சற்று முன்
சினிமா செய்திகள்
கமலுடன் மோதப்போகும் மலையாள நடிகர்
Updated on : 07 December 2020

ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். கமல்ஹாசனின் 232 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை கமலின், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ‘விக்ரம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ள இப்படத்தை தமிழ்ப் படமாக மட்டும் இன்றி, தென்னிந்திய திரைப்படமாக தயாரிக்க முடிவு செய்துள்ள கமல்ஹாசன், அதற்கான தென்னிந்திய சினிமாவில் உள்ள முக்கிய நடிகர்களை படத்தில் நடிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், மலையாள சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான பகத ஃபாசில், ‘விக்ரம்’ படத்தின் வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவரை தொடர்ந்து மேலும் சில தென்னிந்திய டாப் நடிகர்கள் இப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது
சமீபத்திய செய்திகள்
அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்
தனது தனித்துவமான இயக்கத்தில் ரசிகர்களைக் கவர்ந்துள்ள சினிமா வித்தகர் பிரசாந்த் வர்மா, மீண்டும் ஆர்கேடி ஸ்டுடியோஸுடன் இணைந்து ஒரு மாபெரும் சூப்பர் ஹீரோ பிரம்மாண்டத்தை உருவாக்க உள்ளார்.
டோலிவுட்டில் ஜாம்பி வகை படத்தை அறிமுகப்படுத்தியதும், இந்தியாவின் முதல் ஒரிஜினல் சூப்பர் ஹீரோ சாகாவான ஹனுமான் படத்தை உருவாக்கியதும் இவர்தான். அந்த கனவை இன்னொரு படி முன்னேற்றும் விதமாக, இப்போது அவர் தனது அடுத்த அத்தியாயமான அதீராவை அறிமுகப்படுத்துகிறார். இதில், கல்யாண் தாசரி ஹீரோவாக தனது பிரம்மாண்ட அறிமுகத்தைச் செய்கிறார். அதோடு, முன்னணி நடிகர் எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.
ரிவாஸ் ரமேஷ் டுக்கால் தலைமையிலான ஆர்கேடி ஸ்டுடியோஸ், இந்த பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரித்து வருகிறது. இந்த புதிய திரைப்படத்தை ஷரண் கோப்பிசெட்டி இயக்குகிறார்.
இந்திய இதிகாசங்களின் சாரத்தை கொண்டும், நவீன திரைத்திறனுடன் இணைந்தும் உருவாகும் அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும். இந்த யுனிவர்ஸின் ஒவ்வொரு பகுதியும் தனித்துவமான பின்புலம், காட்சியமைப்பு, மற்றும் மிகப்பெரிய கதைக்களம் கொண்டதாக இருக்கும். ஆனாலும் அவை அனைத்தும் ஒன்றாக இணைந்து ஒரு முழுமையான சூப்பர்ஹீரோ யுனிவர்ஸாக விரிகின்றன.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், படக்குழு எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டுள்ளது.
போஸ்டரில் ஒரு மாபெரும் எரிமலை வெடித்து, தீக்கங்குகளை வெளிப்படுத்துகிறது. ஆகாயம் முழுவதும் புகை மற்றும் சாம்பலால் மூடப்படுகிறது. அந்தக் குழப்பத்திலிருந்து, எஸ்.ஜே.சூர்யா, காளை போன்ற கொம்புகளுடன், பழங்குடி போர்வீரர் தோற்றத்தில், கொடூரமான அசுரனாக எழுகிறார். அவருக்கு முன், கல்யாண் தாசரி சூப்பர் ஹீரோ வேடத்தில், நவீன போர்க்கவசம் அணிந்து, தன்னம்பிக்கையுடன் மண்டியிட்டு எழுந்து நிற்கிறார். இந்த காட்சி, ஒரு அபாரமான ஹீரோ–வில்லன் மோதலை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
நம்பிக்கை vs இருள் எனும் இந்த மாபெரும் போராட்டத்தில், அதீரா தனது மின்னல் சக்திகளை வெளிப்படுத்தி, தர்மத்தைக் காப்பாற்றுகிறார். எரிமலை போல வெடிக்கும் அதீரா, பார்வையாளர்களின் உணர்ச்சிகளை திரையரங்கில் கவரப்போகிறார். அதிரடி சண்டைகள், மூச்சுத் திணற வைக்கும் காட்சிகள், மற்றும் பரபரப்பான டிராமா—இவை அனைத்தும் “மின்னல் முழக்கம்” போல உங்களை மெய்சிலிர்க்க வைக்கும்.
பிரசாந்த் வர்மாவுடன் ஹனுமான் படத்தில் பணியாற்றிய ஷிவேந்திரா கேமரா பொறுப்பை ஏற்றுள்ளார். பின்னணி இசையில் சிறப்பான திறமைகொண்ட ஸ்ரீ சரண் பகாலா இசையமைக்கிறார். ஸ்ரீ நாகேந்திர தங்காலா புரொடக்ஷன் டிசைன் கவனிக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரைப் பின்னர் அறிவிக்கப்படவுள்ளனர்.
‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!
இந்த வருடத்தின் மிகப்பெரிய அறிவிப்பு இதோ வந்துவிட்டது! ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கும், காந்தாரா: சேப்டர் 1 திரைப்படத்தின் டிரெய்லர், தற்போது வெளிவந்துள்ளது!.
இப்படத்தின் தமிழ் டிரெய்லரை முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2022-ல் வெளியான காந்தாரா திரைப்படம் பெரும் வெற்றியடைந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக உருவாகும் காந்தாரா: சேப்டர் 1 படத்தின் மீது பொதுவாகவே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், தயாரிப்பாளர்கள் மக்களை மகிழ்விக்கும் வகையில், படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர், இது 2025-இல் திரைத்துறையின் முக்கிய தருணங்களில் ஒன்றாகும்.
ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கும் காந்தாரா: சேப்டர் 1, இந்த வருடத்தின் மிக எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும். இது ஒரு பான்-இந்தியா திரைப்படமாக பரவலாக பேசப்படுகின்றது, இப்படம் அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்கள் படத்திற்காக பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். அவர்களை மகிழ்விக்கும் விதமாக டிரெய்லர் தற்போது வெளிவந்துவிட்டது.
இப்படத்தின் தமிழ் பதிப்பின் டிரெய்லரை முன்னனி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன்
தனது டிவிட்டர் பக்கத்தில் டிரெய்லரை பகிர்ந்து…
ஒரு நாட்டுப்புறக் கதையும், நம்பிக்கையின் பேரொளியும் – தீவும் வேகமும் சங்கமிக்கும் அற்புதம்.
#KantaraChapter1 தமிழ் டிரைலரை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறேன்
சினிமா ரசிகர்களுக்கு இயற்கையோடு இணைந்த தனித்துவமான அனுபவம்.
@shetty_rishab, @rukminitweets மற்றும் @hombalefilms குழுவிற்கு மிகப்பெரிய வெற்றிக்காக வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.
டிரெய்லரில் திரைப்படம் பற்றிய பல விஷயங்களை தெரியப்படுத்தவில்லை, ஆனால் அதில் ஒரு விதமான மர்மம் மற்றும் சுவாரஸ்யமும் கலந்துள்ளது. முந்தைய படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் கதை ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
காந்தாரா: சேப்டர் 1 ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய முயற்சிகளில் ஒன்றாகும். இசையமைப்பாளர் B. அஜனீஷ் லோக்நாத், ஒளிப்பதிவாளர் அரவிந்த் காஷ்யப், தயாரிப்பு வடிவமைப்பாளர் வினேஷ் பங்க்லன் ஆகியோரின் கலைநயமான திறமையில் திரைப்படத்தின் காட்சி மற்றும் உணர்ச்சி அனுபவம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
ஹொம்பாலே பிலிம்ஸ் முன்னெடுப்பில் 2022 படத்தின் பாரம்பரியத்தை தொடரும் வகையில் காந்தாரா: சேப்டர் 1-ல் ஒரு மிகப்பெரிய போர் காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள், 500க்கும் மேற்பட்ட திறமையான போர் கலைஞர்கள் மற்றும் 3,000 துணை நடிகர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த காட்சி 25 ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு நகரில் 45–50 நாட்களுக்கு படமாக்கப்பட்டது. இது இந்திய சினிமாவின் வரலாற்றில் மிகப்பெரிய காட்சிகளில் ஒன்றாகும்.
இப்படம் அக்டோபர் 2 அன்று உலகளாவிய வெளியீடாக, கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ், பெங்காலி மற்றும் ஆங்கிலத்தில் என, அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை கவரும் முயற்சியுடன் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
காந்தாரா: சேப்டர் 1 மூலம் ஹொம்பாலே பிலிம்ஸ் இந்திய சினிமாவின் எல்லைகளை மேலும் விரிவுபடுத்துகிறது, பாரம்பரியக் கதை, நம்பிக்கை மற்றும் கலைப்பூர்வமான அனுபவங்களை கொண்டுவரும் ஒரு ஆழமான காட்சி அனுபவத்தை இப்படத்தில் வழங்கவுள்ளது.
கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைந்து தயாரிக்க, கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் “Production No.5” அதிகாரப்பூர்வமாக இன்று தொடங்கியது. இப்படத்தை அறிமுக இயக்குனர் சின்னசாமி பொன்னையா இயக்குகிறார்,யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் துவங்கி தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, பொள்ளாச்சி மற்றும் காஷ்மீர் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.
தொடர்ந்து தனது நிறுவனத்தின் மூலம், பல திறமையாளர்களுக்கு வாய்பளித்து, வித்தியாசமான படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் Production No.5 திரைப்படமான இப்படம் மிகப் பிரமாண்டமான பொருட்ச் செலவில் தயாரிக்கப்படுகிறது.
மேலும், இதற்கு முன்னதாக பிரபுதேவா – வடிவேலு – யுவன் சங்கர் ராஜா கூட்டணியை அறிவித்து பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
படம் குறித்த விரிவான அறிவிப்புகள் – கதாநாயகி, முக்கிய நடிகர்கள் பட்டியல், தொழில்நுட்பக் குழுவின் முழுமையான விவரங்கள் மற்றும் கதை தொடர்பான சுவாரஸ்யங்கள் – விரைவில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது
“காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!
ஹொம்பாலே பிலிம்ஸ் சார்பில் மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் “காந்தாரா சேப்டர் 1” படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த ஆவலுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், பிரபல தமிழ் நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தின் தமிழ் டிரெய்லரை 22 செப்டம்பர் 2025 மதியம் 12:45 மணிக்கு வெளியிடுகிறார்.
2022-ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற காந்தாரா படத்தின் முன்கதையாக உருவாகும் இந்தப் படத்தை, ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கியுள்ளார். விஜய் கிரகந்தூர் தயாரிப்பில் உருவாகும் இந்த படம், புராணங்களால் நிரம்பிய கதைக்களத்தில், கண்கவர் காட்சியமைப்புகளுடன், பார்வையாளர்களை தெய்வீகமும் சக்தியும் நிறைந்த பண்டைய உலகத்துக்குக் கொண்டு செல்லும் படைப்பாக உருவாகியுள்ளது.
காந்தாரா சேப்டர் 1 உலகளாவிய அளவில் 2 அக்டோபர் 2025 அன்று, கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாகிறது.
இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதால், தமிழ் ரசிகர்களுக்கு ஒரு பிரமாண்டமான டிரைலர் வெளியீட்டை எதிர்பார்க்கலாம். கன்னட திரையுலகை உலக அரங்கில் கொண்டு செல்வதில் ஹொம்பாலே பிலிம்ஸ் எடுத்து வைக்கும் மற்றொரு முக்கியமான அடையாளமாக இது திகழ்கிறது.
இயற்கையின் கோபமும், அடக்க முடியாத ஆற்றலும் இணையும் இந்த மாபெரும் படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியீட்டை 22 செப்டம்பர் அன்று காணத்தவறாதீர்கள்!
இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்
தயாரிப்பாளர் சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி. இப்படத்தை இயக்கியதன் மூலம் உன்னி சிவலிங்கம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஷேன் நிகம் நாயகனாகவும், ப்ரீதி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். சாய் அபயங்கர் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். இப்படம் மலையாளம் மற்றும் தமிழில் வரும் செப்டம்பர் 26ஆம் தேதி வெளியாகிறது. அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் 19.09.2025 அன்று நடைபெற்றது. அந்த சந்திப்பில் கலந்து கொண்ட அப்படத்தின் கலைஞர்கள் பேசியதாவது
தயாரிப்பாளர் சாந்தோஷ் T. குருவில்லா பேசும்போது,
அனைவருக்கும் வணக்கம். இப்படத்தில் நடிக்கும் அனைத்து கலைஞர்களும் இளம் திறமையாளர்கள். ஷேன் நிகம், சாந்தனு, சாய் அபயங்கர், உன்னி ஆகியோர் மிகவும் திறமையானவர்கள். அனைவரும் இப்படத்தை வெற்றிப் படமாக ஆக்குவீர்கள் என்று நம்புகிறேன் என்றார்.
தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் பேசும்போது,
இந்த வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. இப்படம் என்னுடைய கனவை நனவாகியிருக்கிறது. சாய் அபயங்கரை விட இந்த கதாபாத்திரத்தை சிறப்பாக யாரும் செய்திருக்க முடியாது. உதயன் பாத்திரம் ஷேன் நிகம் செய்திருக்கிறார். சாந்தனு அவருடைய கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருந்தியிருக்கிறார். செல்வராகவன் கதாபாத்திரம் பயங்கரமாக இருக்கும். நான் செல்வராகவன் சாருடைய ரசிகன். இந்த பூமி கோளில் இவர் தான் மிகவும் சிறந்த மனிதர். உங்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் என்று நம்புகிறேன். உங்களுடைய ஆசிர்வாதம் வேண்டும் என்றார்.
இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பேசும்போது,
முதன்முதலாக உங்கள் அனைவரையும் பார்க்கிறேன். நான் படம் பார்த்துவிட்டேன். நன்றாக வந்திருக்கிறது. இப்படத்திற்காக இசையமைத்ததில் மகிழ்ச்சி. இன்னும் நிறைய நல்ல வாய்ப்பு வரும் என்று நம்புகிறேன். அனைவரையும் பார்க்கும் போது கதாபாத்திரங்களாகவே தோன்றுகிறது என்றார்.
இயக்குனர் உன்னி சிவலிங்கம் பேசும்போது,
இது என்னுடைய முதல் பத்திரிகையாளர் சந்திப்பு. மலையாளத்தில் எடுத்தாலும் தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் சந்திப்பு வைத்திருக்கிறோம். நான் மலையாளி, என்னையும் இப்படத்தையும் 60 சதவிகிதம் மலையாளம் 40 சதவிகிதம் தமிழ் படமாக மலையாளத்தில் இருக்கும். தமிழ் மொழியில் மாறி வரும். அதிரடியாக படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது விளையாட்டு தளமாக இருந்தால் ஆர்வமாக இருக்கும் என்று விளையாட்டை மையப்படுத்தி இயக்கியிருக்கிறேன்.
கச்சிசேரா ஆல்பத்தை பார்த்து தான் சாய்யை முடிவு செய்தேன். இன்று வரை என்னுடன் இருந்து பக்கபலமாக சாய் இருக்கிறார். ஷேன் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார்.
சாந்தனு அண்ணனிடம் கதை கூறினேன். அவருக்கு கதை பிடித்திருந்தது. அவருடன் 25 நாள் தான் படப்பிடிப்பு எடுத்தோம். ஆனால், அவருடன் நிறைய கருத்து வேறுபாடுகள் வந்து சென்றாலும் படத்திற்காக நன்றாக உழைத்திருக்கிறோம்.
ப்ரீதியிடம் அயோத்தி படம் போன்று இப்படத்தில் அழுது கொண்டே இருக்க வேண்டாம், வசனங்கள் பேச வேண்டும் என்றேன். எனக்கு மலையாளம் தெரியாது என்றார். இங்கு பலருக்கு மலையாளம் தெரியாது என்று கூறினேன். வசனங்களை இடையில் மாற்றினாலும் பயிற்சி எடுத்து சிறப்பாக பணியாற்றினார்.
என்னுடைய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கடினமாக உழைத்திருக்கிறார்கள், அவர்கள் அனைவருக்கும் நன்றி.
தயாரிப்பாளர் என்னை 6வது புதிய இயக்குனராக அறிமுகப்படுத்தியிருக்கிறார். எனக்கு ஏதாவது கற்பனையாக வந்தால் நான் அவரிடம் தான் ஆலோசிப்பேன்.
பல்டியில் பல புதிய ஆக்ஷன் ட்ரிக் காட்சிகளைக் கொண்டு வந்திருக்கிறோம். அதிலும் கபடியில் அதை எப்படி பயன்படுத்தலாம் என்று யோசித்து செய்தோம். அல்போன்ஸ் அண்ணாவும் இப்படத்தில் இருக்கிறார். பல தமிழ் கலைஞர்கள் இப்படத்தில் இருப்பதால் டப்பிங்கிற்கு தனிகவனம் செலுத்தியிருக்கிறோம். இப்படத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்றார்.
நடிகை ப்ரீதி பேசும்போது,
என்னுடைய முதல் படம் அயோத்தி-யில் இருந்தே உங்களுடைய ஆதரவு எனக்கு கிடைத்திருக்கிறது. இன்று என்னுடைய கிஸ் படம் வெளியாகியிருக்கிறது. மலையாளத்தில் எனக்கு இது முதல் படம். ஆனால், தமிழ் படமும் சென்னையும் என்னுடைய தாய் வீடு போன்ற உணர்வு வரும். தயாரிப்பாளர் இறுக்கமாக இல்லாமல் அனைவருக்கும் ஆதரவாக இருந்தார். உன்னி சேட்டா இயக்குனர் என்பதை விட இப்படத்தின் மூலம் அண்ணனாகிவிட்டார். இதற்கு முன்பு நான் நடித்த படங்களைவிட இப்படம் மிகவும் புத்துணர்ச்சியோடும், வித்தியாசமாகவும் இருக்கும். செல்வராகவன் சார், பூர்ணிமா மேடம் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். முதல் படம் எப்போதும் ஸ்பெஷலாக இருக்கும். அதுபோல, எனக்கு பல்டி படம் அமையும். அதேபோல், ஜாலக்காரி பாடல் எனக்கு கொடுத்ததற்கு மிக்க நன்றி. எங்கு சென்றாலும் என்னை ஜாலக்காரி என்று தான் அழைக்கிறார்கள்.
பார்டரில் நடக்கும் கதை. ஆனால் அனைவரையும் கவரும் படமாக இருக்கும். இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
நடிகர் சாந்தனு பேசும்போது,
ப்ளு ஸ்டார் சந்திப்பிற்கு பிறகு இப்போது தான் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். என்னுடைய முதல் படம் ஆரம்பித்து இன்றுவரை நீங்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்து கொண்டிருக்கிறீர்கள். நடிகரோ, தொழில்நுட்ப கலைஞர்களோ எந்தளவிற்கு கடினமாக உழைக்கிறார்களோ அந்தளவிற்கு அவர்களுக்கு நீங்கள் ஆதரவு தந்து கொண்டிருக்கிறீர்கள்.
நான் சாந்தனு பாக்யராஜ் ஆகத்தான் அறிமுகமானேன். ஆனால், இன்று 15 வருடங்களுக்குப் பிறகு மலையாள சினிமாவில் மீண்டும் இணைந்திருக்கிறேன். உன்னியின் நண்பர் தேவ் என்னை இப்படத்திற்காக பரிந்துரை செய்திருக்கிறார். உடனே உன்னி மற்றும் தயாரிப்பாளர்கள் என்னை அழைத்து கதை கூறி வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.
பல வருடங்களுக்குப் பிறகு பாவக்கதைகள், தங்கம் எனக்கு கிடைத்தது. திரையரங்கில் வெற்றியடைந்த படமாக ப்ளு ஸ்டார் அமைந்தது.
பல்டி 4 பசங்களை கொண்ட கதை. ஷேனுக்கு சமமாக மலையாளத்திலோ, தமிழில் மற்றவர்களையோ கூட தேர்வு செய்திருக்கலாம். ஆனால், இப்படிப்பட்ட கதையில் எனக்கு அற்புதமான கதாபாத்திரம் கொடுத்ததற்கு நன்றி. இப்படம் மலையாளத்தில் ரீஎண்ட்ரியாக இருக்கும். மலையாளம் தெரியுமா என்று கேட்டதும் வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என்று தெரியும் என்று கூறினேன். பிறகு நான் நடித்துவிடுவேன் ஆனால், வசனங்கள் கொஞ்சம் சிரமம் என்று கூறினேன். 1 மாதம் ஆன்லைன் டீச்சர் வைத்து பயிற்சி கொடுத்தார்கள்.
கபடி குழுவில் ஒருவர் காணாமல் போய்விட்டால் என்ன நடக்கும் என்பதை இப்படத்தில் கூறியிருக்கிறார்கள். 3 மாதங்கள் கபடி பயிற்சி எடுத்து நடித்தோம்.
செல்வராகவன் சாருக்கு ரசிகனாக இல்லாமல் யாரும் இருக்க முடியாது. அவரிடம் அவருடைய படங்கள் பற்றி பேசும் வாய்ப்பு கிடைத்தது. அல்போன்ஸ் சாரிடம் பிரேமம் பற்றி பேசினேன். ப்ரீதியை அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார். அப்பா எப்போதும் மற்றவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம் என்பார். ஷேனிடம் நிறைய கற்றுக் கொண்டேன். திருவிழா காட்சியில் தோன்றும்போது வேறு மாதிரி இருப்பார். நாமும் ஏன் இப்படி இருக்கக் கூடாது என்று கற்றுக் கொண்டேன்.
சாய்க்கு முதல் மலையாளப் படம், சந்தோஷமாக இருக்கிறது. நம்மை நம்பி இங்கு வந்திருக்கிறார்கள். இப்படம் பிடித்திருந்தால் அனைவரும் ஆதரவு கொடுங்கள்.
மலையாளத்தில் நான் தான் டப்பிங் பேசினேன். 3 நாட்களில் பேசி முடித்தேன். ஆனால், 3 நாட்களில் முடித்துவிட்டோம் என்று ஆச்சர்யப்பட்டேன். ஆனால், மறுபடியும் கேரளாவிற்கு அழைத்து இந்த ஒரு காட்சிதான் என்று கூறி முழு வசனங்களையும் பேசவைத்தார் தமிழ் படத்தில் உதடு அசைவுகளுக்கு ஏற்ப டப்பிங் பேச வேண்டும். அது சிறிதும் மாறாத அளவிற்கு பாலா சார் பணியாற்றியிருக்கிறார்.
நடிகர் ஷேன் நிகம் பேசும்போது,
பல்டி ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் டிராமா. 4 பசங்க, அவர்களுடைய கபடி குழு. இதில் வில்லன் வந்தால் எந்தளவிற்கு போராட்டமாக இருக்கும் என்பதே படத்தின் கதை. பினு சேட்டா, சந்தோஷ் சேட்டாவிற்கு நன்றி. செல்வராகவன் சாருக்கு நான் மிகப் பெரிய ரசிகன் அவருடைய புதுப்பேட்டை படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன்.
சாந்தனு மாதிரி ஆர்வமுடன் நடிப்பவர்களை பார்ப்பது அரிது. சாய் நன்றாக இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கு நன்றி. ப்ரீதிக்கு நன்றி மற்றும் இப்படக் குழு அனைவருக்கும் நன்றி.
இப்படம் பிடித்திருந்தால் ஆதரவு கொடுங்கள் என்றார்.
சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025
இந்திய மாஸ்டர்ஸ் தடகள சங்கம் (MAFI) வரும் நவம்பர் 5 முதல் 9, 2025 வரை, சென்னையின் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு மைதானத்தில் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது.
35 வயதுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் தடகள போட்டிகள், 5 ஆண்டு இடைவெளி பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடைபெறும். இந்த சாம்பியன்ஷிப்பில் போட்டியில் 30 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 4,000 வீரர்கள் பங்கேற்கின்றனர். போட்டியின் நோக்கம், உலக மாஸ்டர்ஸ் தடகளத்தின் வழியாக போட்டித் திறனின் மூலம் உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதே ஆகும்.
முதலில் இந்தோனேஷியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இப்போட்டி, ஜூலை 2025-இல் இந்தியாவிற்கு மாற்றப்பட்டது. நவீன விளையாட்டு வசதிகள் மற்றும் தமிழக அரசின் உறுதியான ஆதரவுடன் சென்னை இயல்பான தேர்வாக அமைந்தது. இதற்கு முன்னர் 2000, 2006-ஆம் ஆண்டுகளில் இப்போட்டிகளை பெங்களூரில் இந்தியா வெற்றிகரமாக நடத்தியதைத் தொடர்ந்து, இப்போது மூன்றாவது முறை இந்தியா இப்போட்டியை நடத்துகிறது.
“தமிழக துணை முதல்வரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான திரு. உதயநிதி ஸ்டாலினிடம் நாங்கள் அணுகியபோது, அவர் உடனே முழு ஆதரவை வழங்கி, போட்டி அமைப்பு குழுவின் Chief Patron ஆகச் சேர ஒப்புக் கொண்டார்,” என இந்திய மாஸ்டர்ஸ் தடகள சங்கம் (MAFI) பொதுச்செயலாளர் திரு. டேவிட் பிரேம்நாத் தெரிவித்தார்.
பிரபல தமிழ்த்திரைப்பட நடிகர் ஆர்யா இப்போட்டியின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் தேசிய சாம்பியனும், தமிழ்நாடு தடகள சங்கச் செயலாளருமான செல்வி. லதா தொழில்நுட்ப இயக்குநராக பணியாற்றவுள்ளார். திரு. மேகநாத ரெட்டி, Member Secretary, SDAT மற்றும் இந்திய மாஸ்டர்ஸ் தடகள சங்கம் (MAFI) துணைத் தலைவர் திரு. செண்பகமூர்த்தி M ஆகியோரும் உறுதுணையாக உள்ளனர்.
இந்த நிகழ்வில் உலக மாஸ்டர்ஸ் தடகள தலைவர் மார்கிரிட் ஜங் (ஜெர்மனி), செயலாளர் ஜுவான் ஓர்டோனெஸ் (மெக்சிகோ), ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சங்க தலைவர் விவாட் விக்ரந்தநோரோஸ் (தாய்லாந்து) மற்றும் செயலாளர் எஸ். சிவபிரகாசம் (மலேசியா) ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
2023-ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸில் நடந்த போட்டியில் இந்தியா 264 பதக்கங்களை வென்றது. இந்த முறை தாயகத்தில் 2,500 வீரர்களைக் கொண்ட மிகப்பெரிய அணியை வெளியிட்டு அந்த சாதனையை மிஞ்சுவதே இந்தியாவின் குறிக்கோள்.
“துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலினின் நிலையான ஆதரவிற்கும், பிராண்ட் தூதராக இணைந்த நடிகர் ஆர்யாவுக்கும் நன்றி. மறக்க முடியாத சாம்பியன்ஷிப் நடத்துவதற்காக அயராது உழைக்கும் குழுவினருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி,” என திரு. டேவிட் பிரேம்நாத் தெரிவித்துள்ளார்.
நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'
RTS Film Factory சார்பில், தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் “ரைட்”.
வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவில் பத்திரிக்கை நண்பர்களுக்காக படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் பிரத்தியேகமாக திரையிடப்பட்டது.
இவ்விழாவினில்..,
தயாரிப்பாளர் திருமால் லட்சுமணன் பேசியதாவது..
எங்கள் படத்தில் பணிபுரிந்த நட்டி சார், அருண் பாண்டியன் சார் மற்றும் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இவ்விழாவிற்கு வருகை தந்த உறவுகளுக்கு நட்புகளுக்கும் நன்றி. இயக்குநர் எனது நண்பர், இன்னொரு நண்பர் ஜெயபாண்டி சார். அவர் மூலம் தான் இந்தப்படம் நடந்தது. சுப்பிரமணியன் படம் செய்ய வேண்டும் என்று சொன்ன போது மூவரும் இணைந்து செய்யலாம் என்று தான் படம் ஆரம்பித்தோம். அருண்பாண்டியன் சார் பல வழிகாட்டுதல்களை தந்தார். நட்டி சார் முழுக்க முழுக்க கூட இருந்து ஆதரவு தந்தார். இயக்குநர் ஜெயித்தால் எங்கள் ஊரே சந்தோசப்படும். அனைவரும் திரையரங்கு வந்து படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
எடிட்டர் நாகூரான் பேசியதாவது..,
திரையரங்கு வந்து படம் பார்த்து ஆதரவு தாருங்கள் இயக்குநருக்கும், நட்டி சாருக்கும் நன்றி. வாய்ப்பு தந்ததற்கு தயாரிப்பாளர்களுக்கு நன்றி. படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகர் ஆதித்யா ஷிவக் பேசியதாவது..,
இது என் முதல் படம் என் மனதுக்கு நெருக்கமான படம், எனக்கு முதல் படமாக இப்படம் அமைந்தது மகிழ்ச்சி. நட்டி சார், அருண்பாண்டியன் சாரிடம் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. நிறைவான அனுபவமாக இருந்தது, அனைவருக்கும் நன்றி.
வீரம் பட நடிகை யுவினா பேசியதாவது..,
மீடியா நண்பர்களுக்கு வணக்கம், சின்ன குழந்தையாக என்னை படத்தில் பார்த்திருப்பீர்கள். இப்போ காலேஜ் பெண்ணாக இப்படத்தில் நடித்துள்ளேன். இந்த வயது பாத்திரம் நடிக்கலாம் என ஆரம்பித்த போது இப்படம் நல்ல வாய்ப்பாக அமைந்தது. எனக்கு இந்த வாய்ப்பு தந்த இயக்குநர் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. நட்டி சாருக்கு நன்றி. எங்கள் படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி.
இசையமைப்பாளர் குணா பாலசுப்பிரமணியன்
நான் இதுவரை 9 படம் செய்து விட்டேன் ஆனால் இதுதான் என் முதல் மேடை. ரமேஷ் சாருடன் வேலை பார்த்தது இனிமையான அனுபவம். ஒரு குடும்பமாக அனைவரும் இணைந்து செய்துள்ளோம். இப்படத்தில் ஆர்ட் ஒர்க், கேமரா, என எல்லாமே சூப்பராக இருக்கும். நடிகர்கள் சிறப்பான நடிப்பைத் தந்திருக்கிறார்கள், எங்கள் படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்.
நடிகர் ரோஷன் பேசியதாவது..,
இந்த வாய்ப்பைத் தந்த ரமேஷ் சாருக்கு நன்றி. இந்த படக்குழு இப்படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளனர். நட்டி சாருடன் தான் எனக்கு காட்சிகள் அதிகம் அவர் நடிப்பதை பார்த்து நிறைய கற்றுக்கொண்டேன். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும். நன்றி.
நிர்வாகத் தயாரிப்பாளர் ப்ரான்சிஸ் மார்க்கஸ் பேசியதாவது :..,
இந்தப்படம் பற்றி சொல்ல ஒரு புக்கே எழுதலாம். 24 நாளில் எடுக்கப்பட்ட படம், சின்ன பட்ஜெட்டில் எடுத்த படம், ஆர்டிஸ்ட் எல்லாம் அவ்வளவு கடுமையாக உழைத்தனர். இயக்குநரும் கேமராமேனும் இல்லாவிட்டால் இந்தப்படம் இவ்வளவு சீக்கிரம் எடுத்திருக்க முடியாது. படத்தில் உழைத்த உதவி இயக்குநர்கள் உட்பட அனைவரும் முழு அர்ப்பணிப்போடு உழைத்தனர். அனைவருக்கும் நன்றி. மியூசிக் இப்படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. குட்லக் என்ஞ்சினியர்ஸ் சவுண்ட் சிறப்பாக செய்துள்ளனர். சமூக அக்கறையுடன் கூடிய படமாக இப்படம் இருக்கும். பத்திரிக்கையாளர்கள் இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அனைவருக்கும் நன்றி.
நடிகை அக்ஷரா ரெட்டி பேசியதாவது..,
சினிமாவுக்கு நான் புதுசு ஆனால் தமிழ் மக்களுக்கு என்னைத் தெரியும். பிக்பாஸ் மூலம் என்னை அவர்கள் வீட்டு பெண்ணாக நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அம்மா தான் என்னை முழுதாக பார்த்துக்கொண்டார்கள், அவர்கள் எதிர்பாராமல் மறைந்த பிறகு எப்படி மீடியாவில் சினிமாவில் இருப்பது எனத் தயங்கினேன். ஆனால் இந்த டீம் என்னை மிக ஆதரவாக பார்த்துக் கொண்டார்கள், இப்படி ஒரு டீம் கிடைத்தால் யார் வேண்டுமானாலும் பயப்படாமல் வேலை செய்யலாம். க்ளாம் டாலாக இருக்க கூடாது என நினைத்தேன் படத்தில் மிக அழகான ரோல் தந்தார்கள். நட்டி சாருடன் வேலை பார்த்தது மிக இனிமையான அனுபவம், அருண் பாண்டியன் சாரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். நீங்கள் எல்லோரும் படம் பார்த்து ரசிப்பீர்கள் என நம்புகிறேன் நன்றி.
நடிகர் ரவிமரியா பேசியதாவது..,
அன்பார்ந்த அனைவருக்கும் வணக்கம், ரைட் டீசர் வெளியீட்டு விழா. இந்தப்படத்தில் நான் நடிக்கவில்லை, ஆனால் இந்தப்படம் நன்றாக வரவேண்டுமென வேண்டிக்கொண்டிருந்தேன். எனக்கு நெருக்கமான மூன்று பேர் பணியாற்றியுள்ளனர். எனக்கு மிளகாய் படத்தில் வாய்ப்பு தந்து, இப்போது வரை நண்பராக இருக்கும் நட்டி அவருக்கு நன்றி, மிளகாய் படத்தில் அஸிஸ்டெண்ட் டைரக்டர் ரமேஷ், மிக திறமையானவர். இத்தனை காலம் அவருக்கு தயாரிபபாளர் கிடைக்கவில்லை அவர் படத்தை தயாரித்துள்ள திருமால் லட்சுமணன், ஷியாமளா இருவருக்கும் நன்றி. இப்படத்தை 24 நாட்களில் முடித்துள்ளார்கள், படத்தை முடிக்கும் நாட்கள் முக்கியமில்லை குறைந்த நாட்களில் எடுத்த நூறாவது நாள் பிளாக்பஸ்டர். நட்டி சார் இந்தப்படத்திற்காக எவ்வளவு குறைவாக சம்பளம் வாங்கி நடித்தார் எனத் தெரியும், ரமேஷ் மீது பெரும் அக்கறை கொண்டவர் அவர், இப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும், இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகை வினோதினி பேசியதாவது...,
ஊடக நண்பர்களுக்கு முதல் நன்றி, இந்த விழாவிற்கு வருகை தந்த ரவி மரியா சாருக்கு நன்றி. நட்பு பற்றி நிறைய பேசுகிறோம் நான் இந்தப்படத்திற்கு வந்ததற்கும் காரணம் நட்பு தான். மார்க்கஸ் தான் என்னை தொடர்பு கொண்டு இப்படத்தில் கொண்டு வந்தார். அவரை பல காலமாக எனக்குத் தெரியும். ரமேஷ் அவர்களை ஜில்லா படத்தில் பார்த்துள்ளேன், அவர் இப்படி இயக்குநராக, அதுவும் நண்பர்கள் தயாரிப்பில் வருவார் என நினைக்கவில்லை, அவர் முதல், பலருக்கு இது முதல் படமாக அமைவது மிகுந்த மகிழ்ச்சி. 24 நாளில் எடுத்தது எனக்கே தெரியாது, நான் ஏழு நாள் தான் நடித்தேன் பக்காவாக திட்டமிட்டு எடுத்தார்கள். இது எவ்வளவு பெரிய உழைப்பு, என பிரமிப்பாக இருக்கிறது. அருண் பாண்டியன் சார், நட்டி சாரின் நடிப்பு மிகச்சிறப்பாக வந்துள்ளது. இப்படம் கண்டிப்பாக ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படமாக இருக்கும், அனைவருக்கும் நன்றி.
நட்டி (எ) நட்ராஜ் பேசியதாவது..,
ரைட் ஒரு சுவாரஸ்யமான படம். ரமேஷ் என்னிடம் அஸிஸ்டெண்டாக இருந்தவர், அவர் கதை சொன்ன போதே யார்யாரெல்லாம் நடிக்க வேண்டும் என எழுதியே வைத்திருந்தார். அருண் பாண்டியன் சார் படத்தில் ஒரு கோ டைரக்டர் போல வேலை செய்தார். அவர் அர்ப்பணிப்பிற்கு நன்றி. அக்ஷரா ரெட்டி பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து வந்தவர், மிக கடுமையாக உழைத்துள்ளார், வாழ்த்துக்கள். யுவினா சிறப்பான நடிப்பை தந்துள்ளார். ஆதித்யாவும் சிறப்பாக செய்துள்ளார். ரோஷனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. ரவிமரியா என் சிறந்த நண்பர் அவர் செய்த உதவிகள் ஏராளம் வந்து வாழ்த்தியதற்கு நன்றி. படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களும் சிறப்பான உழைப்பைத் தந்துள்ளனர். குணா இசையில் வாழ்ந்துள்ளார். ஆர்ட் டைரக்டர் வேலை பெரியளவில் கண்டிப்பாக பேசப்படும். படத்தின் தயாரிப்பாளர்களுக்கு என் நன்றிகள். அனைவரும் இப்படத்தை தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும். சமூக அக்கறை மிக்க ஒரு விசயத்தை ரமேஷ் சொல்லியுள்ளார். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
இயக்குநர் பாலசுப்பிரமணியம் ரமேஷ் பேசியதாவது..,
என் இயக்குநர்கள் குழுவிற்கு முதல் நன்றி. என் அம்மா அப்பா, எனக்கு தொழில் கற்றுத்தந்த குருக்களுக்கு நன்றி. எப்போதும் ஊரில் என் நண்பர்கள் எப்போது படம் செய்வாய் எனக் கேட்பார்கள், அதற்கு தயங்கியே நான் எங்கும் போகாமல் இருந்தேன். என் நண்பர் ஜெயபாண்டி தான் திருமால் சாரை அறிமுகப்படுத்தினார், இப்படத்தை தயாரித்ததற்கு திருமால் சாருக்கு நன்றி. நட்டி சார் ஆபிஸில் தான் நான் வாழ்ந்தேன். அவர் தான் நான் இப்படம் செய்யக் காரணம். இப்படம் ஒரே இடத்தில் நடக்கும் கதை நடிகர்களை ஸ்டேஜிங் செய்வது மிகுந்த சவாலாக இருந்தது. குணா மிக அற்புதமான இசையை தந்துள்ளார். தாமு சார் கலை இயக்கத்தில் அசத்தியுள்ளார். மார்க்கஸ் சார் இப்படத்திற்கு முழு சப்போர்ட்டாக இருந்தார். அக்ஷரா மிக கடுமையாக உழைத்தார். நன்றாக நடித்துள்ளார். வினோதினி மேடமுக்கு சொல்லித்தர அவசியமே இல்லை. யுவினா நன்றாக நடித்துள்ளார். ஆதித்யா நிறைய சப்போர்ட் செய்தார். அருண் பாண்டியன் சாரிடம் அன்பிற்கினியாள் படத்தில் நான் வேலை செய்தேன். அவரைப்பார்க்கவே ஆறு மாதம் ஆனது. அவர் என்னை வேண்டாம் என சொல்லத்தான் கதை கேட்கவே ஒப்புக்கொண்டார் ஆனால் அவர் கதை பிடித்து நடிக்க ஒப்புக்கொண்டார். அவருக்கு நன்றி. படம் சிறப்பாக வந்துள்ளது. அனைவருக்கும் பிடிக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
எளிய மக்களுக்கு பிரச்சனை என்றால் காவல்நிலையத்தில் உதவி கேட்பார்கள். அந்த காவல் நிலையத்திற்கே ஒரு பிரச்சனை என்றால் என்னவாகும்? என்பது தான் இப்படத்தின் மையம்.
ஜில்லா புலி படங்களில் அசோஷியேட் இயக்குநராக பணிபுரிந்துள்ள சுப்ரமணியன் ரமேஷ்குமார் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பரபரப்பான சம்பவங்களை கோர்த்து, விறுவிறுப்பான திரைக்கதையில், அசத்தலான கமர்ஷியல் திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளார்.
தமிழ் திரையுலகில் கால் பதித்திருக்கும் RTS Film Factory நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இப்படத்தை, தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், ஷியாமளா பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் நட்டி, அருண் பாண்டியன் இணைந்து, முதன்முறையாக முதன்மைப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் பிக்பாஸ் அக்ஷரா ரெட்டி, வினோதினி, மூணாறு ரமேஷ், டைகர் தங்கதுரை, உதய் மகேஷ், முத்துராமன், வில்லனாக ரோஷன் உதயகுமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். வீரம் படப்புகழ் குழந்தை நட்சத்திரம் யுவினா பார்கவி இப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார், அனுபமா குமாரின் மகன் ஆதித்யா ஷிவக் புதுமுகமாக அறிமுகாகிறார்.
இப்படம் வரும் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்
நடிகர் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்றிருந்த போது திடீரென்று மயக்கமடைந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவரை படக்குழுவினர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ரோபோ சங்கரை பரிசோதித்த மருத்துவர்கள் நீர்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து சில தினங்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தியதன் பேரில் ரோபோ சங்கர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார்.
இந்நிலையில், வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரோபோ சங்கர் இன்று இரவு சுமார் 8.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு குறித்து அறிந்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரோபோ சங்கர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடல் குறைப்பு சிகிச்சை மேற்கொண்டதால் மிகவும் மெலிந்து காணப்பட்டார். பிறகு அவருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் மீண்டும் பழையபடி உடல்நிலை தேறி வந்து படங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது திடீரென்று ஏற்பட்ட உடல் நலக்குறைவால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!
ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், 'ஆக்சன் கிங்' அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'தீயவர் குலை நடுங்க' திரைப்படத்தின் அதிரடி டீசர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், இன்று இப்படத்தின் டீசரை சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார்.
சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் என்பதை மையப்படுத்தும் இந்த க்ரைம் திரில்லர் படத்தின் டீசர், ஆக்சன் கிங் அர்ஜூனின் ஆக்சன் விஸ்வரூபத்தையும், மென்மையான ஐஸ்வர்யா ராஜேஷின் மர்மமிகு பாத்திரத்தையும் அழகாக வெளிப்படுத்துவதோடு, ஒரு விசாரணையை பரபர காட்சிகளுடன், விறுவிறுப்பான திரில்லராக காட்டி, படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. வெளியான வேகத்தில் இந்த டீசர் இணையம் முழுக்க ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
'ஆக்சன் கிங்' அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், 'பிக் பாஸ்' அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தி, பி எல் தேனப்பன், தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை அருண்சங்கர் துரை கவனித்திருக்கிறார்.
'ஆக்சன் கிங்' அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முதலாக இணைந்திருப்பதால் இப்படத்திற்கு பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
தற்போது டீசர் பெரும். வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், படத்தை திரைக்கு கொண்டுவரும் பணிகளில் படக்குழு பரபரப்பாக இயங்கி வருகிறது. விரைவில் இப்படத்தின் இசை, டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்பு, அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.இப்படம் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்
இந்தியாவின் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, “மா வந்தே” எனும் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் உண்ணி முகுந்தன் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம், நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்ற நரேந்திர மோடி அவர்களின் அற்புதமான வாழ்க்கைப் பயணத்தைச் சித்தரிக்கிறது.
சிறுவயது முதல் தேசத்தின் தலைவராக உயர்ந்த வரலாற்றையும் உண்மை சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டும் உருவாக்கப்படுகிறது. குறிப்பாக, அவருக்கு எப்போதும் ஆதரவாக இருந்த தாயார் ஸ்ரீமதி ஹீராபென் மோடி அவர்களுடனான ஆழமான பந்தத்தை இத்திரைப்படம் வெளிப்படுத்துகிறது.
சர்வதேச தரத்திலும், அற்புதமான VFX தொழில்நுட்பங்களுடனும், இந்தியாவின் முன்னணி நுட்ப நிபுணர்களின் பங்களிப்புடனும் இந்தப் படம் உருவாக்கப்படுகிறது. பான்-இந்தியா அளவில் இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியீடு செய்யப்படுவதோடு, ஆங்கிலத்திலும் தயாரிக்கப்படுகிறது.
ஊக்கமூட்டும் இந்த வாழ்க்கை வரலாறு, மறக்கமுடியாத திரை அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் உருவாகிறது.
- உலக செய்திகள்
- |
- சினிமா