும்.
இப்படத்தின் விமர்சனங்களில் நாங்கள் இரண்டு குறிப்பிட்ட நட்சத்திரங்களின் ரசிகர்களைத்தான் சுட்டிக் காட்டி இருக்கிறோம் என்று இடம்பெற்று இருந்தது. இது தவறு. பொதுவாகவே ரசிகர்களைப் பற்றிய பார்வை தான் இது. அதனை இரண்டு நட்சத்திரங்களின் வழியாக சொன்னால் நன்றாக இருக்கும் .. எளிதாக புரியும் என்பதாகத்தான் விவரித்து இருக்கிறோம்.
டோனி ரசிகர்கள் கோலியை வசைபாடுவதும், கோலியின் ரசிகர்கள் தோனியை வசை பாடுவதும் இணையத்தில் தொடர்கிறது. ஒரு இசை அமைப்பாளரின் ரசிகர்கள் மற்றொரு இசையமைப்பாளரை விமர்சிக்கிறார்கள். இவை அனைத்தையும் ஒன்றிணைத்து தான் நாங்கள் ரசிகர்களின் கோணத்தில் அவர்களுடைய உணர்வாக பேசி இருக்கிறோமே தவிர.. குறிப்பிட்ட இரண்டு நட்சத்திரங்களின் ரசிகர்களை பற்றி நாங்கள் ஒருபோதும் எங்கும் குறிப்பிடவில்லை.
அதே சமயத்தில் தம்பி ராமையா பேசும் வசனங்கள் தொடர்பாகவும் இணையத்தில் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் விமர்சனங்கள் இடம் பிடித்திருக்கிறது. ஒரு படம் பிடித்திர
'ஆகாசம்லோ ஒக தாரா'-வில் ஸ்ருதி ஹாசன் என்ட்ரி… துல்கர் சல்மான் படத்திற்கு புதிய பரிமாணம்!
நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான் நடித்துவரும் “ஆகாசம்லோ ஒக தாரா” திரைப்பட உலகிலிருந்து, நடிகை ஸ்ருதி ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளார். Geetha Arts & Swapna Cinema வழங்க, சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படம், 2026 கோடைக்காலத்தில் பான்-இந்தியா அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தொடர்ச்சியான பிளாக்பஸ்டர் வெற்றிகளாலும், பான்-இந்தியா அளவிலான புகழாலும் உச்சத்தில் இருக்கும் துல்கர் சல்மான், அடுத்ததாக இந்த படத்தில் நடித்து வருகிறார். புதுமையான கதை சொல்லல் மற்றும் தனித்துவமான காட்சி அமைப்புகளால் பல வெற்றிப் படங்களை தந்துள்ள பவன் சடினேனி இந்தப் படத்தை இயக்குகிறார்.
புதுமுக நடிகை சாத்விகா வீரவள்ளி, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதற்கு முன்பு வெளியான புரமோக்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இதற்கிடையில், படக்குழு ரசிகர்களுக்கு ஒரு இனிய ஆச்சரியத்தை வழங்கியுள்ளது. சமீப காலமாக தேர்ந்தெடுத்த படைப்புகளில் மட்டுமே நடித்து வரும் நடிகை ஸ்ருதி ஹாசன், இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
போஸ்டரில், கண்ணாடியுடன் கீழ்நோக்கி பதிந்த தீவிரமான பார்வை, இயல்பான தோற்றம் மற்றும் உதட்டில் சிகரெட்டுடன் மேலெழும் புகை—அவை அனைத்தும் அவரது கதாபாத்திரத்தின் உணர்ச்சி ஆழத்தையும், சொல்லப்படாத கதைகளையும் வெளிப்படுத்துகின்றன.
இந்த திரைப்படத்தின் கதையோட்டத்தில், ஸ்ருதி ஹாசனின் கதாபாத்திரம் முக்கிய திருப்புமுனையாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இணைப்பு, கதையை ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்பதால், படத்தின் மீது எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, சுஜித் சாரங் ஒளிப்பதிவையும், ஸ்வேதா சாபு சிரில் தயாரிப்பு வடிவமைப்பையும் கவனிக்கின்றனர்.
தற்போது தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் “ஆகாசம்லோ ஒக தாரா”, தெலுங்கு, தமிழ், ஹிந்தி மற்றும் மலையாள மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாக தயாராகி வருகிறது.
ZEE5-ல் ‘சிறை’ மெகா சாதனை - 156 மில்லியன் பார்வை நிமிடங்கள்!
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5-இல் சமீபத்தில் வெளியான “சிறை” திரைப்படம், மிகக் குறுகிய காலத்திலேயே 156 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து, புதிய ஓடிடி சாதனையைப் படைத்துள்ளது. திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற பின்னர், ஓடிடி தளத்தில் வெளியான இப்படம், அதன் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ஆழமான கதைக்களம், வலுவான நடிப்புகள் மற்றும் உணர்வுப்பூர்வமான உருவாக்கம் காரணமாக ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Seven Screen Studio சார்பில் தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில் உருவான இப்படத்தை, அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி எழுதி இயக்கியுள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், ‘டாணாக்காரன்’ திரைப்படத்தின் இயக்குநர் தமிழ், தனது உண்மை வாழ்க்கை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார்.
ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான உணர்ச்சிப் பயணமே “சிறை” படத்தின் மையம். அதிகாரம், மனிதநேயம், மனசாட்சி ஆகியவற்றுக்கிடையிலான மோதலை நுணுக்கமாக பதிவு செய்யும் இந்த கதை, ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களை ஆழமாக பாதிக்கிறது.
நாயகனாக விக்ரம் பிரபு வலுவான நடிப்பை வெளிப்படுத்த, அவருக்கு ஜோடியாக அனந்தா நடித்துள்ளார். மேலும், தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் LK அக்ஷய் குமார் இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக, அவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவும், பிலோமின் ராஜ் எடிட்டிங்கும் படத்தின் தாக்கத்தை மேலும் வலுப்படுத்துகின்றன. பிரபு வடிவமைத்த ஸ்டண்ட் காட்சிகள், கதையின் யதார்த்தத்துக்கு கூடுதல் நம்பகத்தன்மையை வழங்குகின்றன.
திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னதாகவே இப்படத்தின் சேட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமைகளை ZEE நிறுவனம் கைப்பற்றிய நிலையில், ZEE5-ல் வெளியானதும் “சிறை” திரைப்படம் பார்வையாளர்களிடையே வேகமாகப் பரவியது. சமூக வலைதளங்களில் குவிந்த நேர்மறை விமர்சனங்களும், பாராட்டுகளும், இந்த படம் 156 மில்லியன் பார்வை நிமிடங்களை எட்டுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தன.
மண் சார்ந்த உண்மை கதைகளை தரமான உருவாக்கத்துடன் வழங்கி வரும் ZEE5 தமிழ், தொடர்ந்து வித்தியாசமான, தாக்கம் மிக்க படைப்புகளை தமிழ் பார்வையாளர்களுக்காக கொண்டு வருகிறது. அந்த வரிசையில், “சிறை”, தமிழ்த் திரையுலகின் குறிப்பிடத்தக்க ஓடிடி சாதனைகளில் ஒன்றாக தன்னை உறுதியாக பதிவு செய்துள்ளது.
உணர்வுபூர்வமான, சிந்திக்க வைக்கும் ஒரு சினிமா அனுபவத்தை நாடும் ரசிகர்கள், “சிறை” திரைப்படத்தை ZEE5 தளத்தில் தவறாமல் கண்டுகளிக்கலாம்.
சத்தமில்லா சினிமா - ஆனால் தாக்கம் அதிகம்! ‘காந்தி டாக்ஸ்’ டிரெய்லர் வெளியீடு
Zee Studios, Kyoorius Digital Pvt Ltd, Pincmoon Meta Studios மற்றும் Movie Mill Entertainment இணைந்து தயாரித்துள்ள “காந்தி டாக்ஸ்” திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி, சினிமா வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
முழுமையாக வசனங்கள் இன்றி உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், வழக்கமான சினிமா மரபுகளை உடைத்து, காட்சிகளின் வலிமை மற்றும் உணர்ச்சியின் ஆழம் மூலம் கதை சொல்லும் ஒரு துணிச்சலான முயற்சியாக திகழ்கிறது.
இன்றைய சினிமா சூழலில் ஒலி, ஆரவாரம், பிரம்மாண்டம் ஆகியவை மேலோங்கி நிற்கும் நிலையில், “காந்தி டாக்ஸ்” தன்னடக்கம், மௌனம் மற்றும் நம்பிக்கையுடன் தனது வருகையை பதிவு செய்கிறது. டிரெய்லரில் இடம்பெறும் பதற்றம் நிறைந்த மௌனங்கள், உணர்ச்சியைத் தூண்டும் காட்சிகள் மற்றும் ஆழமான பார்வைகள், வார்த்தைகள் இல்லாமலேயே பல விஷயங்களைச் சொல்லி விடுகின்றன. இது காதுகளால் மட்டுமல்ல, பார்வையாளர்களின் உள்ளுணர்வுகளாலும் கேட்க வைக்கும் ஒரு தனித்துவமான சினிமா அனுபவமாக அமைந்துள்ளது.
விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி, சித்தார்த் ஜாதவ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நுணுக்கமான, உள்ளார்ந்த நடிப்புகள் டிரெய்லரில் வெளிப்படையாக தெரிகின்றன. வசனங்கள் இல்லாததால், நடிகர்களின் முகபாவனைகளும், அவர்களின் இருப்பும் தான் கதையின் மையமாக மாறி, உணர்வுப்பூர்வமான மோதல்களுக்கு வலுவூட்டுகின்றன.
படம் குறித்த அனுபவத்தை பகிர்ந்த விஜய் சேதுபதி ..,
“வார்த்தைகள் இன்றி உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற சவாலை ‘காந்தி டாக்ஸ்’ எனக்கு அளித்தது. மௌனமே மிக வலுவான உரையாடலாக மாறும் அரிய படம் இது.” என்றார்.
படம் குறித்து அரவிந்த்சாமி கூறுகையில்..,
“சத்தத்தில் மூழ்கிய இந்த உலகில், மௌனம் இன்னும் மனசாட்சியை உலுக்கும் என்பதை ‘காந்தி டாக்ஸ்’ நினைவூட்டுகிறது. இங்கே வார்த்தைகள் விலகி நிற்க, உண்மை அமைதியாக நடந்து வருகிறது. ரஹ்மானின் மேதைமை மிக்க இசையே இத்திரைப்படத்தின் மொழியாகிறது.” என்றார்.
படத்தின் உணர்ச்சிப் பிணைப்பை பற்றி அதிதி ராவ் ஹைதாரி கூறியதாவது..,
“வார்த்தைகளை விட உணர்வுகள் தான் இதில் என்னை அதிகம் நெகிழ வைத்தது. மௌனமும், நுணுக்கமான உணர்வுகளும் ஒன்றோடொன்று அழகாக இணையும் படம் இது.”
சித்தார்த் ஜாதவ் கூறியதாவது..,
“உரையாடலின்றி இவ்வளவு வலிமையாக உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு படத்தின் அங்கமாக இருப்பது உண்மையிலேயே சிறப்பு. வார்த்தைகளைத் தாண்டி பேசும் சினிமாவின் உலகமொழியை இது மீண்டும் நினைவூட்டுகிறது.”
கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு, இசை ஜாம்பவான் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். வசனங்கள் இல்லாத இந்த உலகத்தில், இசையே கதையின் குரலாக மாறி, ஒவ்வொரு மௌனத்தையும், பதற்றத்தையும், சொல்லப்படாத எண்ணங்களையும் ஆழமான உணர்ச்சியுடன் உயர்த்துகிறது.
ஏ.ஆர். ரஹ்மானின் பிரம்மாண்ட கச்சேரிக்கு மூன்று நாட்களுக்கு முன்பாக, இப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ள படக்குழு, பாரம்பரிய சினிமா மற்றும் இசையின் சங்கமத்தை கொண்டாடும் வகையில், ஒரு துணிச்சலான மற்றும் மரபு மீறிய விளம்பர அணுகுமுறையை தேர்ந்தெடுத்துள்ளது. இந்த முயற்சி, படத்தின் தத்துவம், கலை நோக்கம் மற்றும் அனுபவபூர்வமான சினிமா மொழியை தெளிவாக பிரதிபலிக்கிறது.
“காந்தி டாக்ஸ்” மூலம், Zee Studios மற்றும் தயாரிப்பாளர்கள், விதிமுறைகளைத் தாண்டி, நுணுக்கமான நடிப்பையும், மௌனத்தின் சக்தியையும் கொண்டாடும் படங்களுக்கு தங்கள் உறுதியான ஆதரவை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளனர். இந்திய சினிமாவின் எல்லைகளை விரிவுபடுத்தும் இந்த திரைப்படத்தை, தமிழகம் முழுவதும் ரோமியோ பிக்ச்சர்ஸ் சார்பில் ராகுல் வெளியிடுகிறார்.
“காந்தி டாக்ஸ்” திரைப்படம் 2026 ஜனவரி 30 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
என் அடுத்த படம் ‘கைதி 2’ தான் – சம்பள சர்ச்சை, LCU, ரஜினி–கமல் படம் குறித்து லோகேஷ் விளக்கம்
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ், தனது எதிர்கால திரைப்படத் திட்டங்கள், தற்போதைய பணிகள் மற்றும் சமூக வலைதளங்களில் தன்னை குறித்து வெளியான எதிர்மறை விமர்சனங்கள் குறித்து தெளிவான விளக்கம் அளிக்கும் வகையில் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
இந்த சந்திப்பில் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், “ஒவ்வொரு படத்தின் வெளியீட்டுக்குப் பிறகும் ஊடகங்களை சந்திப்பது என்னுடைய வழக்கம். ‘கூலி’ படத்திற்குப் பிறகு இதை செய்ய வேண்டும் என நினைத்தேன். இப்போது தான் அது சாத்தியமானது” என்றார்.
‘கூலி’ திரைப்படம் 35 நாட்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியதாக குறிப்பிட்ட லோகேஷ், வசூல் விவரங்கள் குறித்து பேச விரும்பவில்லை என்றும், படம் லாபகரமானது என தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் உறுதி செய்துள்ளதாக தெரிவித்தார். “ஆயிரம் விமர்சனங்களை கடந்து அந்த படம் 35 நாட்கள் ஓடியதே மக்களின் ஆதரவு தான்” என ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
சமூக வலைதள விமர்சனங்கள் குறித்து பேசிய அவர், “அந்த விமர்சனங்கள் என்னை யோசிக்க வைத்தது. ரசிகர்கள் என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள உதவியது. அதை என் அடுத்த படங்களில் பயன்படுத்த முயற்சி செய்வேன்” என்றார்.
ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணைப்பு படம் குறித்து பேசும் போது, “ ‘கூலி’ வெளியான நேரத்தில் இருவரையும் சந்தித்தேன். 46 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கும் படம் எனக்கு இயக்க வாய்ப்பாக கிடைத்தது மிகப்பெரிய விஷயம். ஆனால் அவர்கள் இருவரும் தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால், மென்மையான திரைக்கதை வேண்டும் என நினைத்தனர். அந்த ஸ்டைலில் படம் இயக்குவது எனக்கு வராது என்பதால் மரியாதையுடன் விலகி கொண்டேன்” என விளக்கம் அளித்தார்.
‘கைதி 2’ தாமதமானது சம்பள விவகாரம் காரணமாக என்ற செய்தியை மறுத்த லோகேஷ், “ஒரு இயக்குநரின் சம்பளத்தை சந்தையும் தயாரிப்பாளரும் தான் தீர்மானிக்கிறார்கள். கடந்த வாரமே ‘கைதி 2’ தயாரிப்பாளரை சந்தித்து பேசியுள்ளேன். என்னுடைய அடுத்த படம் ‘கைதி 2’ தான்” என உறுதிபட தெரிவித்தார்.
LCU குறித்து, “LCU என்ற பெயரை நான் வைக்கவில்லை. ரசிகர்கள்தான் உருவாக்கினார்கள். ‘கைதி 2’, ‘விக்ரம் 2’, ‘ரோலக்ஸ்’ ஆகியவை என் கமிட்மெண்ட்கள். அவை இல்லாமல் நான் நகர முடியாது. அதனால் LCU தொடரும்” என்றார். அல்லு அர்ஜுன் நடிப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் படம் இயக்க இருப்பதும், அமீர் கானுடன் பேச்சுவார்த்தை தொடர்வதும் அவர் உறுதிப்படுத்திய முக்கிய தகவல்களாக அமைந்தது.
மொத்தத்தில், சமூக வலைதளங்களில் எழுந்த பல்வேறு கேள்விகளுக்கும் நேரடியாக பதிலளித்து, தனது எதிர்கால பாதை குறித்த தெளிவான செய்தியை லோகேஷ் கனகராஜ் இந்த சந்திப்பின் மூலம் ரசிகர்களுக்கும் திரையுலகிற்கும் தெரிவித்தார்.
- உலக செய்திகள்
- |
- சினிமா













