சற்று முன்
சினிமா செய்திகள்
விதார்த் நடிக்கும் வித்தியாசமான கதையம்சத்துடன் 'கார்பன்'.
Updated on : 10 January 2022
விதார்த் நடிப்பில் வரவிருக்கும் 25-ஆவது படம் 'கார்பன்'.விஜய் ஆண்டனியை வைத்து 'அண்ணாதுரை' படத்தை இயக்கிய சீனிவாசன்தான் இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார்.
விதார்த்துக்கு போலீஸ் ஆக வேண்டும் என்பதுதான் லட்சியம்.அதற்கான தீவிர முயற்சியில் இருப்பவரின் வாழ்வில் ஒரு சம்பவம் நடக்கிறது அதிலிருந்து மீண்டாரா இலட்சியத்தை அடைந்தாரா என்பதுதான் கதை.
ஒரு இரவு விதார்த்துக்கு கனவு வருகிறது.அந்தக் கனவில் விதார்த்தின் அப்பாவுக்கு கார் ஆக்சிடென்ட் நடக்கிறது.இது வெறும் கனவுதானே என்று நினைக்கும் விதார்த் வாழ்வில் அடுத்தநாளே அப்படியொரு சம்பவம் நடக்கிறது. கனவில் பார்த்தமாதிரியே ஆக்சிடெண்ட் நடக்கும் இடம்,கார் எல்லாமே ஒரே மாதிரி இருக்கிறது. அப்பாவின் உயிரைக் காப்பாற்ற தேவையான பணமும் இல்லாமல்,விபத்து ஏற்படுத்திய நபரின் முகம் தெரியாமல் அவர் படும் பாடுதான் 'கார்பன்' .

பெரும்பாலும் இரவில் நடக்கிற கதை. ஐம்பதுக்கும் மேற்பட்ட லொகேஷன்களில் படமாக்கப்பட்டிருக்கும். இந்தப்படத்தில் தான்யா பாலகிருஷ்ணன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். தவிர,இயக்குனர் மாரிமுத்து, மூணாறு ரமேஷ், பிச்சைக்காரன் மூர்த்தி, ராம்சன் வினோத் சாகர், டவுட் செந்தில், பேபி ஜானு பிரகாஷ் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - விவேக் ஆனந்தம் சந்தோஷ், இசை - சாம் சி எஸ்,எடிட்டர் பிரவின் கே.எல்.
"முதல் படத்துக்கும் இந்தப் படத்துக்கும் ஏன் இவ்வளவு இடைவெளி.!? " என்று இயக்குனரிடம் கேட்டபோது " இப்போல்லாம் இயக்குனர் , நடிகர் ,தயாரிப்பாளர் எல்லோருமே காம்பினேஷன் இருந்தால்தான் படம் பண்ணவே வர்றாங்க. கதையை மட்டும் நம்பி வர்றது சிலபேர்தான்! அப்படி எனக்கு கிடைத்தவர்தான் 'பெஞ்ச்மார்க் பிலிம்ஸ் ' ஜோதி முருகன் - பாக்கியலட்சுமி இரண்டு பேரும். ரெண்டு பேருமே நண்பர்கள்தான். வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்.லாக்டவுனுக்கு ஊருக்கு வந்திருந்த போது, இந்தக் படத்தை நானே தயாரிக்கிறேன் என்று ஆரம்பிச்சு இதோ ரிலீஸ்க்கு ரெடி படம் பார்த்த விநியோகஸ்தர்கள் மற்றும் திரை அரங்கு உரிமையாளர்கள் கொடுத்த ஊக்கமும் ஆதரவும் என் படத்துக்கு கிடைத்த வெற்றி".என்கிறார்.
சமீபத்திய செய்திகள்
அக்கு சிகிச்சையின் மகத்துவத்தைப் பேசும் சீனு ராமசாமி
மருந்தில்லா மருத்துவத்தின் மகத்துவத்தை பாதுகாக்கும் நோக்கில், அகவெளி அக்கு சிகிச்சையாளர்கள் சங்கத்தின் மாநில மாநாடு இன்று விமரிசையாக தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், முன்னாள் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மேலும், இந்நிகழ்வின் ஒரு பகுதியாக சக்தி பிலிம் பேக்டரி உரிமையாளர் சக்திவேலன், அக்கு தெரபிஸ்ட் அசோசியேஷனுக்கான யூடியூப் சேனலை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் சக்தி பிலிம் பேக்டரி உரிமையாளர் சக்திவேலன் அக்கு சிகிச்சையாளர்கள் மாநில மாநாட்டை வாழ்த்தி பேசியதாவது,
“அகவெளி பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த அன்பழகன் மற்றும் மனோகரன் அண்ணன்களுக்கு நன்றி. சமுதாயத்தை சீர்திருத்தும் பணியை தொடர்ந்து இங்கிருப்பவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அன்பழகன் மற்றும் மனோகரன் இருவரும் உறவினர்களாக இருந்து எனக்கு நண்பர்கள் போன்று நெருக்கமானவர்கள். இவர்கள் மூலம் ஏங்கல்ஸ் ராஜா அறிமுகம் கிடைத்தது. இவர் சமுதாயத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர். மருந்தில்லாத உணவு என்பதைத் தாண்டி, மருந்தில்லாத மருத்துவம் என்ற நிலைக்கு இன்று வந்திருக்கிறார். இதற்கு நம்முடன் இருப்பவர்களின் ஆதரவும் மிக முக்கியம். அக்குசிகிச்சையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அடுத்த நிலைக்கு வந்திருக்கிறார்கள். இந்திய அளவில் அகவெளி ஆலமரம் போல வளர்ந்து நிற்க வேண்டும். இதன் பெருமையை எட்டி நின்று என்னால் உணர முடிகிறது. இன்றைய தேதியில் நல்லது செய்வதுதான் கடினமான ஒன்று. அந்த தடைகளை தாண்டி இந்த இயக்கத்தை அடுத்தடுத்து எடுத்துச் செல்லுங்கள். மனிதனின் வலியை போக்குவதைவிட சிறந்த ஒன்று கிடையாது. அந்த இடத்தில் அக்கு இருப்பது மகிழ்ச்சி” என்றார்.
அக்கு பங்சர் சிகிச்சையாளர்கள் சங்க தலைவர் ஏங்கல்ஸ் ராஜா,
“அக்கு சிகிச்சையாளர்கள் சங்கத்தினுடைய முதல் மாநில மாநாடு இது. நாற்பது நாட்களில் இதனை ஏற்பாடு செய்திருக்கிறோம். அறம்சார் வாழ்வே நலம் தரும் மருந்து என்பதே மாநாட்டின் நோக்கம். இந்த மாநாடு நம் அனைவருக்கும் தேவையானது. அக்குபங்சர் மருத்துவம் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் இருக்கிறது. அதை அனைவருக்கும் எடுத்து செல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அக்குபங்சர் அறிவியல்பூர்வமான தா என்ற கேள்வி பலரிடம் இருக்கிறது. நிச்சயமாக! உலகம் முழுவதும் இந்த சிகிச்சை முறை நடைமுறையில் இருக்கிறது. இந்தியாவும் 2017ல் இதை முழுமையான மருத்துவமுறையாக அங்கீகரித்திருக்கிறது. நமக்கு ஆதரவாக அரசியல் நிலைப்பாடுகளும் நம்மை சுற்றி இருக்கிறது. இந்த மருத்துவம் மக்களிடம் அதிகம் போய் சேரும்போது அதிகம் நன்மை கிடைக்கும்” என்றார்.
இயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது,
“மனித உடலில் ஏற்படுகிற வலியை நீக்குபவர்கள்தான் கடவுள். அவர்கள்தான் மருத்துவர்கள். தமிழ்நாட்டில் மட்டும்தான் மருத்துவர் ஆவது கடினம். ஏனெனில் வருகிறவர்கள் எல்லாருமே நோயாளிகள்தான். மருத்துவர்கள் சொல்வதை முழுதாக கேட்பதில்லை. மருந்தும் இல்லாமல், மந்திரமும் இல்லாமல் என் 75 வயது பாட்டியை அக்கு சிகிச்சை நடக்க வைத்தது. அப்போதிருந்து இதன் மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு. மனிதனின் ஆசையை கட்டுப்படுத்த புத்தர் சொன்ன விஷயம் இந்த ஊசியாகக் கூட இருக்கலாம். சில மருத்துவத்தின் பின்விளைவுகளால் கிராமப்புற மக்கள் அவதிப்படுகிறார்கள். அவர்களை எல்லாம் இந்த சிகிச்சை சென்று சேர வேண்டும் என்பது என் கோரிக்கை. என்னை இந்த விழாவிற்கு அழைத்ததற்கு நன்றி” என்றார்.


'ஜீவாவின் கம்பேக் வெற்றி' - வெற்றி விழாவில் நடிகர் மகிழ்ச்சி!
கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரித்த, நடிகர் ஜீவா நடிப்பில், இயக்குநர் நிதிஷ் சஹாதேவ் இயக்கத்தில் வெளிவந்த 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பொங்கல் திருநாளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே எதிர்பாராத அளவில் வரவேற்பைப் பெற்று, வணிக ரீதியிலும் விமர்சன ரீதியிலும் பெரும் வெற்றியை பெற்றது. இதன் பின்னணி வெற்றி விழா சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் 'தலைவர் தம்பி தலைமையில்' படக்குழுவினருடன் மத்திய இணை அமைச்சர் திரு சுரேஷ் கோபி, தமிழ் திரையுலக முன்னணி நட்சத்திர நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் பல பிரபல விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி பேசுகையில்,
''எனக்கு ஏழு வயதாக இருக்கும்போதே தந்தையை இழந்தேன். பிறக்கும் போதே பணக்காரராக பிறந்து.. பிறகு ஏழையாகி.. பிறகு மீண்டும் மீண்டும் ஏழையாகி, அதன் பிறகு பணக்காரனாகி இருக்கிறேன். இந்த வெற்றிக்கு எத்தனை முறை கேட்டாலும் இதைத்தான் சொல்வேன் உழைப்பு.. உழைப்பு... குடும்பம்.
நான் சிறிய வயதிலிருந்து நானும் நன்றாக இருக்க வேண்டும். என்னைச் சார்ந்த மற்றவர்களும் என்னைவிட நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவன். அதேபோல் தற்போது நான் இருக்கும் துபாயில் நல்ல பெயரை சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் தான் என்னுடைய எல்லா செயல்பாடுகளும் துபாயில் தான் உள்ளது. ஏனெனில் நான் இருந்த இடத்திற்கு... வளர்ந்த இடத்திற்கு... விசுவாசமாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன்.
இந்த நிகழ்வு இந்தியாவில் இன்று.. இந்த தேதியில்.. நடப்பதற்கு என் ஊர் மக்கள் தான் காரணம். அத்துடன் நடிகர் ஜீவாவும் சென்னைக்கு வர வேண்டும் என்று பலமுறை கேட்டுக்கொண்டார். ஒவ்வொருவரையும் மறுத்து வந்த நான் இந்த முறை ஆச்சரியப்படுத்தும் வகையில் அவரை நான் நேரில் வந்து சந்தித்தேன்.
மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு நான் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளேன். இந்த வருகையில் மகிழ்ச்சியை அள்ளித் தந்தது இந்தப் படத்தின் பணியாற்றிய அனைவரும் தான். ஜீவாவிற்கும் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் முதலில் எங்களுடைய குடும்ப நண்பராகத்தான் பழகத் தொடங்கினார்.
இது 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் வெற்றி விழா என்பதை விட எங்களுடைய கண்ணன் ரவி குழுமத்தின் முத்திரையை பிரபலமாக்கிய வெற்றி விழாவாக பார்க்கிறேன். இதற்காக இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் இதில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒருவர் வெற்றி பெற வேண்டும் என்றால் அவருடைய குடும்பம் நல்லவிதமாக அமைய வேண்டும். அது அமைந்தால் வெற்றி உறுதி. அந்த வகையில் இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி.
சினிமாஸ்கோப்பில் முதன் முதலாக வெளியான 'ராஜராஜசோழன்' எனும் படத்தை பார்த்து தான் சினிமா பிரமிப்பு என்னுள் ஏற்பட்டது. அதன் பிறகு நிறைய புத்தகங்களை படிப்பேன். அறிவுப்பூர்வமாக பேசுபவர்களின் பேச்சை கேட்டு ரசிப்பேன். அண்மையில் கூட சீமானின் பேச்சை கேட்டு ரசித்திருக்கிறேன்.
தமிழில் வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்களை பார்ப்பேன். இன்றும் கூட இரவு 12 மணியளவில் என்னுடைய வீட்டிற்கு சென்றால்.. ஏதேனும் ஒரு மொழியில் ஒரு திரைப்படம் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கும். அதனால் தான் இந்த கதையை தேர்வு செய்யும் போதும் கூட முழு கதையையும் கேட்டோம்.
நான் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடமும் முழு கதையையும் சொல்லுமாறு கேட்டுக் கொள்வேன். ஏனென்றால் அந்தக் கதை எனக்குப் பிடித்து இருந்தால் தான் மற்றவர்களுக்கும் பிடிக்கும் என்ற எண்ணம். கதை சொல்பவர்கள் கதை சொல்வது எனக்கு பிடிக்கவில்லை என்றால்.. இதைவிட சிறப்பான கதையை தயார் செய்து கொண்டு வாருங்கள். தொடர்ந்து திரைப்படங்களை தயாரிக்கும் எண்ணம் இருக்கிறது. திட்டமும் இருக்கிறது. என்றுதான் நம்பிக்கையுடன் பதில் அளிப்பேன்.
இந்தக் கதையை கேட்ட உடனேயே பிடித்து விட்டது. யாரும் இதுவரை தொடாத சப்ஜெக்ட். அத்துடன் இந்த கதை மீது ஜீவாவிற்கும் நம்பிக்கை இருந்தது. அவருடைய கேரியரில் இந்தப் படம் வித்தியாசமாக இருக்கும் என்றும் நானும் நம்பினேன். இந்தப் படம் எனக்கு 80 சதவீதம் தான் திருப்தியை தந்தது. இதை நான் இயக்குநரிடமே தெரிவித்து விட்டேன். இன்னும் சிறிது காமெடி காட்சிகள் இருந்தால்.. மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்திருக்கும்.
இந்த படத்திற்கு குறுகிய நாளில் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தி மக்களிடம் சென்றடைய செய்திருந்தோம். ஏனெனில் இன்று நல்ல படங்கள் வெளியானால்.. அவை திரையரங்குகளில் மூன்று அல்லது நான்கு நாட்கள் தான் வெற்றிகரமாக ஓடுகிறது. ரசிகர்கள் அப்படத்தை பற்றி கேள்விப்பட்டு திரையரங்கத்திற்கு செல்வதற்குள் அப்படம் திரையரங்கத்தில் இருந்து எடுத்து விடுகிறார்கள். நான் இந்தப் படத்திற்கு ஒரே நாளில் அனைத்து வகையான விளம்பரங்களையும் செய்து படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தோம்.
இனி என்னுடைய எல்லா திரைப்படங்களும் ஒரே நாளில் உலகம் முழுவதும் ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகும். இது என்னுடைய திட்டங்களில் ஒன்று. இந்த உலகத்தில் எந்தெந்த இடங்களில் தமிழர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் என்னுடைய படங்களை திரையிடுவேன்.
என்னுடைய குறிக்கோள் பணம் அல்ல நல்ல படத்தை எங்களுடைய நிறுவனம் கொடுத்தது என்ற நற்பெயருக்காக தான் கடுமையாக உழைத்து வருகிறோம். ஒரே தருணத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களை உருவாக்கி வருவதால் வெற்றி தோல்வி குறித்து கவலைப்படாமல் பணியாற்றி வருகிறோம் '' என்றார்.
*இணை தயாரிப்பாளர் தீபக் ரவி பேசுகையில்,"
''மிகவும் மகிழ்ச்சி. இயக்குநர் நிதிஷ் கதை சொல்லும் போது கன்டென்ட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படமாக உருவான பிறகு அவருடைய உழைப்பு என்னை வியக்க வைத்தது. நானும் அப்பாவும் கதை கேட்கும்போது யார் ஹீரோ என்று கேட்க மாட்டோம். முதலில் கதையை தான் கேட்போம். அதன் பிறகு அந்த கதைக்கு யார் பொருத்தமாக இருப்பார் என நாங்கள் விவாதிப்போம். தமிழில் திரைப்படம் தயாரிப்பது என்பது எங்கள் மனதிற்கு நெருக்கமானது. ஏனென்றால் தாய் மொழியும் கூட. அதனால்தான் தமிழ் திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இந்தப் படத்தின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
நடிகர் ஜீவா பேசுகையில்,
'' மேடையில் என்னுடன் இருக்கும் படக்குழுவினர் அனைவரும் நான்கு ஐந்து மாதங்கள் குமுளியில் ஒன்றாக குடும்பம் போல் தங்கி இருந்தோம். அனைவரும் ஒன்றிணைந்து நல்ல மனதுடன் இந்தப் படத்தில் பணியாற்றினோம். இந்த படம் வெளியாகி அனைவருடைய மனதிலும் இடம் பிடித்திருக்கிறது. தமிழ் மக்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தான் பணியாற்றினோம். படப்பிடிப்பு அனுபவங்களை ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம். தலைவர் தம்பி தலைமையில் படத்திற்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்து இருப்பதற்கு அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றியதும் ஒரு காரணம். அதனால் இதற்கு முழு முதல் காரணமான இயக்குநர் நிதிஷுற்கு முதல் நன்றி. அவர்தான் இந்த படத்தின் ஹீரோ. அவர்தான் இங்கு கூடியிருக்கும் ஒவ்வொரு கலைஞர்களிடம் இருக்கும் திறமையை வெளியே கொண்டு வந்தார்.
எல்லோரும் இதனை சின்ன படம் என்று சொல்கிறார்கள். ஆனால் எங்களை பொறுத்தவரை இது மிகப்பெரிய படம். இயக்குநர் முதலில் இந்தப் படத்தை இரண்டு மணி நேரத்திற்குள் நிறைவடைந்து விடும் என்று தான் சொன்னார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளத்திற்காக இன்னும் சற்று கூடுதலான நேரத்திற்கு படத்தின் கதை இருக்க வேண்டும் என்று விவாதித்தோம். படப்பிடிப்பு தளத்தில் நடிகர்களின் பங்களிப்பை பார்த்தவுடன் ஒவ்வொரு காட்சியையும் இயக்குநரும், கதாசிரியர்களும் மேம்படுத்துவார்கள்.
இதைத்தொடர்ந்து எங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய குமுளி மக்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஏனெனில் இந்த படம் சிறப்பாக வரவேண்டும்... விஸ்வரூப வெற்றியை பெற வேண்டும்... என்று சொல்லி, அதற்காக அந்த ஊர் மக்கள் இறைவனை பிரார்த்தித்து கிடா வெட்டினார்கள். படப்பிடிப்பு நிறைவடையும் தருணத்தில் குடும்பமாக பழகி, பிரியும் தருணத்தில் நாங்கள் இதுவரை இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததில்லை என்று சொல்லி நெகிழ்ச்சியுடன் கண்ணீர் விட்டனர். அது மறக்க முடியாத அனுபவம்.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் பெரியவர்.. அந்த முதிய வயதிலும் எங்களுக்கு உச்சகட்ட காட்சியில் அர்ப்பணிப்புடன் கூடிய பங்களிப்பை வழங்கி எங்களை ஆச்சரியப்படுத்தினார். அவரைப் பார்த்தவுடன் எனக்கும் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று நம்பிக்கை ஏற்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு ஏதேனும் அசௌகரியத்தை ஏற்படுத்தியிருந்தால்.. அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் கிடைத்த அனுபவங்கள் அனைத்தும் நல்ல நினைவுகளாக பதிவாகி இருக்கிறது. தமிழில் நிறைய வெற்றி பெற்ற படங்களில் நடித்திருந்தாலும்.. இது போன்றதொரு பிரம்மாண்ட வெற்றி படத்தை எனக்கு வழங்கிய இயக்குநர் நிதேஷுக்கு மீண்டும் நன்றி.
இந்தப் படத்தைப் பற்றி சுவாரசியமான விசயங்களை சொல்லுங்கள் என்று என்னிடம் கேட்டால் எல்லா சம்பவங்களும் சுவாரசியமானது தான் என்று சொல்வேன்.
இந்த படத்திற்கும் படக்குழுவினருக்கும் தயாரிப்பாளர்களான கண்ணன் ரவி மற்றும் அவருடைய மகன் தீபக் ரவி ஆகிய இருவரும் மிகப்பெரிய ஆதரவை அளித்தனர்.
துபாயில் உள்ள அவருடைய அலுவலகத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் வருகை தந்திருந்தனர். அவரை சந்தித்து இப்படத்தின் கதையை முழுவதுமாக இயக்குநர் சொன்னார். அதைக் கேட்டுவிட்டு உறுதியாக இப்படத்தை உருவாக்கலாம் என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.
இந்தத் தருணத்தில் நடிகர் வி டி வி கணேசுக்கும் நன்றி. அவர்தான் இயக்குநரை எனக்கு அறிமுகப்படுத்தினார். கதையைக் கேட்டவுடன் அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று என்னுடைய விருப்பத்தை தெரிவித்து விட்டேன். உடனே அட்வான்சும் கொடுத்து விட்டேன். அதன் பிறகு தான் தயாரிப்பாளரை தேடத் தொடங்கி, அதன் பிறகு தயாரிப்பாளர் கண்ணன் ரவியை சந்தித்தோம்.
வெங்கட் பிரபு மூலமாக கண்ணன் ரவியை கிரிக்கெட் போட்டி ஒன்றினை நட்சத்திரங்களுடன் இணைந்து பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் முதலில் அவரை தொடர்பு கொண்டேன். அதற்காக அவர் மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்து கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசிக்க வைத்தார். அந்த மைதானத்தில் கண்ணன் ரவி மற்றும் அவரது மகன் தீபக் ரவி ஆகியோரின் விருந்தோம்பல் எங்களை வியக்க வைத்தது. அங்கிருந்துதான் தயாரிப்பாளருடனான எனது நட்பு தொடங்கியது.
என்னுடைய தந்தையார் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சவுத்ரி இதுவரை 99 திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். இதுவரை அவருக்கு யாரும் பாராட்டு விழா நடத்தியதில்லை. துபாய் தமிழ் சங்கத்தில் கண்ணன் ரவி அவர்களின் ஆதரவுடன் அவருக்கு பெரிய பாராட்டு விழா நடைபெற்றது. அதுவே எனக்கு மிகப்பெரிய சாதனையாக இருந்தது. நான் வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் என்னுடைய தந்தைக்கு இப்படி ஒரு பிரம்மாண்டமான பாராட்டு விழா நடத்தியதற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். விழாவிற்கு வருகை தந்திருக்கும் என்னுடைய தந்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சௌத்ரிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார்.
நடிகர் சுரேஷ் கோபி பேசுகையில்,
''இப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் நானும் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். நடிகர் ஜீவாவிற்கு இது கம்பேக் படமாக அமைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தயாரிப்பாளர் சூப்பர் குட் சௌத்ரியை அவருடைய நண்பரான குட் நைட் மோகன் காலத்திலிருந்து எனக்கு நன்றாக தெரியும். என்னுடைய சில படங்களுக்கும் சௌத்ரி சார் நிதி உதவி செய்திருக்கிறார்.
எனக்கு தயாரிப்பாளர் கண்ணன் ரவியை கடந்த எட்டு மாதங்களாகத் தான் தெரியும். ஆனால் எட்டு வருஷம் பழக்கத்தை போல் மிகவும் அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் பழகி, இப்போது நாங்கள் நெருக்கமான நண்பர்களாகி விட்டோம்.
நான் நடித்த ஜானகி வெர்சஸ் கேரளா ஸ்டேட்ஸ் படத்திற்கு துபாயில் டிக்கெட் எல்லாம் ஸ்பான்சர் செய்தது இவர்தான் என பிறகு தான் எனக்கு தெரிந்தது. பிறகு மற்றொரு நிகழ்ச்சிக்காக துபாய்க்கு சென்ற போது அந்த நிகழ்ச்சிக்கும் இவர்தான் ஸ்பான்சர். துபாயில் ஏதேனும் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகள் நடந்தால் அதற்கு முக்கிய காரணமாக கண்ணன் ரவி திகழ்கிறார். கடந்த வாரம் கூட துபாயில் இருந்தபோது.. இந்த நிகழ்ச்சியை பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் சொல்லவில்லை. துபாயில் வாழும் இந்தியர்களுடைய நிகழ்ச்சி ஒன்று டெல்லியில் நடைபெற்றது. அதற்கும் இவர்தான் ஸ்பான்சர். இன்று வர முடியாத சூழல் இருந்தாலும் கண்ணன் ரவி கேட்டுக்கொண்டதற்காக இங்கு வருகை தந்திருக்கிறேன். ஜீவா நடிப்பில் வெளியான 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். நான் என்னுடைய திரைப்படங்களின் வெற்றி விழாவில் கலந்து கொள்வதே கடினம். ஆனால் தமிழ் படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி. '' என்றார்.
படப்பிடிப்புக்கு முன்பே நடிகர் ஏகன் படத்திற்கு கிடைத்த பெரிய அங்கீகாரம்!
வலுவான கதைகளைக் கொண்ட திரைப்படங்களை உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் முன்னணி ஓடிடி தளமான நெட்ஃபிலிக்ஸ், நடிகர் ஏகன் நடிப்பில் உருவாகும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகளை படப்பிடிப்பு தொடங்குவதற்குமுன்பே கைப்பற்றியுள்ளது. இது படத்தின் கதையிலும் குழுவின் திறமையிலும் நெட்ஃபிலிக்ஸ் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
‘ஹைக்கூ’ படத்தின் படப்பிடிப்பு இன்று (பிப்ரவரி 1, 2026) கேரள மாநிலம் இடுக்கியில் எளிய பூஜையுடன் தொடங்கியது. ‘பேரன்பு’, ‘தரமணி’ போன்ற பாராட்டப்பட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ராம் முதல் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்து, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இப்படத்தை யுவராஜ் சின்னசாமி இயக்க, விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் D. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிக்கின்றனர். ‘ஜோ’ திரைப்பட இயக்குநர் ஹரி ஹரன் ராம் இப்படத்திற்கு கூடுதல் திரைக்கதை எழுதுகிறார். படப்பிடிப்பு தொடங்கும் முன்பே நெட்ஃபிலிக்ஸ் டிஜிட்டல் உரிமைகளை வாங்கியிருப்பது ‘ஹைக்கூ’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. இப்படம் குறித்த மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் சூழலுக்கு ஏற்ற வகையில் 4K டால்பி ஒலியுடன் மீண்டும் வெளியாகும் ‘அமைதிப்படை’
தளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ மற்றும் புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த ‘கேப்டன் பிரபாகரன்’ ஆகிய படங்களை அதிநவீன தொழில்நுட்பத்தில் மறுவெளியீடு செய்து பெரும் வெற்றியை பெற்ற ஸ்பேரோ சினிமாஸ் நிறுவனர் கார்த்திக் வெங்கடேசன், தற்போது புரட்சி தமிழன் சத்யராஜ் – மணிவண்ணன் வெற்றிக் கூட்டணியின் அரசியல் சூப்பர் ஹிட் படமான *‘அமைதிப்படை’*யை மீண்டும் திரையரங்குகளுக்கு கொண்டு வர உள்ளார்.
வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் சூழல் பரபரப்பாக இருக்கும் நிலையில், இன்றைய அரசியல் நிலவரத்துக்கும் அப்படியே பொருந்தும் வகையில் 32 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘அமைதிப்படை’ திரைப்படம், 4K தொழில்நுட்பம் மற்றும் டால்பி ஒலியுடன் பிரம்மாண்டமாக மறுவெளியீடு செய்யப்படுகிறது.
இந்த படம் தமிழ்நாடு மட்டுமல்லாமல், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் உள்ள 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய கார்த்திக் வெங்கடேசன்,
"சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எப்படி 'பாட்ஷா' மற்றும் 'படையப்பா' படங்களோ, தளபதி விஜய்க்கு எப்படி 'கில்லி'யோ, அஜித் குமாருக்கு எப்படி 'மங்காத்தா' திரைப்படமோ, புரட்சி தமிழன் சத்யராஜுக்கு 'அமைதிப்படை' அப்படி ஒரு மைல்கல் படம். அரசியல் ஞானியான மணிவண்ணன் இயக்கியுள்ள இப்படம் எக்காலத்துக்கும் பொருந்தும். ஜென் ஜி (Gen Z) தலைமுறையினரும் ரசித்து பார்க்கும் வகையில் 'அமைதிப்படை' அமைந்துள்ளது. அதில் வரும் காட்சிகளும் வசனங்களும் இன்றைய அரசியல் நிகழ்வுகளுக்கும் அப்படியே ஒத்துப்போகும் வகையில் உள்ளன. எனவே இப்படத்தை இப்போது எடுக்கப்படும் புது படங்கள் போன்று அதிநவீன 4கே தொழில்நுட்பத்தில் டால்பி ஒலியுடன் வெளியிடுவதில் மகிழ்ச்சி," என்றார்.
சத்யராஜ், மணிவண்ணன், சுஜாதா, கஸ்தூரி, ரஞ்சிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘அமைதிப்படை’ திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். 1994-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இந்த அரசியல் திரைப்படம், விரைவில் ஸ்பேரோ சினிமாஸ் சார்பில் மீண்டும் திரையரங்குகளில் அரசியல் அதிர்வை ஏற்படுத்த தயாராக உள்ளது.

‘நீ நடி கண்ணா’ என்ற ஒரு வார்த்தை என் பயங்களை உடைத்தது – நடிகர் அபிஷந்த் ஜீவிந்த்
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் அனஸ்வரா ராஜன் நடித்துள்ள “வித் லவ் (With Love)” திரைப்படம், 2026 பிப்ரவரி 6-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற முன் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை, ஊடக மற்றும் பண்பலை நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..,
உடை வடிவமைப்பாளர் ப்ரியா ரவி பேசியதாவது..,
இப்படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பது மகிழ்ச்சி. வாய்ப்பு தந்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. அபிஷன், அனஸ்வரா உங்கள் எல்லோருடன் வேலை பார்த்தது இனிமையான அனுபவம். ஒரு குடும்பம் போல இருந்த குழுவிற்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
எடிட்டர் சுரேஷ் பேசியதாவது..,
வித் லவ் படத்தில் என்னை அறிமுகப்படுத்தி வைத்தது மதன், வாய்ப்பு தந்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. படம் அருமையாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள். நன்றி
ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா பேசியதாவது…,
இப்படத்தின் கதையை மிக அழகாக ஸொன மதனுக்கு நன்றி. கதை சொன்னபோது மறுக்கவே தோணவில்லை. திரையிலும் மிக அழகாக வந்துள்ளது. தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் மேடம், மகேஷ் இருவருக்கும் நன்றிகள். அபிஷந்த், அனஸ்வரா, மற்றும் நடிகர் குழுவிற்கு நன்றி. படத்தை எடுக்கும் போது ஸ்கூல் நினைவுகள் எல்லாம் வந்தது. படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகர் ஹரீஷ் பேசியதாவது…,
எனக்கு மதன் ரொம்ப நாளா தெரியும். அபிஷந்தும் நானும் முன்னாடியே ஒன்றாக வேலை செய்துள்ளோம். மதன் எனக்கு கால் பண்ணி இந்த கதை சொல்லிட்டு, *“அபிஷந்த் இதில் நடிக்கிறார்”*னு சொன்னதுமே…எனக்கு சொல்ல வார்த்தையே கிடைக்கல. ரொம்ப சந்தோஷமா இருந்தது. மதன் எனக்கு கொடுத்த ரோல் உண்மையிலேயே சூப்பராக இருந்தது. இந்த படத்தில் நான் நடித்தது மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படக்குழுவிற்கும், மதனுக்கு, மகேஷ் அண்ணா, சௌந்தர்யா மேம் – எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. நீங்க எங்களுக்கு கொடுத்த சப்போர்ட் எங்களுக்கு ரொம்பவே முக்கியமானது. அனைவருக்கும் நன்றி.
நடிகர் சச்சின் பேசியதாவது..
ஹரி சொன்ன மாதிரி, இந்த படம் ஒரு குடும்ப படம் மாதிரி தான். ஷூட்டிங்க்கு போற மாதிரி இல்லாம, தினமும் காலைல சுற்றுலாவுக்கு போற மாதிரி ஃபீல் இருந்தது. மதன் உட்கார்ந்து சிரிச்சுக்கிட்டே வேலை செய்வார்.மகேஷ் அண்ணா, சௌந்தர்யா மேடம் எல்லா சின்ன சின்ன விஷயங்களுக்கும் பெரிய ஆதரவாக இருந்ததற்கு நன்றி. ஷூட்டிங் ஸ்பாட்டில் நாங்கள் கொண்டாடியதை, திரையரங்கில் நீங்களும் கொண்டாடுவீர்கள் எண நம்புகிறேன். என் உடன் நடித்த நடிகர்கள், பிரியா உட்பட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. இந்த படத்தை பார்க்கும்போது ஒரு பாஸிடிவ் எனர்ஜி உங்களுக்கும் வந்து சேரும். நன்றி
நடிகை காவ்யா பேசியதாவது..,
இது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாள், மிக முக்கியமான தருணம். இப்படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பது மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை வழங்கிய மதன், தயாரிப்பாளர்கள் மகேஷ் அண்ணா, சௌந்தர்யா மேடம் ஆகியோருக்கு நன்றி. என்னுடன் இணைந்து நடித்த அபிஷந்த், அனஸ்வரா, சச்சின், ஹரிஅனைவருக்கும் என் நன்றிகள். கண்டிப்பாக இப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
பாடலாசிரியர் மோகன்ராஜன் பேசியதாவது
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சௌந்தர்யா மேடம் பாடல் எல்லாம் நன்றாக வந்துள்ளது என சொன்னார்கள். நன்றி. அபி முதன் முதலில் டூரிஸ்ட் ஃபேமிலி படக்கதை சொன்ன போதே வியந்தேன் அவர் சீக்கிரமே ஹீரோவாக மாறுவார் என நினைத்தேன் ஆனல் அடுத்த படத்திலேயே ஆகிவிட்டார். மதனை டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு முன்பிருந்தே தெரியும். அவர் ரசனையும் என் ரசனையும் ஒன்றாக இருக்கும். இப்படத்தில் உமா தேவி ஒரு பாடல் எழுதியுள்ளார் அதுவும் நன்றாக வந்திருக்கும் என நம்புகிறேன். இப்படத்தில் எனக்கு ஷான் ரோல்டன் இசையில் அற்புதமான பாடல்கள் அமைந்துள்ளது அவருடன் மீண்டும் மீண்டும் வேலை பார்க்க ஆசைப்படுகிறேன். அனஸ்வரா படம் பார்க்கும் எல்லோரும் எனக்கும் இப்படி பெண் கிடைத்தாள் எப்படி இருக்கும் என நினைப்பார்கள். அற்புதமாக நடித்திருக்கிறீர்கள். இப்படம் இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி.
இயக்குநர் தேசிங் பெரியசாமி பேசியதாவது..,
சிவாஜி திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில்தான் தயாரிப்பாளர் மகேஷ்ராஜ் அவர்களை முதன்முறையாக சந்தித்தேன். அன்றிலிருந்து நாங்கள் நல்ல நண்பர்களாகிவிட்டோம். அப்போது இவர் இப்படியொரு திறமையான, முன்னணி தயாரிப்பாளராக வளர்வார் என்று நான் நினைக்கவே இல்லை” இப்போது அற்புதமான படங்கள் செய்கிறார். சௌந்தர்யா மேடம் இந்தப் படத்தை ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டுமென, ஒவ்வொரு அம்சத்தையும் பார்த்து பார்த்து செய்துள்ளார். அவரின் அந்த நேர்மை காரணமாகவே இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்”. இயக்குநர் மதன் அவர்களின் முதல் படம் போலவே தெரியவில்லை. மிகச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். அபிஷந்த் அபாரமான நடிப்பை வழங்கியுள்ளார். எதிர்காலத்தில் அவர் ஒரு பெரிய ஹீரோவாக வருவார். அனஸ்வரா ராஜன் மிக அருமையாக நடித்துள்ளார் . ஷான் ரோல்டன் மிக அழகான இசையைத் தந்துள்ளார். படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பேசியதாவது..,
வித் லவ் ஒரு பக்காவன ஹிட் திரைப்படம். அபிஷந்த் அனஸ்வரா ஜோடி, மிகவும் க்யூட்டாக இருக்கிறது. காவ்யா அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.இந்தப் படத்தின் எடிட்டிங் சிறப்பாக இருக்கிறது. அவரது முதல் படம் போலவே தெரியவில்லை. எடிட்டருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த திரைப்படம் நிச்சயம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இயக்குநர் சிபி சக்கரவர்த்தி பேசியதாவது..,
படம் பார்த்துவிட்டேன் மிக அருமையாக உள்ளது. சௌந்தர்யா மேடம் பெரிய ஹீரோவை வைத்து இப்படத்தை எடுத்திருக்கலாம். ஆனால் அவர் இந்த புது டீமை நம்பி தயாரித்துள்ளார். தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் என்னிடம் இந்தப் படம் எப்படி இருக்கிறது என்று கேட்டார். நான் அவரிடம், “படம் அருமையாக இருக்கிறது; பணம் மழையாகப் பொழியப் போகிறது” என்று சொன்னேன். அதை கேட்ட உடனே தயாரிப்பாளர் கனவு காண ஆரம்பித்துவிட்டார். இயக்குநர் மதன் மிகவும் நம்பிக்கை தரும் இயக்குநராக இருக்கிறார். இன்றைய இளைஞர்கள் இந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையிலான படமாக இது இருக்கும்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தயாரிப்பாளர் அருண் விஷ்வா பேசியதாவது..,
ஒரு உண்மையான சினிமா ரசிகனுக்கு, படம் மூலம் கிடைக்கும் பணத்தை விட, ஒரு நல்ல படத்தை பார்த்த பிறகு மனதில் உருவாகும் திருப்திதான் பெரியது. அந்த படத்தை பார்த்து, அதை மனதில் அசைபோட்டு யோசிக்கும் ஒரு நிறைவு கிடைக்கும். அந்த உணர்வை நான் சிறை படத்தை பார்த்த பிறகு அனுபவித்தேன். அதே உணர்வு வித் லவ் படத்தை பார்த்த பிறகும் மீண்டும் கிடைத்தது. தயாரிப்பாளர் மகேஷ்ராஜ் தொடர்ந்து புதுமுக இயக்குநர்களுக்கு ஆதரவளித்து வருகிறார். மகேஷ் போன்ற தயாரிப்பாளர்கள் வெற்றி பெறும்போதுதான், மேலும் மேலும் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். ஆகவே, இப்படிப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு நாம் அனைவரும் முழுமையான ஆதரவு வழங்க வேண்டும். தயாரிப்பாளர் சௌந்தர்யா மேடமுக்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நடிகர் மணிகண்டன் பேசியதாவது..,
நான் இரண்டு நாள் முன்னால் இந்தப் படத்தை பார்த்தேன். உண்மையிலேயே படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காரணம், இதோட சிம்பிளிஸிட்டி. சின்ன சின்ன எமோஷன்ஸை எவ்வளவு அழகா, பிரமாண்டமா படமாக்கியிருக்காங்கன்னு பார்க்கும்போது ஆச்சர்யமா இருந்தது. பெர்ஃபார்மன்ஸ், ரைட்டிங், சினிமேட்டோகிராஃபி, எடிட்டிங்—எல்லாமே ஸ்கிரிப்ட்டுக்காக வேலை செய்திருக்கிறார்கள். எதுவுமே ஸ்கிரிப்ட்டை கெடுக்காமல் மிக அழகாக இணைந்திருந்தது இந்தப் படத்தோட பெரிய பலம். அபிஷந்த் நடிப்பு , அனஸ்வராவின் நடிப்பு, ஜாஃபர் பண்ணிய கேரக்டர், அனிஷா ரோல்—எல்லாமே ரொம்ப பிரமாதம். குறிப்பா ஒரு சீன், இரண்டு நாள் கழிச்சும் மனசை விட்டு போக வில்லை. இயக்குநர் மதன், மோகன் ராஜ் ஐயா, ஷான் ஐயா, புரொட்யூசர்ஸ்—எல்லாருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த வெற்றிகள் தொடர்ந்து வரட்டும் வரணும். இந்த படம் ஒரு பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,
இந்தப் படத்தில் பணியாற்றிய ஒருவராகச் சொல்கிறேன், இந்த படம் பல காரணங்களுக்காக எனக்கு மிகவும் நெருக்கமானது. டூரிஸ்ட்ஃபேமிலி படத்தின் கதையை முதலில் அபிஷன் சொல்ல வந்த போது, கொஞ்சம் தயக்கமாக இருந்தார். ஆனால் கதை சொல்ல ஆரம்பித்ததும், அவர் ஒரு புதிய ஆளாக மாறிவிட்டார். ஒவ்வொரு காட்சியையும் நடித்துக் காட்டுவார். கண்டிப்பாக ஒரு நடிகராக அவர் மிகப் பெரிய உயரத்திற்கு செல்வார். ஒரு பெண் கதாபாத்திரத்திற்காக நான் விசில் அடிப்பேன் என்று நான் நினைத்ததே இல்லை. ஆனால் இந்தப் படத்தில் அனஸ்வராவின் நடிப்பு என்னை அவரின் ரசிகனாக மாற்றிவிட்டது. எனக்கு ரொம்-காம் படங்கள் மிகவும் பிடிக்கும். ஆனால் இவ்வளவு ஆழமான விஷயத்தை பேசிக்கொண்டே, அதே நேரத்தில் லேசான, ரசிக்கத்தக்க எண்டர்டெய்னராக உருவான ஒரு ரோம்-காம் படமாக இப்படம் இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. படம் மிக அருமையாக வந்துள்ளது. சௌந்தர்யா ரஜினிகாந்த் மேம், ரஜினி சார்க்கு மகளாக இருப்பது அத்தனை எளிதல்ல. அவருக்கு எந்தவிதமான ஆடம்பரமும் இல்லை. சினிமா துறையில் எனக்கு கிடைத்த ஒரு உண்மையான நண்பர் அவர். அவருக்கு என் நன்றி. இப்படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.
இயக்குநர் மதன் பேசியதாவது..,
இந்தப் படத்திற்கு உறுதுணையாக நின்ற முழு உதவி இயக்குநர்கள் குழுவிற்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் அபிஷந்தின் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் பணியாற்றினேன். அப்போது அவர் அந்தப் படத்தில் வேலை செய்து கொண்டிருந்த சமயத்தில், என்னுடைய இந்தக் கதையை வாசித்தார். கதையைப் படித்த பிறகு, ‘ரொம்ப நல்ல ஸ்கிரிப்ட்’ என்று சொன்னார். நான் அவரிடம் இந்தப் படத்தில் நாயகனாக நடிப்பீர்களா என்று கேட்டபோது, அதை லைட்டாக எடுத்துக்கொண்டு, ‘கதை நல்லா இருக்கு… ஒரு நல்ல நடிகரை நடிக்க வை’ என்று சொன்னார். அந்த நேரத்தில் அவர் தனது முதல் படத்தின் ரிலீஸுக்காக ஒரு இயக்குநராகவே பெரிய மன அழுத்தத்தில் இருந்தார். அதற்குப் பிறகு, நாயகனைத் தேட ஆரம்பித்தேன். பலரைப் பார்த்தோம்… ஆனால் எதுவுமே சரியாக அமையவில்லை. இதற்கிடையில் டூரிஸ்ட்ஃபேமிலி படம் வெளியானது, அதன்பிறகு அபிஷந்த் ஒரு பெரிய இயக்குநராக உருவெடுத்தார். அதனால் அவரை மீண்டும் அந்த கதாபாத்திரத்திற்காக அணுக கூட எனக்குத் தயக்கமாக இருந்தது. .ஒரு நாள் நான் மனம் தளர்ந்த நிலையில் இருந்தபோது, என் நண்பர் பாலாவை சந்தித்தேன். ஸ்கிரிப்ட்டை மதிப்பிடுவதில் அவரை நான் மிகவும் உயர்வாக மதிக்கிறேன். அவர் என் ஸ்கிரிப்ட்டை வாசித்து, மிகவும் பாராட்டினார். அதே நேரத்தில், ‘இந்த கதைக்கு அபிஷந்த்தான் சரியான தேர்வு’ என்று சொன்னார். அதற்கு நான், ‘இப்போ அவர் பெரிய இயக்குநர் ஆகிட்டாரே’ என்று கூறினேன். அதற்கு பாலா, ‘நான் உன் சார்பாக அவரிடம் பேசுகிறேன்’ என்றார். பாலா பேசினதும், அபிஷந்த் மிக சந்தோசமாக ஒப்புக் கொண்டார். ஆனால், ‘முதலில் மதனுக்கு ஓகேவா கேளுங்க’ என்று பாலாவிடம் சொன்னார். நான் முழு மனதோடு சம்மதம் தெரிவித்தேன்.அபிஷந்தை நாயகனாக முடிவு செய்த பிறகு, தயாரிப்பாளர் மகேஷ் அண்ணாவை சந்தித்து இந்தப் படத்தை தயாரிக்க கேட்டோம். அவர் ஸ்கிரிப்ட்டை மிகவும் ரசித்தார். ஆனால், ‘இந்தப் படத்தை நான் சௌந்தர்யா ரஜினிகாந்த் மேடம் உடன்தான் செய்யப்போகிறேன். அவருக்கு ஸ்கிரிப்ட் பிடித்தால்தான் நான் தயாரிப்பேன்’ என்று கூறினார்.அதற்கு பிறகு, சௌந்தர்யா மேடமிடம் கதை சொல்ல ஆரம்பித்தோம். இரண்டாம் பாதியை நான் சொல்ல ஆரம்பிப்பதற்குள், ‘இந்தப் படத்தை நாம பண்ணலாம்’ என்று அவர் சொன்னது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. உடனே பரபரப்பாக ஆரம்பித்தோம், ஒரே வேகத்தில் படம் முடிந்துவிட்டது. எல்லோரது உழைப்பு தான் காரணம். மேனேஜர் பிரசாந்த், சுரேஷ் எனக்கு மிக உதவியாக இருந்தார்கள். எல்லோரும் தங்கள் சொந்தப்படம் போல வேலை பார்த்தார்கள். ஷான் ரோல்டன் மிக அற்புதமான இசையைத் தந்துள்ளார். அபிஷந்திற்கு என்னைப் பிடிக்கும், அவர் என்னை உடனே படம் செய்யுங்கள் என ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். அவர் எனக்கு மிக நெருங்கிய நண்பராகிவிட்டார். அனஸ்வரா மிக நன்றாக நடித்துள்ளார். இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகை அனஸ்வரா ராஜன் பேசியதாவது..,
“என் முழு குழுவிற்கும் ஒரு பெரிய நன்றியை சொல்லிக்கொள்கிறேன். மதன் என்னிடம் கதை சொல்ல வரும் போது, ஒரு காட்சியை படமாக்கி காட்டினார் அது எனக்கு மிகவும் பிடித்தது உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். இப்படத்தில் என்னுடன் நடித்த அனைவரும் மிகச்சிறப்பான ஒத்துழைப்பைத் தந்தனர். காவ்யா உங்களை தமிழ் ரசிகர்கள் நிச்சயம் மனதார காதலிப்பார்கள்.இந்த குழு என்னை நிறைய சிரிக்க வைத்தது. இந்த சினிமா துறையும், இந்த நகரமும் எனக்கு இன்னும் அதிகமாக பிடிக்கக் காரணமாக இருந்தது இந்த அனுபவம் தான். சௌந்தர்யா மேடம் எனக்கு ஒரு பெரிய அக்கா போல அன்பும் ஆதரவையும் வழங்கினார்.
மதன் நான் வேலை செய்த இயக்குநர்களில் மிகவும் க்யூட்டானவர். அதே சமயம், அவர் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தவர், எனக்கு அவர் தந்த மோனிஷா பாத்திரம் ரொம்பவே பிடிக்கும். அந்த கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. மோனிஷா, சத்யா இடையேயான கெமிஸ்ட்ரி திரையில் வேலை செய்ததற்குக் காரணம், திரைக்கு வெளியே நடிகர் அபிஷந்த் உடன் எனக்கு இருந்த நட்பு தான். மிகச்சிறந்த ஒத்துழைப்பு தந்த அபிஷந்திற்கு நன்றி. படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. வித் லவ் பிப்ரவரி 6 ஆம் தேதி வருகிறது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான் பேசியதாவது..,
“8 மாதங்களுக்கு பிறகு மீடியாவை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. நாங்கள் ஒரு நல்ல படத்தை உருவாக்கியிருக்கிறோம். அதை பிப்ரவரி 6-ஆம் தேதி மக்களிடம் கொண்டு செல்கிறோம். மக்கள் இந்தப் படத்தை ஆதரித்து, பாதுகாப்பார்கள் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு இருக்கி<
மெகா ஸ்டார் குடும்பத்தில் இரட்டிப்பு சந்தோஷம், ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சி அலை!
தெலுங்கு திரையுலகின் மெகா குடும்பம் இதுவரை இல்லாத அளவிலான மகிழ்ச்சியில் திளைத்துள்ளது. பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் உபாசனா கொணிதெலா தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் என இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் பிரசவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தி, மெகா ஸ்டார் சிரஞ்சீவி இல்லத்தில் இரட்டை கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவலை மெகா ஸ்டார் சிரஞ்சீவி சமூக வலைதளங்கள் மூலம் உறுதிப்படுத்தி, தனது அளவற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பிறந்துள்ள இரு குழந்தைகளும் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், உபாசனாவும் நலமுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அவரது அன்பும் நன்றியும் நிறைந்த பதிவு, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“அளவற்ற மகிழ்ச்சியுடனும் நன்றியால் நிரம்பிய மனதுடனும், @AlwaysRamCharan மற்றும் @upasanakonidela தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் என இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். தாயும் குழந்தைகளும் நலமுடன் இருக்கிறார்கள்” என சிரஞ்சீவி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ராம் சரண் – உபாசனா தம்பதி ஜூன் 20, 2023 அன்று தங்களது முதல் குழந்தையாக மகள் கிளிம்காரா கொணிதெலாவை வரவேற்றனர். தற்போது இரட்டைக் குழந்தைகளின் வருகையால், கொணிதெலா மற்றும் காமினேனி குடும்பங்களில் மகிழ்ச்சி பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த இனிய செய்தியைத் தொடர்ந்து, ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர். மெகா குடும்பத்தின் இந்த புதிய அத்தியாயம், ரசிகர்களுக்கு மேலும் பல மகிழ்ச்சியான தருணங்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
25 ஆண்டுகளுக்குப் பின் மூவர் கூட்டணி, ‘பேங் பேங்’ டைட்டில் டீசர் வெளியீடு!
KRG கண்ணன் ரவியின் பிரமாண்ட தயாரிப்பிலும், தீபக் ரவி இணைத் தயாரிப்பிலும் உருவாகும் “பேங் பேங்” திரைப்படத்தின் டைட்டில் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவின் மறக்க முடியாத கூட்டணியான நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளதே இந்த படத்தின் மிகப் பெரிய ஹைலைட்டாக அமைந்துள்ளது.
வெளியான டீசரில், ஜாம்பியாக மாறி வேகமாக ஓடும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்த, துப்பாக்கியுடன் கெத்தாக எண்ட்ரி கொடுக்கும் பிரபுதேவா – வடிவேலு காட்சிகள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுகின்றன. “ஜாம்பி” என வடிவேலு கூறும் வசனமும், பிரபுதேவா–வடிவேலு கதாபாத்திரப் பெயர்களுடன் டீசர் முடிவடையும் தருணமும், படத்தை முழுமையாக பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தை சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues) எழுதி இயக்குகிறார். பிரபுதேவா–வடிவேலு கூட்டணிக்கே உரிய நகைச்சுவை, ஸ்டைல் மற்றும் மாஸ் அம்சங்களுடன், ஒரு கலக்கலான Horror Adventure படமாக “பேங் பேங்” உருவாகி வருகிறது.
படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, H. C. வேணு ஒளிப்பதிவு செய்கிறார். ஆக்ஷன் காட்சிகளை சுரேஷ் வடிவமைக்க, எடிட்டிங்கை ஆண்டனி கையாளுகிறார். தேசிய விருது பெற்ற ‘அனிமல்’ படத்தின் சவுண்ட் டிசைனுக்காக பாராட்டப்பட்ட Sync Cinema இப்படத்தின் சவுண்ட் டிசைனை மேற்கொண்டிருக்க, தெலுங்கனா மாநில விருது பெற்ற அரவிந்த் மேனன் சவுண்ட் மிக்ஸிங்கை செய்துள்ளார்.
நடிகர் பப்லு பிரித்திவிராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம், KRG நிறுவனத்தின் 4-வது தயாரிப்பாக, மிகப் பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. தற்போது படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், முதல் கட்ட படப்பிடிப்பு இந்தோனேசியாவின் மவுண்ட் ப்ரோமோ என்ற செயலில் இருக்கும் எரிமலை பகுதியில் நடத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற நடிகர்கள் மற்றும் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், “பேங் பேங்” டைட்டில் டீசர், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
‘புரியாத புதிர்’க்கு மாநில அங்கீகாரம், சாம் CS-க்கு தமிழக அரசு சிறந்த இசையமைப்பாளர் விருது!
தமிழக அரசு சார்பில் 2016 முதல் 2022 வரை வழங்கப்பட உள்ள தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 2016-ம் ஆண்டு வெளியான ‘புரியாத புதிர்’ திரைப்படத்திற்காக முன்னணி இசையமைப்பாளர் சாம் CS அவர்களுக்கு சிறந்த இசையமைப்பாளர் என்ற மாநில விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனித்துவமான பின்னணி இசை, கதையின் மனநிலையை நுணுக்கமாக வெளிப்படுத்தும் மெலடிகள் என தனது இசை மொழியால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் சாம் CS, ‘புரியாத புதிர்’ படத்தில் உருவாக்கிய இசையால் த்ரில்லர் அனுபவத்தை மேலும் தீவிரமாக்கியதாகப் பாராட்டைப் பெற்றார். அந்தப் பாராட்டுகளுக்கே அரசின் அங்கீகாரமாக இவ்விருது அமைந்துள்ளது.
‘ஒரு இரவு’, ‘அம்புலி’ போன்ற படங்களின் மூலம் இசைத்துறையில் பயணத்தைத் தொடங்கிய சாம் CS, அதன் பின்னர் கைதி, விக்ரம் வேதா, அடங்க மறு, RDX, புஷ்பா 2, மஹாவதார் நரசிம்மா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் த்ரில்லிங் மற்றும் உணர்வுப்பூர்வமான இசையை வழங்கி தனித்த இடத்தைப் பிடித்துள்ளார்.
விருது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சாம் CS, “‘புரியாத புதிர்’ படத்திற்காக தமிழக அரசு மாநில விருது வழங்கியிருப்பது அளவற்ற மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகிறது. இது என் இசைப் பயணத்தில் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம். இந்த தருணத்தில் படக்குழுவினருக்கும், என்னுடன் பணியாற்றிய அனைத்து இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் இசைக்குழுவினருக்கும் என் நன்றிகள். இனியும் ரசிகர்களின் மனதைத் தொடும் படைப்புகளை வழங்குவேன்” என தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மட்டுமல்லாமல் பாலிவுட் உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் சாம் CS இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். குறிப்பாக ரவிமோகனின் ‘கராத்தே பாபு’, கார்த்தியின் ‘சர்தார் 2’ போன்ற முக்கிய படங்கள் அவரது வரிசையில் உள்ளன. இந்த மாநில விருது, சாம் CS-ன் இசைப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
மகேஷ் பாபு–SS ராஜமௌலி கூட்டணியின் அடுத்த மாபெரும் திரில்லர் “வாரணாசி”
இந்திய சினிமாவின் எதிர்பார்ப்பை மீறிய படங்களில் ஒன்றாக “வாரணாசி” உருவாகி வருகிறது. நடிகர் மகேஷ் பாபு மற்றும் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி கூட்டணியில் உருவாகும் முதல் படம் இது. Sri Durga Arts மற்றும் Showing Business சார்பில் K.L. நாராயணா மற்றும் S. S. கார்த்திகேயா இணைந்து தயாரித்து வருகின்றனர். இப்படத்தில் பிரியங்கா சோப்ரா மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
கடந்த நவம்பரில் நடைபெற்ற பிரம்மாண்டமான க்ளிம்ப்ஸ் நிகழ்வு, ரசிகர்களை மெய்சிலிர்க்கச் செய்தது. இந்த க்ளிம்ப்ஸில் கதையின் நாயகன் ருத்ரா காலத்தையும் நில பரிமாணங்களையும் கடந்து பயணிக்கும் காட்சிகளை வெளிப்படுத்துகிறது – திரேதாயுகம், கி.பி. 512 வாரணாசி, கி.பி. 2027, அண்டார்டிகா, ஆப்பிரிக்கா, வனாஞ்சல், திரேதாயுகம் (கிமு 7200) என தொடரும் பயணம் இதில் காணப்படுகிறது.
வித்தியாசமான விளம்பர யுக்திகளுக்கு பெயர் பெற்ற ராஜமௌலி, கடந்த சில நாட்களாக நகரங்கள் முழுவதும் பேனர் போஸ்டர்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். படத்தின் வெளியீட்டு தேதி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, 2027 ஏப்ரல் 7 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜமௌலி மற்றும் மகேஷ் பாபு, புதிய போஸ்டருடன் சமூக வலைதளங்களில் இந்த தகவலை பகிர்ந்துள்ளனர்.
படக்குழு உறுதி அளித்ததாவது, ‘வாரணாசி’ மாபெரும், வரலாற்று சிறப்புமிக்க திரையரங்கு அனுபவமாக இருக்கும். மகேஷ் பாபு தனது கனவுப் படம் என்று வர்ணித்து, இது இந்தியா மற்றும் சர்வதேச சினிமா அரங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். “குளோப்ட்ராட்டர் (Globetrotter)” மற்றும் “டைம் ட்ராட்டர் (Timetrotter)” என்ற டேக் லைன்களுடன் இந்த படம் உருவாகி வருகிறது
ஜென்-ஜி காதல் கதை “வித் லவ்” – அட்லீவின் வாழ்த்துடன் ட்ரெய்லர் வெளியீடு!
'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய காதல் திரைப்படம் “வித் லவ் (With Love)” ட்ரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்திய திரையுலகின் முன்னணி இயக்குநர் அட்லீ, தனது சமூக வலைதள பக்கத்தில் ட்ரெய்லரை பகிர்ந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜென்-ஜி தலைமுறையினரை கவரும் வகையில் உருவாகியுள்ள இந்த காதல் கதை, Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கப்படவுள்ளது. இப்படத்தை பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் தயாரித்துள்ளனர், மேலும் அறிமுக இயக்குநர் மதன் இந்தத் திரைப்பதிவை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன், ஹரிஷ் குமார், காவ்யா அனில், சச்சின் நாச்சியப்பன், சரவணன், தேனி முருகன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஒளிப்பதிவை ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, இசையமைப்பை ஷான் ரோல்டன், படத் தொகுப்பை K. சுரேஷ்குமார், கலை இயக்கத்தை ராஜ் கமல், ஆடை வடிவமைப்பை ப்ரியா ரவி கவனித்துள்ளனர்.
படத்தின் கதையில், நாயகனும் நாயகியும் பள்ளிப் பருவக் காதலின் மறைந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் பயணம் காட்டப்படுவதால், ட்ரெய்லர் அனைத்து தரப்பினரும் கவனத்தை ஈர்த்துள்ளது. டைட்டில் டீசர் மற்றும் பாடல்கள் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களால் பார்த்து, படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
“வித் லவ்” பிப்ரவரி 6 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
- உலக செய்திகள்
- |
- சினிமா














