சற்று முன்
சினிமா செய்திகள்
அஜித், விஜய் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த நடிகை
Updated on : 28 March 2020
கொரோனா வைரஸ் பரவுவது குறித்த விழிப்புணர்வை கோலிவுட் திரையுலகில் உள்ள பல பிரபலங்கள் ஏற்படுத்தி வரும் நிலையில் நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் சற்றுமுன் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:
கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் நடிகை நடிகர்கள் பலர் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாம் எல்லோரையும் பாதுகாப்பதற்காக இந்த ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். ஆனால் சில இளைஞர்கள் எந்தவித பயமும் இல்லாமல் குருட்டு தைரியத்தில் நமக்கு ஒன்றும் ஆகாது என்று நினைத்து வெளியில் செல்கிறார்கள். அவர்களுக்கு வைரஸின் சீரியஸ் குறித்து தெரியவில்லை. அவர்களுக்கு வைரஸ் ஒருவேளை தாக்கினால் அவர்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பரவும் அபாயம் உள்ளது.
மேலும் வெளிநாட்டில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு நிறைய பேர் வந்து உள்ளார்கள். அவர்களை தற்போது அரசு தனிமைப்படுத்தி வைத்துள்ளது. அவர்களுடைய வீட்டிலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. எனவே அவர்களை தனிமையில் இருக்க விடுங்கள். அவர்களுடன் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம்.
மேலும் மார்க்கெட் சென்றாலும் காய்கறி வாங்க சென்றாலும் ஒரு மீட்டர் தள்ளி நின்று ஒருவரை ஒருவர் தொடாமல் பார்த்துக் கொள்ளவும். இது ஒரு பாதுகாப்பான நடவடிக்கையாகும். முதலில் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் அடுத்தவரையும் பாதுகாக்க முடியும்.
அதுபோல் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் உள்பட அனைத்து நடிகர்களின் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். அவரவர்களுக்கு பிடித்த நடிகர்கள் கூறிய வழிமுறைகளை ஒரு ரசிகராக கடைபிடியுங்கள். மருத்துவர்கள் மற்றும் அரசுகளும் நமக்காக நல்லது செய்து வருகின்றார்கள். நாம் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் அது தப்பான முடிந்துவிடும். இந்த வாரமும் அடுத்த வாரமும் நாம் கடந்து விட்டோம் என்றால் அதன் பின்னர் பெரிய பாதிப்பு இருக்காது. எனவே அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்’ என்று காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்
“வைஃப்” படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” வெளியீடு
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் S அம்பேத்குமார் தயாரிப்பில், இயக்குனர் ஹேமநாதன் R இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் “வைஃப்” (Wife). இன்றைய நவீன திருமண வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்தப் படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த இனிமையான மெலடி பாடலை ஜென் மார்டின் இசையமைத்துள்ளதுடன், சுபலக்ஷினியுடன் இணைந்து பாடியுள்ளார். பாடலின் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். மென்மையான இசையும் மனதை வருடும் வரிகளும் இணைந்து “நீ சாரல்” பாடலை ஒரு அழகான காதல் அனுபவமாக மாற்றியுள்ளது. வெளியானதும் இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
இப்படம், இன்றைய தலைமுறையில் திருமணத்திற்கு முன்பும், திருமணத்திற்குப் பிறகும் காதல் எவ்வாறு மாறுகிறது என்பதையும், நவீன தம்பதிகளின் உறவுச் சிக்கல்களையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ரொமான்ஸ் டிராமாவாகும்.
இந்தப் படத்தில் R J விஜய் மற்றும் அஞ்சலி நாயர் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, மைத்திரேயன், அபிஷேக் ஜோசப், விஜய் பாபு, கல்யாணி நட்ராஜன், லல்லு, கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
K.A. சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு தினேஷ் பொன்ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். சிவ சங்கர் கலை இயக்கத்தை கவனித்துள்ள நிலையில், தினேஷ், அசார், ராதிகா ஆகியோர் நடன அமைப்பை செய்துள்ளனர். VFX பணிகளை ஹோகஸ் போகஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“அரசியலை நகைச்சுவையுடன் சொல்லும் கமர்ஷியல் படம்” – நட்டி நட்ராஜ்
“தலைவர் தம்பி தலைமையில்” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, KRG கண்ணன் ரவி குழுமம் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “TN 2026”. தம்பி ராமையா கதை எழுதியுள்ள இப்படத்தை, உமாபதி ராமையா திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார்.
நட்ராஜ் சுப்பிரமணியம் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் எம். எஸ். பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
அதோடு ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், முத்துக்குமரன், ஆதித்யா கதிர், சித்ரா லட்சுமணன், தலைவாசல் விஜய், வையாபுரி, வடிவுக்கரசி, விஜி சந்திரசேகர், ஸ்ரீஜா ரவி, இந்திரஜா ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாண்டி கேமியோவில் தோன்றியுள்ளார்.
அரசியல் நகைச்சுவை படமாக உருவாகியுள்ள “TN 2026”, வரும் ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை ஏ.ஆர்.எஸ் கார்டனில் நடைபெற்ற முன் வெளியீட்டு விழா, அரசியல் கட்சி கூட்டத்தை நினைவூட்டும் வகையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
படத்தின் டீசர் வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், இந்த படம் யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்படவில்லை என்று தம்பி ராமையா தெளிவுபடுத்தினார்.
விழாவில் பேசிய அவர், “அரசியல் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். அதை ஒரு புதிய கோணத்தில் சொல்ல முயற்சி செய்துள்ளோம். யாரையும் குறிவைக்காமல், பொழுதுபோக்குடன் ஒரு கருத்தை பகிரும் படமாக இது உருவாகியுள்ளது” என்றார்.
நடிகர் நட்ராஜ் சுப்பிரமணியம் தனது உரையில், இயக்குனர் உமாபதியின் உழைப்பையும், இணை நடிகர்களான எம்.எஸ். பாஸ்கர் மற்றும் தம்பி ராமையாவுடன் நடித்த அனுபவத்தையும் பாராட்டினார். “முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி ஃப்ரேம் வரை சிரிக்க வைக்கும் படம் இது” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இயக்குனர் உமாபதி ராமையா, “இந்த படம் முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு அரசியல் படம். அரசியல் கோணத்தில் பார்க்காமல், சினிமாவாக ரசிக்க வேண்டும்” என்று கூறினார்.
இசையமைப்பாளர் தர்புகா சிவா இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ஒளிப்பதிவை பி.ஜி. முத்தையா மேற்கொண்டுள்ளார். எடிட்டிங் அரள் ஆர். தங்கம் செய்துள்ள நிலையில், கலை இயக்கத்தை என்.கே. ராகுல் கவனித்துள்ளார்.
அரசியல் நகைச்சுவை, சமூக கருத்து மற்றும் வலுவான நட்சத்திர அணியுடன் உருவாகியுள்ள “TN 2026”, ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் இப்படம், திரையரங்குகளில் எப்படி வரவேற்பு பெறும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
“வடம்” சன் NXT-இல் ஸ்ட்ரீமிங் – மஞ்சு விரட்டின் உணர்வுகளை உயிர்ப்பிக்கும் சக்திவாய்ந்த சினிமா!
சில திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்காக மட்டுமே திகழ்கின்றன. ஆனால் “வடம்” அதைவிட ஆழமான அனுபவமாக மாறி, பார்வையாளர்களை உணர்ச்சிகரமாகத் தொடும் சினிமா பயணமாக உருவெடுத்துள்ளது. தற்போது Sun NXT தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகி வரும் இந்த படம், மஞ்சு விரட்டின் அதிரடி உலகத்தை இயல்பாகவும் வலிமையாகவும் வெளிப்படுத்துகிறது.
இந்தக் கதையின் மையமாக விளங்குவது “பாண்டிமுனி” என்ற காளை. ஒரு கண்ணில் மட்டுமே பார்வை கொண்ட இந்த காளை, மரணத்தின் விளிம்பிலிருந்து தோல்வியறியா சாம்பியனாக உயர்வது போன்ற அதிசயமான பயணத்தை படம் பதிவு செய்கிறது.
வெற்றி என்பவரால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்படும் பாண்டிமுனி, ஒரு விலங்காக மட்டுமல்லாமல் பெருமை, பொறுமை மற்றும் அடையாளத்தின் உருவகமாக மாறுகிறது. மனிதன் மற்றும் காளை இடையேயான உறவு, நம்பிக்கை மற்றும் ஒற்றுமை ஆகியவை இந்தக் கதையின் முக்கிய அம்சங்களாக திகழ்கின்றன.
தமிழ்நாட்டின் கிராமப்புற பின்னணியில் அமைந்துள்ள இப்படம், மஞ்சு விரட்டின் பாரம்பரியத்தையும் பரபரப்பையும் உணர்ச்சிபூர்வமாக பதிவு செய்கிறது. ஒவ்வொரு போட்டியும், ஒவ்வொரு வெற்றியும் பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்தப் படத்தில் விமல், நட்ராஜ் சுப்பிரமணியம், பாலசரவணன், சனஷ்கா ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குனர் கேந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் டி. இமான் இசையில், உணர்ச்சி மற்றும் கலாச்சார ஆழம் இணைந்துள்ளது.
விமல் கூறுகையில்:
"இந்தப் படத்தில் காளையுடன், குறிப்பாக பாண்டிமுனியுடன் பணியாற்றியது எனக்கு முற்றிலும் புதிய அனுபவம். காலப்போக்கில் உண்மையான ஒரு பந்தம் உருவானது — அது நடிப்பு அல்ல, வாழ்ந்த அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு முடிந்த நாள் எனக்கு மிகவும் உணர்ச்சிகரமானது. இந்தப் படம் என் மனத்திற்கு மிகவும் நெருக்கமானது."
இயக்குனர் கேந்திரன் கூறுகையில்:
"‘வடம்’ உருவாக்கத்தின் நோக்கம், நமது கலாச்சாரத்தின் வேர்களை உண்மையாகச் சொல்லி, அதன் உணர்ச்சி பரிமாணத்தை வெளிப்படுத்துவதாகும். நடிகர்களையும் காளையையும் அந்த அளவிற்கு தயார்ப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால் அதுவே இந்தப் படத்தின் தனித்தன்மை."
நட்டி கூறுகையில்:
"‘வடம்’ எனக்கு மிகவும் நெருக்கமான படம். இது நமது கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் பிரதிபலிக்கும் ஒரு அனுபவம். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இப்போது சன் NXT மூலம் இதைப் பார்க்க முடிவது மகிழ்ச்சியான விஷயம்."
டி. இமான் கூறுகையில்:
"இந்தப் படத்தின் இயல்புத்தன்மை, இசைக்கும் ஒலிக்கும் ஒரு புதிய அணுகுமுறையை தேவைப்படுத்தியது. மஞ்சு விரட்டு என்பது பார்க்கப்படுவது மட்டும் அல்ல — அது உணரப்பட வேண்டியது. அந்த ஆற்றல், குழப்பம் மற்றும் புயலுக்கு முன் நிலவும் அமைதியை இசையில் பதிவு செய்வது சவாலாக இருந்தாலும் சுவாரஸ்யமாக இருந்தது."
‘வடம்’ படத்தின் உண்மைக்கு நெருக்கமான திரைக்கதையை அதனை வேறுபடுத்திக் காட்டுகிறது. அது கலாச்சாரத்தை நமக்கு அதன் வாழ்வியலோடு இயல்பாகக் காட்டுகிறது. பாண்டிமுனியின் உயர்வும், அதைச் சுற்றியுள்ள மனித உணர்ச்சிகளும், மஞ்சு விரட்டின் பாரம்பரியத்திற்கு ஒரு சக்திவாய்ந்த மரியாதையாக இந்தப் படம் திகழ்கிறது.

ஜெய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான “சட்டென்று மாறுது வானிலை” மூன்றாவது சிங்கிள்
நடிகர் ஜெய் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது புதிய திரைப்படமான “சட்டென்று மாறுது வானிலை” படக்குழு ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக மூன்றாவது சிங்கிள் பாடலை வெளியிட்டு கவனம் ஈர்த்துள்ளது. சமூக அக்கறையும் அரசியல் பின்னணியும் இணைந்த இந்தப் பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.
இந்தப் பாடல், மகாகவி சுப்பிரமணிய பாரதி எழுதிய புகழ்பெற்ற “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” என்ற வரிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன், மதுரை ராப் இசைக்குழு மதுரை சோல்ட்ஜர்ஸ் உடன் இணைந்து பாடலை உருவாக்கியுள்ளார். சமூக அவலங்களையும், தற்போதைய அரசியல் சூழலையும் ஆவேசமாக வெளிப்படுத்தும் இந்தப் பாடலை கிரிஷ் மற்றும் மதுரை சோல்ட்ஜர்ஸ் இணைந்து பாடியுள்ளனர்.
தேர்தல் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், சமூக விழிப்புணர்வை தூண்டும் நோக்கில் இந்தப் பாடல் வெளியிடப்பட்டிருப்பது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
BV Production நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் பாபு விஜய் இயக்கியுள்ள இப்படம், சமகால பிரச்சனைகளை பேசும் புதுமையான ரொமான்டிக் திரில்லராக உருவாகியுள்ளது. இதில் ஜெய் நாயகனாகவும், மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் யோகி பாபு, கருடா ராம், ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மனித வாழ்க்கையில் நிகழும் அதிர்வுகள், உணர்வுகள் மற்றும் சமூகத்தின் கடுமையான உண்மைகள் ஆகியவற்றை பிரதிபலிப்பதே இப்படத்தின் மையக் கருத்தாகும். நாட்டில் நடைபெறும் முக்கிய பிரச்சனைகளையும் இப்படம் தைரியமாக முன்வைக்கவுள்ளது.
இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளதுடன், ஒளிப்பதிவை ரிச்சர்ட் M நாதன் மேற்கொண்டுள்ளார். எடிட்டிங்கை டார்லிங் ரிச்சர்ட்சன் செய்துள்ளார்; கலை இயக்கத்தை எஸ். கண்ணன் கவனித்துள்ளார்.
முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தலுக்கு பிறகு, வரும் மே மாதத்தில் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!
பார்வதா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில், கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்கிய பள்ளி பருவ வாழ்க்கையை மையமாகக் கொண்ட ‘யூத்’ திரைப்படம் கடந்த மார்ச் 19ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் தற்போது ₹50 கோடி வசூலைத் தாண்டி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது.
திரையரங்குகளில் திருவிழாக்கோலமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வினில்…,
தயாரிப்பாளர் கருப்பையா சி. ராம் பேசியதாவது..,
“‘யூத்’ படம் எனக்கு முதல் படம் தான். ஆனாலும், அந்த முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ₹50 கோடி வசூல் என்பது ஒரு சாதனை தான். ஆனால் அதைவிட பெரிய சாதனை என்னவென்றால் — இந்த படத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு சென்று சேர்த்ததே. இன்று இந்த படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பது இன்னும் பெருமையாக இருக்கிறது.
இந்த படத்தின் பயணம் மிகவும் வேகமாக நடந்தது. நாங்கள் அதிகமாக யோசிக்காமல், தைரியமாக முடிவெடுத்தோம். பல சமயங்களில் அதிகமாக யோசித்தால் முடிவு எடுக்க முடியாது. ஆனால் தைரியமாக எடுத்த முடிவுகள் தான் இந்த வெற்றிக்கு காரணம்.
ஒரு காலத்தில் என்னிடம் இரண்டு ரூபாய் கூட இல்லாத நிலை இருந்தது. தேவையான போது அம்மாவிடம் ₹1000, ₹2000 கேட்டுக் கொண்டு வாழ்க்கையை நடத்தினேன். அந்த நிலையிலிருந்து இன்று இவ்வளவு பெரிய மேடையில் நிற்பது — இது என்னுடைய முயற்சி மட்டும் அல்ல, பலரின் ஆதரவு.
இந்த படத்தை உருவாக்க உதவிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த படம் உருவாக பலர் தங்கள் பங்களிப்பை செய்துள்ளனர். அந்த ஒவ்வொருவரின் ஆதரவும் இந்த வெற்றியின் காரணம்.
இந்த படத்தை பார்த்தவர்கள் மூன்று முறை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு அழுதார்கள். அந்த உணர்ச்சி தான் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். தமிழகத்தை தாண்டி கேரளா, கர்நாடகா, தெலுங்கு ஆகிய பகுதிகளிலும் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக தெலுங்கில் நம்மை யாரும் அறியாத நிலையில் கூட, நல்ல மார்க்கெட்டிங் மூலம் இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் — நம்பிக்கை. நாம் எதிர்பார்த்ததை விட அதிகமாக கிடைத்தது எல்லாம் கடவுளின் அருள்.
பலர் கேட்கிறார்கள் — ‘இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்த பிறகு அடுத்தது என்ன?’
எனக்கு வெற்றி என்பது தற்காலிகம். ஆனால் நன்றி உணர்வு என்றைக்கும் நிலைத்தது. அதனால் தான் இந்த நன்றி கூறும் விழாவை நடத்த வேண்டும் என்று நினைத்தேன்.
இந்த படம் வெளியான போது பெரிய படங்களுடன் போட்டி இருந்தது. இருந்தாலும், நல்ல படம் என்றால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் நானும் கென்னும் உறுதியாக இருந்தோம். அந்த நம்பிக்கை தான் இந்த வெற்றியை கொடுத்தது. கென் என்னுடன் ஆரம்பத்தில் எப்படி இருந்தாரோ அதே போல் தான் இப்படி இருக்கிறார். அவருக்கு நானும் ரசிகன் இன்று எல்லோரும் அவரை கொண்டாடுவது மகிழ்ச்சி.
இந்த சினிமா உலகில் புதிய இயக்குநர்கள் சந்திக்கும் சிரமங்களை நான் பார்த்திருக்கிறேன். ஒரு இயக்குநர் நல்ல மனநிலையுடன் இருந்தால் தான் நல்ல படம் உருவாகும். இயக்குநர்களுக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இனிமேல் எங்கள் நிறுவனத்தில் வரும் ஒவ்வொரு இயக்குநருக்கும் தயாரிப்பாளர் பதவி (Producer Credit) வழங்கப்படும். “ஒரு இயக்குநரின் கனவை நனவாக்க உதவும் தயாரிப்பாளராக இருக்க வேண்டும் — அதுதான் என் ஆசை. எங்கள் நிறுவனத்தில் தொடர்ந்து நல்ல படங்கள் செய்வோம் நன்றி.
நடிகை நளினி பேசியதாவது..,
எல்லாருக்கும் வணக்கம், இந்த வெற்றி விழாவில் உங்களை சந்திப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. எங்களை இங்கே கொண்டு வந்த தயாரிப்பாளர் கருப்பையா அவர்களுக்கு என் நன்றி. அவர் ஒருவரையும் மறக்காமல் நன்றி சொன்னது உண்மையிலேயே அவரது அர்ப்பணிப்பு. இப்படிப்பட்ட தயாரிப்பாளர்கள் இருந்தால் இந்த நிறுவனம் பெரிய உயரம் அடையும்.
சூரஜ் சார் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. அவருடைய உழைப்பும் தொழில்முறை அணுகுமுறையும் எனக்கு பெரிய பாடம். ஒரு சிறிய தவறும் விட்டுவைக்காமல் மீண்டும் மீண்டும் செய்வது அசத்தல். இந்த படத்தில் அவர் செய்த கதாபாத்திரம் வேறு லெவல். அவரை தவிர யாராலும் இப்படிச் செய்ய முடியாது. தேவதர்ஷினி அம்மா இந்த படத்தில் மிகவும் அழகாக நடித்திருக்கிறார். அவருக்கு இந்த வாய்ப்பு கொடுத்த கென்னுக்கு நன்றி. அந்த வாய்ப்பை அவர் மிக நேர்த்தியாக பயன்படுத்தியிருக்கிறார்.
இந்த படத்தில் நடித்த குழந்தைகள் எல்லோரும் அசத்தியிருக்கிறார்கள். அவர்களின் திறமை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். இயக்குநர் கென் மற்றும் அவருடைய குழு உண்மையிலேயே வேறு லெவல். ஒவ்வொருவரிடமும் சிறந்த நடிப்பை எடுத்திருக்கிறார்கள். கென் இந்தப்படத்திற்காக அத்தனை உழைத்திருக்கிறார். அவர் இன்னும் பெரிய உயரத்திற்கு செல்வார். இந்த “யூத்” படத்தில் வேலை செய்தது எனக்கு ஒரு புதிய energy கொடுத்தது. இந்த குழுவோடு இருந்த அனுபவம் எனக்கு மறக்க முடியாதது. இந்த சந்தோஷத்தை கொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
நடிகை தேவதர்ஷினி பேசியதாவது..,
எல்லாருக்கும் வணக்கம், இன்று ரொம்ப சந்தோஷமான நாள். இந்த வெற்றி விழாவில் நிற்பது ஒரு பெரிய மகிழ்ச்சி. முதலில் தயாரிப்பாளர் கருப்பையா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. ஒரு அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்து, இந்த படத்தை நம்பி தயாரிப்பாளராக மாறியது பெரிய விஷயம். ஒரு புது பையன் கையில் காசே இல்லாத நிலையில் இருந்தாலும், இந்த கதையை நம்பி படம் எடுத்ததற்கு நன்றி. எதையும் மாற்றாமல், அதே உண்மையோடு படத்தை கொண்டு வந்தது மிகப்பெரிய பலம். ஜி.வி. பிரகாஷ் மற்றும் அவருடைய குழுவுக்கு என் நன்றி. இந்த படத்தின் மியூசிக் எங்களுக்கு பெரிய நம்பிக்கை கொடுத்தது. விக்கி மற்றும் குழு எந்த சமரசமும் இல்லாமல் அழகாக ஒவ்வொரு காட்சியையும் உருவாக்கியிருக்கிறார்கள். இந்த படத்தை மிகவும் அழகாக எடிட் செய்திருக்கிறார்கள். ராமு மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் என் நன்றி.
சூரஜ் சார் ஒரு அற்புதமான நடிகர். அவருடன் வேலை செய்தது எனக்கு பெருமை.
அவருடைய அர்ப்பணிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. நளினி அம்மாவுடன் மீண்டும் வேலை செய்தது ஒரு அழகான அனுபவம். இந்த படத்தில் நடித்த குழந்தைகள் மற்றும் இளம் கலைஞர்கள் அனைவரும் அசத்தியிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் இந்த படத்தை இன்னும் சிறப்பாக்கியிருக்கிறார்கள். இந்த படம் எங்கள் எல்லாருக்கும் ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும். கென் இந்த படத்தில் பல பரிமாணங்களில் உழைத்திருக்கிறார். அவருடைய நேர்மை, அன்பு, மற்றும் நேர்மையான அணுகுமுறை மிகப்பெரியது. அவர் மிகப்பெரிய இடத்தை அடைவார். இந்த அழகான அனுபவத்தை கொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
நடிகை மீனாட்சி பேசியதாவது..,
எல்லாருக்கும் வணக்கம், முதலில் கடவுளுக்கும், என் அப்பா அம்மாவுக்கும் என் நன்றி. இந்த படத்தின் மூலம் எனக்கு கிடைத்த அன்பு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்று கேப் டிரைவர் கூட என்னை கேரக்டர் பெயரால் அழைத்தது எனக்கு பெருமையாக இருந்தது. அதுதான் இந்த படத்தின் உண்மையான வெற்றி என்று நான் நினைக்கிறேன். நான் பல வருடங்களாக நடித்து வந்தாலும், இப்படியான அடையாளம் கிடைத்தது இப்போது தான். அதற்கு காரணம் இந்த “யூத்” படம். கென், உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்பை கொடுத்த தயாரிப்பாளர் கருப்பையா அவர்களுக்கும் நன்றி.
இந்த படக்குழுவுடன் இருந்த அனுபவம் எனக்கு குடும்பம் கிடைத்த மாதிரி. சின்னா, ஈஸ்வர், டேனி, லோகேஷ் எல்லாரும் எனக்கு குடும்பமாகி விட்டார்கள். இந்த நட்புதான் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. 2023-ல் தொடங்கிய இந்த பயணம் இன்று வெற்றியாகியுள்ளது. அந்த நாள் முதல் இன்று வரை என்னை நம்பியதற்கு நன்றி. விக்கி அண்ணா, எங்களை அழகாக காட்டியதற்கு நன்றி. சூரஜ் சார், உங்களுடன் ஒரே படத்தில் இருந்தது எனக்கு பெருமை. சோனி, கேரன் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி. இந்த படத்தில் வேலை செய்த ஒவ்வொருவருக்கும் என் நன்றி.
பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் நன்றி. எங்களை ஆதரித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
நடிகர் சுராஜ் பேசியதாவது..,
எல்லாருக்கும் வணக்கம். இந்த படம் எனக்கு ஒரு பெரிய அனுபவத்தை கொடுத்தது. அதற்காக இயக்குநர் கென்னுக்கு என் மனமார்ந்த நன்றி. அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல, மிகத் தெளிவான இயக்குநர். அவருடைய தீவிரமும் அர்ப்பணிப்பும் தான் இந்த வெற்றியின் காரணம். இன்னும் பெரிய உயரங்களை அவர் அடைவார் என்று நம்புகிறேன். கென் மற்றும் அவருடைய குழுவுக்கு சிறப்பு நன்றி. இந்த படத்தில் வேலை செய்த அனுபவம் மிகவும் அழகான நினைவாக இருக்கும். தயாரிப்பாளர் கருப்பையா அவர்களுக்கு என் நன்றி. அவர் ஒரு பெரிய தயாரிப்பாளராக உயர்வார் என்று நம்புகிறேன். நளினி அம்மா, தேவதர்ஷினி அம்மா — உங்களுடன் வேலை செய்தது பெருமை. எனக்கு தமிழ் கற்றுக்கொள்ள உதவிய அனைவருக்கும் நன்றி.
இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். என் நண்பர்கள் மற்றும் சக நடிகர்களுக்கும் என் நன்றி. இந்த வாய்ப்பை எனக்கு அறிமுகப்படுத்திய நண்பருக்கும் நன்றி. இந்த படத்தை பார்த்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி. சிறப்பாக என்னை பாராட்டிய சிலம்பரசன் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தை வெற்றியாக்கிய ரசிகர்கள் அனைவருக்கும் என் நன்றி. மீடியா நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றி.
கென் கருணாஸ் பேசியதாவது..,
எல்லாருக்கும் வணக்கம், முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இன்றைய காலத்தில் ஒரு படம் வெளியானதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் கடினம். அதை நீங்கள் உங்கள் செய்திகளால் மக்களிடம் சேர்த்தது பெரிய உதவி. அதற்காக உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. எங்கள் மார்க்கெட்டிங் குழுவுக்கும் என் நன்றி. அனைவரும் சேர்ந்து இந்த படத்தை மக்களிடம் கொண்டு சென்றுள்ளீர்கள். முதலில் கடவுளுக்கும் என் நன்றி. அதற்குப் பிறகு என் அப்பா, அம்மாவுக்கும் என் நன்றி.
இந்த படத்தின் பயணத்தில் நான் பலருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். அதனால் தான் இந்த நன்றி விழாவை நடத்துகிறோம். இந்த பயணத்தில் என்னை ஆதரித்த ஒவ்வொருவருக்கும் என் நன்றி. ஜிஎஸ்ஆர் சார், உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்களுடைய உற்சாகமும் அர்ப்பணிப்பும் எங்களை மிகவும் ஊக்கப்படுத்தியது. ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட உங்கள் எனர்ஜி எப்போதும் வேற லெவலில் இருந்தது. அந்த நேர்மையான அணுகுமுறை எங்களுக்கு ஒரு பெரிய உதாரணம். இந்த படத்தில் உங்களுடன் வேலை செய்தது மகிழ்ச்சி. இந்த வெற்றிக்கு காரணமான ஒவ்வொருவருக்கும் என் நன்றி.
டேனி, லோகித், பிரின்ஸ், ஈஷ்வர், சின்னா — தயவு செய்து மேடைக்கு வாருங்கள்.
இவர்கள் இல்லாமல் நான் இன்று இந்த மேடையில் நிற்க முடியாது.
மொட்டை மாடியில் ஆரம்பித்த இந்த நட்பு — இன்று இங்கே வந்திருக்கிறது.
இந்த படத்திற்கும், இந்த பயணத்திற்கும் இவர்கள்தான் காரணம்.
உங்களுக்கெல்லாம் என் மனமார்ந்த நன்றி.
விக்கி அண்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றி. என்னுடைய உணர்வுகளையும் பயத்தையும் புரிந்து, என்னை எப்போதும் உற்சாகப்படுத்தினார். ஃபைட் மாஸ்டர் கலையாண்ணாவுக்கு என் நன்றி. தனது பிஸியான நேரத்திலும் சம்பளம் பார்க்காமல் வந்து எங்களுக்கு உதவினார். அது எங்களுக்கு மறக்க முடியாத உதவி. காவியா அக்காவுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த முழு பயணத்திலும் எனக்கு பெரிய ஆதரவாக இருந்தார். என் தோற்றத்திலிருந்து நம்பிக்கை வரை அனைத்திலும் உதவினார். விக்கி அண்ணா எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தார்.
ராமு சார், உங்களுடைய உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு எங்களுக்கு பெரிய பலம். நான் கேட்கும் ஒவ்வொரு விஷயத்தையும் மறுநாளே செய்து கொடுத்தீர்கள். நீங்கள் இல்லாமல் இந்த படம் இப்படியாக இருக்காது. இந்த படத்தில் நடித்த அனைத்து இன்ஃப்ளூயன்சர்களுக்கும் என் நன்றி. உங்களுடைய திறமை இந்த படத்தை மேலும் அழகாக்கியது. முகேஷ் அண்ணா, உங்கள் குரலுக்கு நான் பெரிய ரசிகன். நன்றி. என் மூன்று ஹீரோயின்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. என்னை நம்பி, முழு ஒத்துழைப்புடன் நடித்ததற்கு நன்றி.
முதலில் எங்கள் எடிட்டர் நாஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. அவருடைய கருத்துகளும் வழிகாட்டுதலும் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. அவருடைய உதவியாளர் ஹரிக்கும் என் நன்றி. ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக மாற்ற அவருடைய பங்களிப்பு அதிகம்.பிரவீன் ஆண்டனி, விக்னேஷ் ராஜா, வினோத் ஆகியோருக்கும் என் நன்றி. அவர்களுடைய ஊக்கமும் வழிகாட்டுதலும் இந்த படத்திற்கு முக்கியம். தமிழ் அண்ணா, உங்கள் நேர்மையான ஆலோசனைகளுக்கு நன்றி.
ஜி.வி. பிரகாஷ் அண்ணா, உங்கள் உதவியை நான் எப்போதும் மறக்க மாட்டேன். என்னுடன் நடித்த நண்பர்கள் பப்ளோ, சின்னா, ஈஷ்வர் — உங்களுக்கு நன்றி. நட்பு மற்றும் ஆதரவு இந்த பயணத்தில் மிக முக்கியம். நளினி மேம், உங்கள் நேர்மையான அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. நளினி மேடம் என் அம்மாவுக்கு பிறகு அதிகம் என்னை நம்பினார். தேவதர்ஷினி மேம், உங்கள் நம்பிக்கையும் ஒத்துழைப்பும் எங்களுக்கு பெரிய பலம். சூரஜ் சார், உங்கள் நடிப்பு இந்த படத்தின் முக்கியமான பலம். இந்த படத்தில் உழைத்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் கேட்ட அனைத்தையும் தந்து என்னை முழுமையாக நம்பி இப்படத்தை தயாரித்த கருப்பையா அண்ணாவுக்கு நன்றி.
‘யூத்’ திரைப்படத்தில் Anishma Anilkumar, Meenakshi Dinesh, Priyanshi Yadav ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். Devadarshini மற்றும் Suraj Venjaramoodu முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றியுள்ளனர்.
G. V. Prakash Kumar இசையமைத்துள்ள இப்படத்தின் ‘முட்ட கலக்கி’, ‘பறந்தனே பெண்ணே’ மற்றும் ‘ஆச புள்ள’ பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘யூத்’, தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ‘ஒவ்வொரு ஆண்டும் ஒரு நல்ல செயல்’ என்ற நோக்கத்தை முன்னெடுத்து செல்லும் வகையில், அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் (AAFA) சமூகப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், பெண்கள் நலன் மற்றும் பொதுச் சுகாதார விழிப்புணர்வை மையமாகக் கொண்டு HPV தடுப்பூசி இயக்கத்தை ரசிகர் மன்றம் தொடங்கியுள்ளது. நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளான ஏப்ரல் 8-ஐ முன்னிட்டு, வாரம் முழுவதும் கொண்டாட்டங்களை சமூகப் பொறுப்புடன் இணைத்து நடத்தும் முயற்சியாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
பெண்களை அதிகமாக பாதிக்கும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசியின் அவசியத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும். மேலும், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் வகையில் சுகாதார பழக்கங்களை ஊக்குவிக்கவும் ரசிகர் மன்றம் செயல்பட்டு வருகிறது.
‘நாளை நம் மகள்களை கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து காப்பாற்றவே இன்று ஒரு தடுப்பூசி’ என்ற வாசகத்துடன், குடும்பங்களிலும் சமூகத்திலும் இந்த விழிப்புணர்வு இயக்கம் வலியுறுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தடுப்பூசி முகாம்கள் மற்றும் பெண்களின் ஆரோக்கிய பாதுகாப்பை மேம்படுத்தும் பல்வேறு செயல்பாடுகளும் நடைபெற உள்ளன.
நேர்மறையான சமூக மாற்றத்திற்காக தனது செல்வாக்கை பயன்படுத்த வேண்டும் என்ற அல்லு அர்ஜுனின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில், இந்த HPV தடுப்பூசி இயக்கம் ரசிகர் மன்றத்தின் சமூகப்பணிக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!
புதுமையான கதை சொல்லல், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பிரம்மாண்ட காட்சியமைப்புகளால் இந்திய திரைப்படத் துறையில் தனித்துவமான இடத்தைப் பெற்ற தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கத்தனார்’ திரைப்படம் தற்போது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
நடிகர்கள் ஜெயசூர்யா, அனுஷ்கா ஷெட்டி மற்றும் பிரபுதேவா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. 2 நிமிடம் 49 விநாடிகள் ஓடும் இந்த டிரெய்லர், கண்கவர் காட்சிகள், மனதை மயக்கும் இசை, தெளிவான ஒலி வடிவமைப்பு மற்றும் நடிகர்களின் சிறந்த நடிப்பால் கவனம் ஈர்க்கிறது. பழங்கால பின்னணியில் உருவாகும் புதிய ஃபேன்டஸி உலகத்தை இப்படம் அழகாக சித்தரிக்கிறது.
‘ஹோம்’ திரைப்படத்தின் மூலம் பாராட்டுகளை பெற்ற இயக்குநர் ரோஜின் தாமஸ், இந்த படத்தையும் இயக்கியுள்ளார். ஆர். ரமானந்துடன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ள அவர், ‘கத்தனார்’ படம் ரசிகர்களுக்கு காலத்தைத் தாண்டும் ஒரு காவிய அனுபவமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 2026ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 15 மொழிகளில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
டிரெய்லர் வெளியானவுடன் விமர்சகர்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள ‘கத்தனார்’, வெளியீட்டுக்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது படக்குழுவினருக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது.
32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக தரமான படைப்புகளை வழங்கி வரும் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம், மீண்டும் ஒரு நினைவுகூரத்தக்க கூட்டணியை உருவாக்கியுள்ளது. தயாரிப்பாளர் T. G. தியாகராஜன் மற்றும் இசை மாமன்னன் இசைஞானி இளையராஜா, 32 ஆண்டுகளுக்கு பிறகு “லெனின் பாண்டியன்” திரைப்படத்தின் மூலம் மீண்டும் கைகோர்த்துள்ளனர்.
இந்த அறிவிப்பை ஒரு அழகான அனிமேஷன் வீடியோவின் மூலம் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், தியாகராஜன் மற்றும் இளையராஜா இருவரும் காரில் பயணம் செய்யும் போது, தங்களின் பழைய ஹிட் பாடல்களை கேட்டு நினைவுகளை பகிர்ந்து கொள்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த கூட்டணி தமிழ்சினிமாவில் ஏற்கனவே பல மறக்க முடியாத படைப்புகளை வழங்கியுள்ளது. குறிப்பாக மூன்றாம் பிறை, தங்க மகன், காக்கி சட்டை, பகல் நிலவு, காதல் பரிசு, கிழக்கு வாசல், பணக்காரன், இதயம், ஆனஸ்ட் ராஜ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து பணியாற்றி, கல்ட் கிளாசிக் படைப்புகளை உருவாக்கியுள்ளனர்.
இப்போது, அந்த வெற்றிகரமான கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் “லெனின் பாண்டியன்” திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் D. D. பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படம், கிராமத்து வாழ்க்கை மற்றும் சமூக உண்மைகளை மையமாகக் கொண்ட வலுவான கதையாக உருவாகியுள்ளது.
இந்த படத்தின் மூலம், நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் பேரன் தர்ஷன் நாயகனாக அறிமுகமாகிறார். காவல்துறையில் பணிபுரியும் இளைஞனாக அவர் நடித்துள்ளார். மேலும் கங்கை அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரோஜா அவரும் இப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிராமத்து பின்னணியில் சமூக அவலங்களை நேர்மையாக வெளிப்படுத்தும், உணர்ச்சிப்பூர்வமான கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது. செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை, சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பில் T.G. தியாகராஜன் வழங்குகிறார்.
தற்போது படத்தின் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், திரையரங்கு வெளியீட்டிற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில், பழைய வெற்றி கூட்டணி, புதிய தலைமுறை கதை மற்றும் சமூக பின்னணி ஆகிய மூன்றின் இணைப்பாக “லெனின் பாண்டியன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!
தமிழ் திரையுலகின் முன்னணி குணச்சித்திர நடிகரான அருள்தாஸ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரீயூனியன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சாட்ஸ் ரெக்ஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் அருள்தாஸ் முன்னணி வேடத்தில் நடித்துள்ளதுடன், ஜெயக்குமார், அனுபமா குமார், அகில் சந்தோஷ், பர்வீன், சுப்பிரமணியன், ஜெமினி மணி, சிவம், சேதுபதி ஜெயச்சந்திரன், கராத்தே ராஜா, சிலுமிசம் சிவா, குட்டி கோபி, ஹரிஷ், அருண் உதயன், சரத், க்ரிஷ் & அய்ஷூ, காக்காமுட்டை ரமேஷ், பூவையார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விக்கி மேக் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ராக்கி டிஜே இசையமைத்துள்ளார். முத்தமிழன் ராமு படத்தொகுப்பை கவனித்துள்ள நிலையில், கலை இயக்கத்தை வெங்கடேஷ் குமார் மேற்கொண்டுள்ளார். கேங்ஸ்டர் பின்னணியில் கமர்சியல் என்டர்டெய்னராக உருவாகி வரும் இப்படத்தை ஹஸ்லர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திக் ஜெயாஸ் தயாரித்துள்ளார்.
படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட டைட்டிலும் ஃபர்ஸ்ட் லுக்கும் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. குறிப்பாக அருள்தாஸின் வித்தியாசமான லுக் மற்றும் மற்ற கதாபாத்திரங்களின் தோற்றங்கள் படத்தின் கதை மீது ஆவலை தூண்டியுள்ளது.
‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்
லெஜெண்ட் சரவணன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு, படத்தின் இசை மற்றும் ஆக்ஷன் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு, படம் குறித்து தங்களது எதிர்பார்ப்புகளையும் அனுபவங்களையும் பகிர்ந்தனர். பாடலாசிரியர் விவேகா, படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் குறித்து பாராட்டுக்களை தெரிவித்ததுடன், லெஜெண்ட் சரவணனின் உழைப்பையும் வெற்றியின் ரகசியத்தையும் எடுத்துரைத்தார்.
பாடலாசிரியர் விவேகா பேசுகையில், "இந்த இசை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் உள்ள முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் ஒலித்தவுடன் எனக்கு உடல் எல்லாம் சிலிர்த்து விட்டது. இப்படத்தில் நான் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறேன், இரண்டும் அற்புதமான அனுபவங்கள். இப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்தவுடன் இது அனைவருக்குமான படமாக வரப்போகிறது என்பது தெரிகிறது.
லெஜெண்ட் சரவணன் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவர் பேசுவது வைரல் ஆகிறதா, இல்லையென்றால் வைரல் ஆவதை தான் அவர் பேசுகிறாரா என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது அவரிடம் நீங்கள் வியாபாரத்தின் உச்சத்தில் இருப்பதன் காரணம் என்ன என்று கேட்டபோது "எங்க அப்பா ஒன்னு சொல்லி இருக்கிறார், எல்லோருக்கும் முன்னாடி கடைக்கு செல்ல வேண்டும், எல்லோருக்கும் பின்னாடி கடையை விட்டு வெளியில் வரவேண்டும் என்று சொல்லி இருக்கிறார், அதை நான் பின்பற்றுகிறேன், அதுதான் என்னுடைய வெற்றிக்கு காரணம்," என்றார். இதுதான் வியாபார உலகின் பைபிள். அந்த கருத்தை அவர் சொன்னதும் மிகப் பெரிய அளவில் வைரலானது. அது தான் அவர் வெற்றியின் ரகசியம், இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற என் வாழ்த்துகள்," என்றார்.
பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், "நான் இன்று இந்த மேடையில் நிற்கிறேன் என்றால் அதற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் இயக்குநர் துரை செந்தில்குமார் தான் முதன்மையான காரணம். இந்த திரைப்படத்தில் அப்பா-பொண்ணு சம்பந்தப்பட்ட ஒரு பாடலை எழுதி இருக்கிறேன். நான்கு பேர் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிற, நினைக்கும் ஒவ்வொருவரும் லீடர் தான். ஏற்கனவே லெஜெண்ட் சரவணன் நிஜமான லீடர் தான். நீங்கள் ரியலாக ஒரு லீடராக இருந்து கொண்டு. திரையிலும் லீடராக நீங்கள் தோன்றுவதை நாங்கள் வரவேற்கிறோம், எங்களுக்கு பெருமிதமாக இருக்கிறது.
நடிகை அறந்தாங்கி நிஷா பேசுகையில், "லீடர் என்கிற வார்த்தை யாருக்கு பொருந்தும் என்றால் எப்போதும் தன்னை மட்டுமே பெருமிதமாக பெருமைப்படுத்தி கொள்ளாமல் உடன் இருக்கும் அனைவரையும் பெருமைப்படுத்தும் மனிதர்கள் தான் லீடர். நான் எப்போது லெஜெண்ட் சரவணனின் கடைக்கு சென்றாலும் எங்களை அமர வைத்து "நிறைய படங்களில் நடிக்க வேண்டும், நன்றாக நடிக்க வேண்டும், நிறைய மேடைகளில் உங்களை பார்க்க வேண்டும்" என்று ஒவ்வொரு முறையும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். நிறைய கலைஞர்களை எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பவர் லெஜெண்ட் சரவணன் ஐயா அவர்கள்.
இந்தப் படம் வெளியான பிறகு ஆறு மாதம் வரை சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு செல்ல முடியாது. ஏனெனில் இந்தப் படத்தில் அவரை திட்டுவது போன்ற காட்சியில் நடித்திருக்கிறேன். அதை நானாக சொல்லவில்லை இயக்குநர் எழுதிக் கொடுத்ததை தான் பேசி நடித்தேன். இந்தப் படத்தில் என்னுடைய கணவரும் நடித்திருக்கிறார். வீட்டில் எப்படி அமைதியாக இருப்பாரோ அதேபோல் படத்திலும் அமைதியாக இருக்கிறார்.
பேபி இயல் பேசுகையில், "இப்படத்தில் நான் சிரித்தேன், அழுதேன், கோபமாக இருந்தேன், சென்டிமென்ட் காட்சிகள் எல்லாம் இருந்தது. இதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷ் எங்கள் அப்பா நடித்த 'டிக் டிக் டிக்' படத்தில் பணியாற்றியவர். அவரைப் பற்றி என் அப்பா லக்கி கேமராமேன் என சொல்லிக் கொண்டே இருப்பார். அவருடைய ஒளிப்பதிவில் நடித்ததால் நான் என்னை லக்கியாக ஃபீல் செய்கிறேன்.
நடிகர் ஷாம் பேசுகையில், "கருடன் படத்தை பார்த்த பிறகு என் நண்பர்களிடம் இந்தப் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் படத்தில் நடிக்க வேண்டும் என்ற என் ஆசையை பகிர்ந்து கொண்டேன். அந்தப் படத்தில் எல்லா கேரக்டர்களையும் அவர் சரியாக கையாண்டிருக்கிறார் இதை சொன்ன சில நாட்களில் இயக்குநர் துரை செந்தில் குமாரிடமிருந்து அழைப்பு வந்தது, பிறகு சந்திப்பு நடந்தது. அவரிடம் நான் கதையைக் கேட்கவில்லை, ஏனென்றால் தமிழ் சினிமாவில் மிகவும் பொறுப்புணர்ச்சி மிக்க இயக்குநர் அவர். அவர் இயக்கியிருக்கும் அனைத்து படங்களிலும் ஒரு கமர்ஷியல் வேல்யூவும் இருக்கும், அழகான மெசேஜும் இருக்கும் சினிமா பிளாட்பார்மை மிக தரமாக பயன்படுத்திக் கொள்பவர்களில் துரை செந்தில்குமார் முக்கியமானவர்.
இந்தப் படத்திற்காக டப்பிங் பேசும்போது எல்லா கேரக்டருக்கும் அவரே டப்பிங் பேசி வைத்திருந்தார். இதுதான் எனக்கு வேண்டும் என்பதில் அவ்வளவு தெளிவாக இருந்தார். இதை இங்கு யாரும் செய்ய மாட்டார்கள்.
எல்லோரும் லெஜெண்ட் சரவணனின் மற்றொரு முகத்தை பார்த்திருக்க மாட்டார்கள், படப்பிடிப்பு தளத்தில் நான் அவருடன் பணியாற்றிய காட்சிகளில் அவரின் சிறந்த நகைச்சுவை உணர்வு கலந்த பேச்சை கேட்டு ரசித்திருக்கிறேன். வாழ்க்கையைப் பற்றிய பெரிய கண்ணோட்டத்தை அவர் எப்போதும் வைத்திருக்கிறார். அதை அவர் தொடர்ந்து பின்பற்றுகிறார். அவருக்கு இது இரண்டாவது படம், நிச்சயமாக அவர் சினிமாவில் தொடர்ந்து இருப்பார், நிறைய படங்களில் நடிப்பார். அவருடைய தயாரிப்பு மூலம் நிறைய இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அவரைப் போன்றதொரு தொலைநோக்கு பார்வை கொண்ட ஒருவர் தமிழ் சினிமாவுக்கு அவசியம் தேவை," என்றார்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா பேசுகையில், "முதலில் இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கும், என்னுடன் உழைத்த அனைத்து குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். குறிப்பாக, இந்தப் படத்திற்காக இரவு பகலாக உழைத்து, பல நாட்கள் தூக்கமே இல்லாமல் பாடுபட்ட படக்குழுவினர் அனைவருக்கும் நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இந்தப் படத்தில் பாடல்கள் உருவாக்குவது மிகவும் சவாலானதாக இருந்தது. ஆனால் அதேநேரத்தில், ஒரு பெரிய திருப்தியையும் கொடுத்தது. ஒவ்வொரு பாடலும், பின்னணி இசையும் மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட்டது. குறிப்பாக, இயக்குநர் துரை செந்தில்குமார் சார் எப்போதும் சிறிய சிறிய விஷயங்களையும் கவனித்து, தேவையான மாற்றங்களைச் சொல்லி, அந்தப் பாடல்களை இன்னும் சிறப்பாக மாற்றினார். ஒரு சிறிய BGM மாற்றம் கூட எவ்வளவு பெரிய பலன் தரும் என்று இந்தப்படத்தில் நான் தெரிந்து கொண்டேன். துரை சார் பற்றி சொல்லவேண்டுமெனில், அவர் மிகவும் அமைதியானவர், ஆனால் மிகவும் தீவிரமாக வேலை பார்க்கும் ஒரு இயக்குநர். அவர் குழுவை முன்னேற்றும் விதமும், ஒவ்வொரு விஷயத்தையும் சீராக செய்து முடிப்பதும் அவருடைய மிகப்பெரிய பலம். இப்படிப்பட்ட இயக்குநர்களுடன் வேலை செய்வது எங்களுக்கு ஒரு பெரிய அனுபவம்.
லெஜண்ட் சரவணன் சார் பற்றி எல்லோரும் பல விஷயங்கள் சொன்னார்கள். இந்தப் படத்தின் மூலம் அவர் ஒரு புதிய முகத்தை காட்டியிருக்கிறார். ஒரு தயாரிப்பாளர் அல்லது வணிகராக மட்டும் அல்லாமல், முழுமையான அர்ப்பணிப்புடன் உழைக்கும் ஒரு நடிகராக அவர் இந்தப் படத்தில் தன்னை நிரூபித்திருக்கிறார். இந்தப்படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய ஹீரோவை அறிமுகப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். 'லீடர்' எனக்கு மிகவும் முக்கியமான படம். இந்தப் படத்தில் நான் செய்த வேலை எனக்கு ஒரு தனி திருப்தியை கொடுத்துள்ளது. இந்தப்படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படக்குழுவில் இருந்த அனைத்து நடிகர்களுக்கும், தொழில்நுட்பகலைஞர்களுக்கும் என் நன்றிகள். 'லீடர்' படம் கண்டிப்பாக ஒரு பெரிய வெற்றி பெறும். அனைவரும் திரையரங்கில்சென்று பார்த்து ஆதரிக்க வேண்டும், நன்றி," என்றார்.
இயக்குநர் துரை செந்தில் குமார் பேசுகையில், “லீடர் எனது ஆறாவது படம். என்னுடன் பணியாற்றிய என் குழுவினர் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி. கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களின் கடின உழைப்பே இந்தப் படத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. வசனங்களில் உதவிய அருண், நடிப்பு பயிற்சியாளர் ராஜேஷ் – உங்களுக்கும் என் நன்றி. இந்தக் குழுவின் ஆதரவு இல்லாமல் இந்தப் படத்தை நான் உருவாக்கியிருக்க முடியாது.
முதலில் இசையமைப்பாளர் ஜிப்ரான் சார் பற்றி சொல்ல வேண்டும். இந்தத் திரைப்படம் ஆரம்பித்தவுடன் நாங்கள் நினைத்த பெயர் ஜிப்ரான் சார் தான். அவருடன் பணியாற்றியது ஒரு தெய்வீகமான அனுபவமாக இருந்தது. சில நேரங்களில் நான் அவருக்கு அழைக்க நினைக்கும் தருணத்திலேயே அவர் என்னை தொடர்பு கொள்வார். எங்களுக்குள் ஒரு ஆன்மீக இணைப்பு போல இருந்தது.
ஒரு ஆக்ஷன் காட்சிக்கு சக்திவாய்ந்த முருகன் பாடல் தேவை என்று நினைத்தேன். நான் ஒரு குறிப்பை காட்டியபோது, அது ஏற்கனவே ஜிப்ரான் சார் உருவாக்கிய ஆன்மிக இசை என்று தெரிய வந்தது. அந்த மாதிரி ஒரு அதிசய ஒத்திசைவு இந்தப் படமெங்கும் இருந்தது. இந்தப் படத்தின் உயர்வுக்கு அவருடைய இசை மிகப் பெரிய காரணம், மிகவும் நன்றி சார்.
என்னுடைய நண்பர்களான ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் மற்றும் கலை இயக்குநர் துரைராஜ் இந்தப் படத்திற்கு 200 சதவீதம் உழைத்துள்ளனர். நல்ல நண்பர்கள் கிடைப்பது ஒரு வரம். கருத்து கேட்கும் போது நேர்மையான பதிலை வழங்குவார்கள் – அது மிகவும் முக்கியம். எடிட்டர் பிரவீன் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் மகேஷ் மாத்யூ – உங்களுக்கும் என் நன்றி. இயக்குநரின் பார்வையை முழுமையாக புரிந்து கொண்டு அதை திரையில் கொண்டு வரும் கலைஞர்கள் மிகவும் அரிது. அந்த வகையில் நீங்கள் இருவரும் எனக்கு மிகப் பெரிய ஆதரவாக இருந்தீர்கள். பிரவீன் என் எண்ணங்களை திரையில் அழகாக வெளிப்படுத்தினார்.
இறுதியாக… லெஜெண்ட் சார். இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பு நான் பல சிரமங்களை சந்தித்தேன். பல கதைகள் இருந்தும் அது படமாக மாறவில்லை. அந்த நேரத்தில் தான் லெஜெண்ட் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே நேரத்தில் 'கருடன்' வாய்ப்பும் வந்தது. நான் ஒரு திரைப்படத்தை முடித்து விட்டு வருகிறேன் என்று சொன்னபோது, “நான் உங்களுக்காக காத்திருக்கிறேன், இந்தப் படத்தை நாம்தான் செய்யப் போகிறோம்” என்று அவர் கூறினார். அந்த நம்பிக்கையே இந்தப் படத்தின் அடித்தளம். அவரின் ஆற்றல் பற்றி சொல்ல வேண்டும் என்றால் – அது ஒரு துப்பாக்கியிலிருந்து பாயும் குண்டு போல இருக்கும். எந்த நேரத்திலும் அதே உற்சாகம். நேரத்திற்கு முன்பே வந்துவிடுவார்.
“நமக்காக நூறு பேர் வேலை செய்கிறார்கள்; நாம் தாமதிக்கக் கூடாது” என்று அவர் சொல்வார். அது எனக்கு ஒரு பெரிய பாடமாக இருந்தது. மகாபாரதத்தில் அர்ஜுனன் பறவையின் கண் மட்டுமே பார்க்கிறான் என்று சொல்வார்கள். அதுபோல வெற்றி மட்டுமே அவரின் இலக்கு. அவரின் ஆற்றல் ஒரு தீ போல. அந்த ஆற்றலை அவர் தனது ரசிகர்களிடமும் பரப்பியிருக்கிறார். அனைவருக்கும் இப்படம் கண்டிப்பாக பிடிக்கும், நன்றி," என்றார்.
லெஜெண்ட் சரவணன் பேசுகையில், "இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ஆகியோருக்கு நன்றி. இன்றைய சூழலில் போர் மேகங்கள் சூழ்ந்து மக்களுக்கு ஒரு பாதுகாப்பாற்ற தன்மை நிலவிக் கொண்டிருக்கிறது இந்தப் போர் விரைவில் நிறுத்தப்பட்டு மக்கள் அனைவரும் மீண்டும் மகிழ்ச்சியாக சந்தோஷமான, பாதுகாப்பான, ஒரு அன்பான வாழ்க்கையை வாழ உங்களுடன் சேர்ந்து இறைவனிடம் நானும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
'லெஜெண்ட்' படத்திற்குப் பிறகு என்னுடைய இரண்டாவது படம் 'லீடர்'. இப்படம் வரும் ஏப்ரல் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் கதை என்னவென்றால் ஒரு அப்பாவியான அப்பாவும் பிள்ளையும், மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திடீரென்று அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய கேங்ஸ்டர் கும்பல் ஒன்று நுழைகிறது, அதற்கு பிறகு நடக்கும் விஷயங்களை இயக்குநர் துரை செந்தில்குமார் இன்றைய இளைய தலைமுறையினருக்கு பிடிக்கும் வகையில் நேர்த்தியாகவும், அழகாகவும் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அவர் தன்னை முழுதாக அர்ப்பணித்துக் கொண்டார். எவர் ஒருவர் வேலையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு வேலை செய்கிறார்களோ அந்த வேலை அற்புதமாக அமையும், இந்த படமும் மிகப் பிரம்மாண்டமாக இருக்கிறது.
இந்த படத்தில் குத்துப் பாடல்கள் கிடையாது. ஆனால் இந்த படத்தில் கதையுடன் பயணப்படுவது போல் பாடல்கள் இருக்கின்றன, அதற்கான வரிகளும் இருக்கின்றன. இசையமைப்பாளர் ஜிப்ரான் மிகப் பிரமாதமாக இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, ஜெய்ப்பூர், ஊட்டி, தூத்துக்குடி, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை ஒரு டிரெயினில் படமாக்கிக் கொண்டிருந்தோம். குறுகலான இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சண்டை கலைஞர்களுடனும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுடனும் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது என்னுடைய தயாரிப்பு நிர்வாகியை அழைத்து இங்கு எத்தனை ஆம்புலன்ஸ் இருக்கிறது என்று கேட்டேன், ஒன்றுதான் என்றார். உடனடியாக மேலும் இரண்டு அல்லது மூன்று ஆம்புலன்ஸ்களை வரவையுங்கள், ஏனென்றால் இங்கு யாருக்கு எப்படி எங்கு அடிப்படும் என்று தெரியவில்லை. எனக்கு கூட அடிபடலாம் அதனால் தயாராக இருக்க வேண்டும் என்று சொன்னேன், ஆனால் கடவுள் அருளால் அந்த கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் யாருக்கும் பெரிதாக அடிபடவில்லை. பத்தாவது நாளில் எனக்கு காலில் லேசாக அடிபட்டது, தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தலாமா, வேண்டாமா, என்ற நிலை ஏற்பட்டது. என்னுடன் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை மனதில் வைத்து அவர்களை காத்திருக்க வைக்க வேண்டாம், கூடாது என்பதற்காக உடனடியாக முதலுதவி நிவாரண சிகிச்சையை எடுத்துக்கொண்டு படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்து கொண்டேன். இதற்கான ஆற்றல் கடவுளின் ஆசீர்வாதத்தாலும் இயக்குநர் உள்ளிட்ட குழுவினர் கொடுத்த உற்சாகத்தாலும் வந்தது. இதற்காக அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
- உலக செய்திகள்
- |
- சினிமா













